Saturday, May 25, 2013

சூது கவ்வும் திரைவிமர்சனம் (Soodhu Kavvum movie review)

அன்புள்ள நண்பர்களே!!


வணக்கம். 


சமீபகாலமாக நமக்கு நிறைய வித்தியாசமான படங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதுவும் குறைந்த முதலீட்டில், புது முகங்களை வைத்து எடுப்பது மிகவும் சிறப்பு. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் மிகவும் வித்தியாசமாகவும், நகைச்சுவையை கலந்தும் கொடுப்பது. அதே வரிசையில் நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் சூது கவ்வும்.


தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணம் போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இவர். அதைப் போலவே இந்த படத்திலும் தன் இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். 


சரி வாங்க படத்தை பார்க்கலாம் . இந்த படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான். தாஸ் (விஜய் சேதுபதி) பொதுவாக கடத்தல் தொழில் செய்பவர். ஆனால் கொள்கையோடு சின்ன சின்ன கடத்தல் செய்பவர். அது என்னவென்றால் ஐந்து கொள்கைகளை வைத்துக் கொண்டு அதை மீறாமல் கடத்த வேண்டும் என்று எண்ணுபவர். அவருடன் காதலியாக பயணிக்கிறார் சஞ்சிதா ரெட்டி. மூன்று நண்பர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒரு சண்டையில் தாஸ் உடன் சேர்கிறார்கள். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஒரு மந்திரியின் மகனைக் கடத்த திட்டமிடுகிறார்கள். அதனால் இவர்களுக்கு பெரும் லாபம் இரண்டு கோடி கிடைக்கும் என்று தோன்றுவதால். ஏற்கெனவே அரசியல்வாதிக்கும், மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் மகன் தானே தன்னை கடத்த திட்டமிடுகிறான். இவர்களும் அதே நாளில் திட்டமிடுகிறார்கள். எப்படியோ கடத்தியும் விடுகிறார்கள். மகனும் இதற்க்கு கூட்டாக இருப்பதால் 50% என்று பிரித்துக் கொள்வதாக முடிவு செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதியோ இவர்கள் கேட்கும் தொகைக்கும், பேச்சுக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. நான் போலிஸ் மூலம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார். முடிவு என்ன ஆனது? பணம் கிடைத்ததா? இருவரும் பகிர்ந்து கொண்டார்களா? இல்லை காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார்களா? என்பதுதான் மீதிக்கதை.




கதையின் மிகப் பெரிய பலம் நகைச்சுவைதாங்க. ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் நகைச்சுவையை சேர்த்திருப்பது மிகவும் ருசிக்கிறது. தாஸின் கொள்கைகளையும், அவன் செய்யும் சின்ன கடத்தலையும் காட்டுவது மிகவும் ரசிப்பு. கடத்தி முடித்து விட்டு பணம் கைக்கு வந்ததும், டிப்ஷ் கொடுத்து அனுப்புவது இதுவரை பார்க்காத ஒரு காட்சி. சஞ்சிதா ரெட்டியை ஒரு கற்பனை காதலியாக காட்டி இருக்கிறார்கள். அவரும் அவருடைய பங்கை தெளிவாக செய்திருக்கிறார்.இவரை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் காட்சி மிகவும் இனிமை. அரசியல் வாதியாக பாஸ்கரும், அவருடைய மகனாக அருமை பிரகாசமும் நடித்திருக்கிறார்கள். அருமை பிரகாசம், தன்னுடைய அப்பாவிடம் எப்படி பணம் வாங்குவது என்பதை அவர் செயல்படுத்தும் காட்சி அனைவரிடமும் சிரிப்பை ஏற்படுத்தும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களை பிடிப்பதற்க்காக வரும் காவல்துறை அதிகாரி பிரம்மா சொல்லவே வேணாங்க அவ்வளவும் சுவாரஸ்யம் மிகுந்த பகுதிகள். ராதா ரவி ஓரிரு காட்சியில் மட்டுமே வந்தாலும் மிகவும் கணம்.


இப்படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் நலன் குமாரசுவாமி. இவர் நாளைய இயக்குனர் மூலம் அறிமுகமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தின் மூலம் நல்ல முத்திரையை பதித்து விட்டார் என்று நம்பலாம். இசை சந்தோஷ் நாராயணன். 


நிச்சயமாக பாராட்டவேண்டிய விஷயம் நகைசுவை, குத்துப்பாட்டு மற்றும் டூயட் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் கொடுத்திருப்பது.


வசனங்கள் உதாரணத்திற்க்கு இது இட்லின்னு சொன்னா, சட்னிக் கூட நம்பாது, சென்னைக்கு என்ன பண்ணலாம்ன்னு திட்டம் போட்டு வந்தவன் சாதிக்கல, என்னப் பண்ண போறோம்ன்னே தெரியாம வந்தவங்கதான் ஜெயிச்சிருக்காங்க போன்றவை மிகவும் சிறப்பு.


ஆரம்பக் காட்சிகளில் அடிக்கடி டாஸ் மார்க்கை காட்டி தண்ணி அடிக்க வைப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.


அதிகமான முதலீடு இல்லை, அனைவரும் புது முகங்கள், வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்பு. நிச்சயம் பாராட்டலாம்.


நீங்களும் உங்கள் கருத்தை சொல்லுங்களேன்?


மீண்டும் சந்திக்கலாமா?


வணக்கம். வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!

Saturday, May 04, 2013

எதிர்நீச்சல் திரைவிமர்சனம் ( Ethir Neetchal Movie Review)


  எதிர்நீச்சல் திரைவிமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!

    வணக்கம். நலம்தானே?  மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. எதிர்நீச்சல் என்ற ஒரு படம் K பாலசந்தர் அவர்களால் இயக்கப்பட்ட ஒரு படம். அருமையான வரவேற்ப்பை பெற்று இன்றும் நீங்கா இடம் பெற்ற படம் என்றால் அது மிகையல்ல. எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத அந்த படத்தின் புது வடிவமாக இருக்குமோ என்றால் அதுதாங்க இல்லை. இது ஒரு புது நீச்சல்.ஆனால் எதிர்நீச்சல் :) .சரி வாங்க படத்துல நீந்தலாம், மன்னிக்கவும் அலசலாம் :).

  காலம் காலமாகவே பெயர் வைக்கும் முறையில் உள்ள ஒரு பழக்கம் முன்னோர்களின் பெயர்களையோ அல்லது குல தெய்வத்தின் பெயரை வைப்பதோ பல குடும்பங்களில் உள்ள முறை. அந்த மாதிரி பெயர்களை வைப்பதால் இந்த தலைமுறை கொஞ்சம் கஷ்டங்களை சந்திக்கத்தான் செய்கிறது. அதுவும் பெயர் சுருக்கமும் அதிகமாக உள்ளதால், பெருங்கஷ்டம்தான். அந்த மாதிரி ஒரு பெயராலும், பெயர் சுருக்கத்தாலும் நம் கதாநாயகன் அடையும் கஷ்டமும், பெயரில் ஒன்றுமே இல்லை எல்லாம் நாம் செய்யும் செயலில்தான் இருக்கிறது என்ற கருத்தையும் சும்மா நச்சுன்னு சொல்லும் படம்தாங்க எதிர்நீச்சல்.

 குஞ்சுதபாதம் ( சிவகார்த்திகேயன்) சிறு வயது முதலே இந்த பெயரால் பல அவமானங்களை அடைகிறார். நண்பர்கள் இவரை குஞ்சி என்று செல்லப்பெயரோடு வேறு கூப்பிட கூச்சம் பிடுங்கி தின்கிறது.இதனால் இந்த பெயரை மாற்றினால்தான் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடிக்கிறான். ஆனால் அம்மாவுக்கு உடல் நலக் குறைவு வருவதால் பெயரை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் இவர் படும் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகிறார். பின்னாளில் தாயார் இறந்ததும் பெயர் மாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார். இவர் பெயர் மாற்றம்(ஹரிஷ்) செய்த உடனே கீதா(ப்ரியா ஆனந்த்) என்ற பெண்ணை சந்திக்கிறார். காதலிலும் விழுகிறார்(காதல் குளம் இல்லாமலா நீச்சல் :))

   இவரின் பழைய பெயரை மறைத்து இவர் அவரை காதலிக்கிறார். அது பின்னாளில் தெரிய வர ஏதாவது செய்து உன் திறமையை இந்த உலகிற்க்கு புரிய வை என்று சொல்லிவிடுகிறார். அதனால் தன் பழைய திறமைகளை தூசு தட்டி தன்னை மாரத்தானில் ஐக்கிய படுத்திக் கொள்கிறார். அங்கே இவருக்கு வழிகாட்டியாக வருகிறார் வள்ளி(நந்திதா). சிறந்த வீராங்கனையான இவர் ஊதுபத்தி விற்று பிழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த விளையாட்டிற்க்கும், வீரர்களின் திறமைக்கும் பின்னாள் என்ன என்ன சதி வேலைகள் நடக்கிறது போன்றவை இவரது பின்கதையில் கணமாக காண்பிக்கப்படுகிறது.

 சிவகார்த்திகேயனுக்கு இது மீண்டும் ஒரு நல்ல வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். காதலில் வழிவதிலும் சரி, தன் பெயரால் படும் தர்மசங்கடமும் சரி, பின்பாதியில் வென்று காட்ட வேண்டும் என்று வெறி கொள்வதிலும் சரி தேர்ச்சி தெரிகிறது.  எழுதி இயக்கி இருப்பவர்  துரை செந்தில்குமார். படம் முழுவதிலும் நிறம்பி வழியும் நகைச்சுவையும், ஒரு கருத்தோடு கதை சொன்ன விதமும் நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. ஆனால் தேவையே இல்லாமல் தனுசும், நயன்தாராவும் ஆடிப்பாடுவது கொஞ்சம் ஒட்டவில்லை. இதை தவிர்த்திருக்கலாம்.

 தன் பெயரை மாற்றிக் கொள்ள முடிவெடுக்கும் பொழுது ஒரு ஜோசியரை(மனோபாலா) சந்திக்கும் இடத்தில், நல்ல கலகலப்பு. இங்கே சுவாமிநாதனை சந்திக்கிறார். இவரும் தன்னுடைய பெயர்(பாவாடை சாமி) புலம்பலை சொல்ல, அப்படி ஒரு சிரிப்புதான் போங்க :)


 கதாநாயகியாக பிரியா ஆனந்த். LIC agent இருக்கேன் நீங்க ஒரு பாலிசி போடுங்களேன் என்று சொல்லும் பொழுதும், அவருடன் ஆடிப்பாடும் பொழுதும் கொஞ்சமும் குறையாமல் தன் பங்கை செய்திருக்கிறார்.

 கோச்சாக வரும் நந்திதா, அழுத்தமும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கும் துணிவும் நிச்சயம் ஒரு ஓ போடலாங்க. அழுத்தமான மிகவும் கணமான கதாபாத்திரம் மிகவும் உணர்ந்து செய்திருக்கிறார்.



Directed byR. S. Durai Senthilkumar
Produced byDhanush
Written byR. S. Durai Senthilkumar
Screenplay byR. S. Durai Senthilkumar
Story byR. S. Durai Senthilkumar
StarringSivakarthikeyan
Priya Anand
Nandita
Music byAnirudh Ravichander
CinematographyVelraj
Editing byKishore Te.

சதிஷ், மனோபாலா, ஜெயபிரகாஷ், ரவி பிரகாஷ், மதன்பாப் மற்றும் பலர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள். இசை அனிருத். பாடல்களுக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள். தயாரிப்பு தனுஷ் அவர்கள்.

எப்பொழுதுமே மனிதன் வெற்றி பெருவதைத்தான் விரும்புவான். அதுவும் விளையாட்டில் வெற்றி என்றால் அனைவரும் விரும்புவோம். அந்த யுக்தியை இங்கே பயன்படுத்திய விதமும், காசும் பணமும் இருந்தால் திறமை உள்ளவன் பின் தள்ளப்படுகிறான் என்ற செய்தியும், பெயரில் மட்டும் இல்லை உன் பயணம், உன் செயலிலும் இருக்கிறது என்ற ஒரு பெரும் உண்மையும் சொல்லும் படம். எதிர் நீச்சல் , கண்டிப்பாக கரையேற்றம்.

மீண்டும் சந்திப்போமா?

நன்றி!! வணக்கம்!!
வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன் !!
















 

Wednesday, April 24, 2013

கௌரவம் திரைவிமர்சனம்




அன்புள்ள நண்பர்களே,

    வணக்கம். நலம்தானே? நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு நெஞ்சைத் தொட்ட படம் :)

கௌரவம். இந்தப் படம் வருவதற்க்கு முன்பே பெரும் தாக்கத்தை நிறைய் இடங்களில் ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. நடித்து, தயாரித்து வழங்கி இருப்பவர் திரு பிரகாஷ்ராஜ் அவர்கள். இப்படத்தை இயக்கி இருப்பவர் திரு ராதாமோகன் அவர்கள்.

  அர்ஜுன் (அல்லு சிரிஷ், இவர் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனாவின் தம்பி) ஒரு தொழில் விஷயமாக தமிழகத்தின் ஒரு மாநிலத்திற்க்கு வருகிறார். எதிர்பாராத விதமாக அவருடைய விமானம் காலதாமததிற்க்கு உள்ளாகிறது. அவருடன் படித்த நண்பன் கிராமம் அருகில் இருப்பதால் சென்று பார்த்துவிட்டு வர நினைக்கிறார். அங்கே அவர் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்களும், அவர்களுடைய அணுகுமுறையும், இன்னும் தொடரும் தனித் தனியே இருக்கும் டீ குடிக்கும் டம்ளரும் அவரை வரவேற்கின்றன. இதனால் சுவாரஷ்யம் இருந்தாலும்
தன்னுடைய நண்பர் பெயரை சொல்லி விசாரிக்கிறார். அவரை வித்தியாசமாக பார்க்கும் டீக்கடை மனிதர்கள், இங்கெல்லாம் நான்கு பக்கமும் சுடுகாடு தம்பி என்று விரட்டி விடுகிறார். இதை பார்த்துக் கொண்டிருக்கும் மாசி என்பவர், அவர்களை பின் தொடர சொல்லி செல்கிறார். அவர் சண்முகம் (நண்பனின் பெயர்) இப்பொழுது இங்கே இல்லை ஆறு மாசத்திற்க்கு முன்பு அந்த ஊரின் பெரிய மனிதரின் மகளை இழுத்துக் கொண்டு ஓடி விட்டதாக சொல்கிறார். சாதிகளால் பிளவுப்பட்டிருக்கும் அந்த கிராமம், இவன் இப்படிப்பட்ட காரியத்தை செய்ததால் எவ்வளவு பாதிப்பை அடையும் என்று வேதனைப் படுகிறார்.

 இதைக் கேட்டு மனம் வேதனைப் பட்ட அர்ஜுன், நண்பனின் தந்தையை பார்க்க விரும்புகிறார். சண்முகத்தின் தந்தை கையைப் பிடித்துக் கொண்டு அழுகிறார். அவன் எங்கே இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் எங்கேயாவது இருக்கிறான் என்று தெரிந்தால் பரவாயில்லை என்று. இது அர்ஜுன் மனதை மிகவும் பாதிக்கிறது. சென்னை சென்றதும் தன் நண்பனிடம் சொல்லி, ஒரு வாரம் போய் அங்கே தங்கி பார்க்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். சண்முகத்தின் பெயரை எடுத்தாலே பலப் பிரச்சினைகள் கிளம்புகின்றது.அங்கே சென்றார்களா, சண்முகத்தை கண்டு பிடித்தார்களா? ஏன் அவர்கள் ஆறு மாதமாக யாரையும் தொடர்பு கொள்ளவில்லை?  என்பதே கௌரவம்.

  ஒவ்வொரு படத்திலும் நல்ல அழகான விஷயங்களை அழகாக சொல்பவர்கள் ராதாமோகன் மற்றும் பிரகாஷ்ராஜ் கூட்டணி.
இந்தப் படத்திலும் அது தவறவில்லை. ஒவ்வொரு காட்சியும், ஒரு விதமான விறுவிறுப்போடும், இயல்பாகவும் நகர்கிறது. அர்ஜுனிடம் ஒரு விபத்து நடந்து விட்டது, கொஞ்சம் காப்பாத்துங்க என்று கேட்கிறார் யாழினி(யாமி கவுதம்). பார்த்த உடன் காதலில் விழும் காட்சி இங்கேயும் நடக்கிறது ஆனால் அது இயல்பாகவும், அழகாகவும் இருக்கிறது. ஆனால் அதை மிகைப்படுத்தாமல் இயல்பாக்கி இருப்பது சிறப்பு.

 நண்பனுக்காக நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்வது, அதற்க்காக பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அனைத்தும் வருவது போன்றவை நன்றாக இருக்கிறது. இவர்களின் தேடலில் யாழினியும், மாசியும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் மிக இயல்பு. ஆனால் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம். பொட்டு கதாபாத்திரத்தைக் காட்டும் பொழுதே நமக்கும் தெரிகிறது. அது ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று. அந்த கிராமத்தின் அழகை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். கண்ணுக்கு அப்படி ஒரு குழுமையும், பரவசத்தையும் தருகிறது.

 வசனம் நிறைய இடங்களில் மிக அற்புதம். நாட்டுல தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் இருக்கும் அளவிற்க்கு செய்திகள் இல்லை , தருவித்த பீட்சா அரை மணி நேரத்தில் வரவில்லை என்றால், காசு குடுக்காம இலவசமா சாப்பிடற ஊர்ல இருந்து வர்றீங்க, 20 வருடங்களில் யாரும் என் ஜாதியை கேட்டதில்லை சென்னையில், என் குலத்து பெண்களை சூரையாடும் பொழுதோ அல்லது எங்களை அடிக்கும் பொழுதோ தீட்டு வருவதில்லை மற்ற நேரங்களில் எங்களை தொடுவதில்லை, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

நிறைய குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிது நேரப்படத்திற்க்குள் நம்மால் அனுமானிக்க முடியும் விஷயம் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது. இந்த அனுமானங்களை தவிர்க்க இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் திரைக்கதையில் செலுத்தி இருக்கலாம். இன்னும் கூட கதாபாத்திரங்களுக்கு கணம் சேர்த்திருக்கலாம் உதாரணத்திற்க்கு நாசர், பொட்டு மற்றும் சண்முகம் கதாபாத்திரத்திற்க்கு.



பசுபதியாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். குறை சொல்ல முடியுமா? நன்றாக உணர்ச்சிகளைக் கொட்டி இருக்கிறார். மனைவியாக நடித்திருப்பவரை கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம் என்பது என் எண்ணம். பெண்ணின் சாவில் கூட சாதரணமாக நடித்திருந்தார். அண்ணியும் கூட, அந்த சோகம் நம் நெஞ்சைத் தொடவில்லை. மிகவும் சாதரணமாக இருக்கிறது.  பசுபதியின் மகனாக நடித்திருந்தவர் நல்ல நடிப்பு. கோபம், படபடப்பு, ரோஷம் முதலானவை.

இசை தமன். லேசாக நம் நெஞ்சைத் தொடுகிறது ஒரு கிராமம் பாடல். மற்றவை அவ்வளவாக எட்டவில்லை. இந்த மாதிரி கதைகள் இந்தியா முமுவதும், குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக நடக்கிறது என்பது நெஞ்சைத் சுடும் நிஜம்.



எப்பொழுதும் உண்மை சுடத்தானே செய்யும்? இன்னும் எத்தனை பெரியாரும், பாரதியாரும், அம்பேத்காரும் வந்தாலும் நம் மக்களின் சாதி வெறியும், வெட்டி கௌரவமும் மாறாது போல் இருக்கிறது. அறியாமையை அகற்றி அனைவரும் சமம் என்ற எண்ணத்தை நம் இளைய தலைமுறையிடம் உருவாக்குவது மட்டுமே இதற்க்கெல்லாம் தீர்வாக அமையும். எதிர்ப்பார்ப்போம் இனி வரும் தலைமுறையிடம் மாற்றம் இருக்கும் என்று. இதை படமாக்கி ஒரு அதிர்வை ஏற்படுத்தியதிற்க்காக நிச்சயம் பிரகாஷ்ராஜ் பாராட்டப்படுவார். நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

நன்றி!! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!

மீண்டும் சந்திப்போமா?














Sunday, April 21, 2013

இன்றைய தத்துவம் :)

மரம் சொன்னக் கதை

படித்ததில் பிடித்தது :)


அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் வேண்டினார்.

“நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்”.

மேலதிகாரியும் அனுமதித்தார்.

வேலை மும்முரத்தில் மூழ்கிய விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்த போது மணி இரவு எட்டரை. பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள் என்ற பயத்துடன் போனார்.

வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார். “குழந்தைகள் எங்கே..?” கேட்டதும் மனைவி சொன்னார்.

“சரியாக ஐந்தரை மணிக்குக் கிளம்பி கண்காட்சிக்குப் போய்விட்டார்கள். உங்கள் மேலதிகாரிதான் வந்து அழைத்துப் போனார்” என்று.

விஞ்ஞானி வேலையில் மூழ்கிவிட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பவில்லை, குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பவில்லை. தானே சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றார்...

அந்த மேலதிகாரியின் பெயர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்...!

படித்ததில் பிடித்தது :)


ஒரு கறுப்பின சிறுவனை பார்த்த ஒரு வெள்ளைக்காரன் ஏளனமாய் சிரித்தானாம்.

எதற்க்காக சிரிக்கிறீர்கள் ? என்று அந்த சிறுவன் கேட்க நானோ வெள்ளை நீயோ கருப்பு எனக்கு தான் எதிலுமே முன்னுரிமை, வெள்ளையர்கள் தான் மேல் இருப்பார்கள் கருப்பர்கள் கீழே தான் இருப்பார்கள் என்று ஏளனம் செய்து சிரித்தான்.

அந்த வெள்ளையனை பார்த்து அந்த சிறுவன் சிரிக்கத் துடங்கினான். ஏனடா சிரிக்கிறாய் ? என்று கேட்டான் அந்த வெள்ளைக்காரன்.

எப்பொழுதும் வெள்ளை தான் மேலே கருப்பு கீழே என்றீர்களே அதை நினைத்துதான் சிரித்தேன்.. என்னை பொருத்தவரை கருப்பு என் தலைக்கு மேலே, வெள்ளை என் காலுக்கு கீழே என்றான்.

ஒன்றும் புரியவில்லை அந்த வெள்ளையனுக்கு. என்ன சொல்கிறாய் ? என்று கேட்டான்.

கருப்பு என் தலைக்கு மேலே அது " என் தலை முடி" வெள்ளை என் காலுக்கு கீழே அது "என் கால் பாதம்" என்று விளக்கம் கூறினான் அந்த சிறுவன். வாயடைத்துப் போய்விட்டார் அந்த வெள்ளைக்காரர்.

எதையுமே வித்தியாசமாக பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்...!

வர்கீஸ் குரியன் - இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை


"முகங்கள்"

"இந்தியாவின் பாசமிகு பால்காரர்! - வர்கீஸ் குரியன் - இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை"

ஆனந்த்(குஜராத்):”பாம்பேயில் விற்கும் பால் லண்டனில் சாக்கடை நீரை விட அசுத்தம்” – இங்கிலாந்துக்கு பயணிக்கும் வேளையில் யாரோ கிண்டலடித்தது வர்கீஸ் குரியன் என்ற இந்தியருக்கு ரோஷத்தை ஏற்படுத்தியது. இந்த ரோஷம் இந்தியாவில் உற்பத்தியாகும் பாலை உலகில் மிகச் சிறந்ததாக மாற்றவேண்டும் என்ற சிந்தனையை குரியனிடம் ஏற்படுத்தியது.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த 1921-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வர்கீஸ் குரியன் பிறந்தார். சென்னை லயாலோக் கல்லூரியில் 1940-ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலை பட்டமும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டமும் பெற்ற குரியன் பின்னர் 1946-ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார். இத்தோடு நிற்காமல் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக்த்தில் இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்பு நிலையில் பெற்றார்.

தனது 28-வது வயதில் குஜராத் மாநில கைரா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான ஆனந்திற்கு வருகை தந்தார். கால்நடைகளை வளர்த்தல் தொழிலை நிரந்தர வாழ்வாதாரமாக்கிய கிராம மக்களை சுரண்ட ஆங்கிலேயர்கள் களமிறங்கிய பொழுது சுதந்திர இயக்கத்தின் போராட்ட வழிமுறைகளில் ஒன்றாக கருதி சர்தார் பட்டேலும், இன்னும் சிலரும் இணைந்து பால் வள விவசாயிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

1949-ஆம் ஆண்டு ஆன்ந்த் கிராமத்திற்கு வந்த வர்கீஸ் குரியன், எதுவும் யோசிக்காமல் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கெட்டுப்போன பாலை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை பழுதுபார்க்க வந்த மெக்கானிக் ஒருவர், எதிர்பாராத வகையில் தலைமைத்துவ பண்புடன் பால் வள விவசாயிகளை வழிநடத்தும் காட்சியை பின்னர் இந்திய தேசம் கண்டது. அரசுப் பணியில் சவால்களில்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஓர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவன்தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட உதவுவதாகக் கூறினார். இதுவே அமுல் பிறக்க வழி வகுத்தது. குறைந்த சம்பளத்தில் நியமிக்கப்பட்டாலும் கூட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை இந்தியாவில் மிகப்பெரிய பால் உற்பத்தி சங்கமாக மாற்றிக் காட்டினார் வர்கீஸ் குரியன்.

1950களில் 100 லிட்டர் மட்டுமே பால் உற்பத்தி என்றால் 1990களில் 90 லட்சம் லிட்டராக மாறியது அமுலின் வளர்ச்சி. இன்று 10 ஆயிரம் கோடி ரூபாய் பால் விற்பனை வருமானமும், குஜராத் மாநிலம் முழுவதும் 15 மாவட்ட யூனிட்டுகளும், 16 ஆயிரம் கிராமங்களில் 30 லட்சம் உறுப்பினர்களுடன் அமுல் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இன்று இந்தியா முழுவதும் பரவியுள்ள அமுலின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர்.

2006-ஆம் ஆண்டு குரியன், Gujarat Co-operative Milk Marketing Federation Ltd. அல்லது GCMMF இன் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுப் பெற்றார். 1973-ஆம் ஆண்டு GCMMF நிறுவப்பட்டது முதல் குரியனே தலைவராக இருந்து வந்தார்.

பால் வளம் தவிர இன்னும் பல துறைகளிலும் குரியன் தனது கவனத்தை செலுத்தினார். 1979-ஆம் ஆண்டு ஆனந்தில் நிறுவப்பட்ட இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மெண்டின் தலைவராக குரியன் நியமிக்கப்பட்டார். பிரட்டனின் இளவரசர் சார்ல்ஸ், நெதர்லாந்து இளவரசி, பிரிட்டீஷ் பிரதமராக பதவி வகித்த ஜேம்ஸ் கலிகன் ஆகியோர் ஆனந்தின் விருந்தினர்கள் ஆவர்.

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியன் தனது 90-வது வயதில் மரணமடையும் வேளையில் 2011-ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி பால் உற்பத்தியில் உலகில் இந்தியாவின் பங்கு 17 சதவீதம் ஆகும். முன்பு இந்திய பாலை லண்டனில் ஓடு சாக்கடை நீரைவிட கேவலம் என பேசிய பிரிட்டீஷ்கார்ர்களும் இந்திய பாலுக்காக காத்திருக்கும் பொழுது வர்கீஸ் குரியன் மறக்கமுடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு மரணமடைந்துள்ளார்.


வர்கீஸ் குரியன் பெற்ற விருதுகள்;
1963 ரமன் மக்சேசே பரிசு சமூக தலைமைக்காக
1965 பத்மஸ்ரீ
1966 பத்ம பூசண்
1986 கிருஷி ரத்னா விருது (இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து)
1986 வாடேலர் அமைதிப் பரிசு (கார்னெகி நிறுவனம்)
1989 உலக உணவுப் பரிசு
1993 ஆண்டின் பன்னாட்டு மனிதர் – உலக பால்பண்ணை கண்காட்சி, மாடிசன், ஐக்கிய அமெரிக்கா
1999 பத்ம விபூசண்
2007, கரம்வீர் புரஸ்கார்

To know the latest trends & fashions like this page
https://www.facebook.com/Nilafashions

Saturday, April 06, 2013

படித்ததில் பிடித்தது :)


அன்புள்ள நண்பர்களே,

  நான் படித்ததை இங்கே பகிர்கிறேன் :)


அருகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதே இல்லை. காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும். சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடு சிலிர்த்தெழுந்து முளைக்கும்...

மெய்யான லட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை. அவை மக்கினாலும் மடிந்து போகாது. தருணம் பார்த்து மீண்டும் முளைக்கும். வெற்றி பெரும்வரை ஓய்ந்து போகாது...!

Todays Quotes :)

Monday, April 01, 2013

சாதனை பெண்மணி நவநீதம்பிள்ளை..!


சாதனை பெண்மணி நவநீதம்பிள்ளை..!

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை ஓர் இந்திய வம்சாவளிப் பெண். தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர்.

இவர் நிறவெறி மிகுந்த தென் ஆப்பிரிக்காவில், நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனைதான். இப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக அகில உலகமும் வியப்புடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார்.

இந்த நீதி தேவதை. சமீபத்தில், தன் முன்னோர்கள் பிறந்த பூமியான இந்தியாவுக்கு வருகை புரிந்த நவநீதம் பிள்ளை, ஊடகங்களின் முக்கிய செய்தியானார்.

தன் வாழ்க்கை முழுதுமே பல வேதனைகளை சந்தித்த இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்பிரிக்காவில்தான். ஏழை குடும்பத்தில் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகளாகப் பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வரை சென்று சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மாதானாம்.
என் அம்மாவை என் தாத்தா பள்ளிக்கு அனுப்ப வில்லை, எழுத, படிக்க தெரிந்து விட்டால், என் அம்மா யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம்தான் காரணமாம். தனக்கு நேர்ந்த கொடுமை எங்கள் நால்வருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன்! என்கிறபோது ஈரத்துடன் பளபளக்கின்றன அவர் விழிகள்!

1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அப்போதே நிற வெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப்பினார் நவநீதம் பிள்ளை. இதற்காக அப்போதைய தென் ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்களால் இவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். ஒரு கட்டத்தில் இவருடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது.

அதற்கெல்லாம் அயர்ந்து விடாமல் சட்டத்தின் மூலமே தன்னைத் தற் காத்துக் கொண்டதோடு, நிற வெறியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விடிவெள்ளியாகவும் விளங்கினார். நிற வெறிக்கு எதிராக 28 ஆண்டுகள் போராடினேன். சட்டக் கல்லூரியில் வெள்ளையர் அல்லாதவர்களுக்கான தனி வகுப்பறையில் படித்துத்தான் சட்டம் முடித்தேன்.
ஒரு வழக்குரைஞராக, நீதிமன்றத்தில் பிறரின் உரிமைகளுக்காக வாதாடிய சமயத்திலும்கூட, நான் வெள்ளையர்களில் ஒருத்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதியின் அறைக்குள் நுழைகிற உரிமை எனக்குத் தரப்படவில்லை. ஆனால், அந்த வலிகளெல்லாம்தான் எனக்கு வலிமை தந்தது என்று தன் வாழ்நாளின் கறுப்புப் பக்கங்களை கசப்போடு திரும்பிப் பார்க்கிறார் நவநீதம் பிள்ளை.

தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்காவும் , இவரது கணவர் உட்பட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் அவர் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர். 1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.

1992இல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக் கறிஞர்கள் இருவர் துணையுடன் "இக்வாலிட்டி நவ்" என்ற பெண்களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து பெண்களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில் எவரெஸ்ட்டாக உயர்ந்து நிற்கிறார்.

மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான்.

ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார்.

2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான குரூபர் பரிசு வழங்கப்பட்டது. பூகோள ரீதியாகவும் பாலியல் மற்றும் அனுபவ ரீதியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கு இருக்கிறது. அவரும் வழக்குரைஞர் தான். நிற வெறிக்கு எதிராக அவர் வாதாடியதால் ஐந்து மாதங் கள் சிறையில் தள்ளப்பட்டார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் என் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்கிறார் தன் கணவரை ஒரு காலத்தில் வெள்ளையர்கள் எங்களை பிளாக் பியூட்டி என்று அழைத்தனர். ஆனால், குதிரைகளைத் தான் அப்படி அழைப்பார்கள் என்று தெரிய வந்தபோது அந்த வார்த்தையையே நான் வெறுத்தேன். அப்படி, அவர்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கும் நிறவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிற வெறி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அது தான் எங்களின் வெற்றி… என்று கண்களை மூடி மெது வாக சிரிக்கிறார் நவநீதம்பிள்ளை

நீதி என்றும், யாருக்கும் மறுக்கப்படுவதில்லை என்று நம்புவோம்!


பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை சில!


பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை சில!!

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.

*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

- சுமதி.

(Thanks to Women FB)

Best Quotes

உடல், மன -அழகு, ஆரோக்கியம்


"நலமுடன் வாழ"

உடல், மன -அழகு, ஆரோக்கியம்

1.அதிகாலையில் எழுந்ததும் இரண்டு இலைகள் துளசி, ஒரு பல் பூண்டு, கொஞ்சம் பனங்கற்கண்டு, மூன்று வறண்ட திராட்சை, ஒரு டம்ளர் மிதமான சூட்டில் வெந்நீர் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

2. கிரீன் டீ .. நான் அருந்தும் விதம் - இலையை கொதிக்க வைக்கும் போது, பெரிய நெல்லிக்காய் பேஸ்ட் ஒரு ஸ்பூன் கலந்து கொதித்து ஆறியதும் தேன் கலந்து அருந்துவது பொலிவு பிளஸ் நலம்... இதில் வடிகட்டிய சக்கையை முகத்துக்கு ஸ்க்ரப் போட்டுக்கொள்ளலாம் வாரத்தில் இருமுறை.

3.வெயில் காலத்தில் வெந்தய பொடி கொஞ்சம் உள்ளுக்கு எடுத்து வெந்நீர் குடிக்கலாம். கூடவே தலைக்கு வெந்தய பொடி பேக் போட்டு வாரம் ஒரு முறை அலசுவதும் குளிர்ச்சியை கொடுக்கும்.

4.. சீரான மூச்சு பயிற்சி பத்து நிமிடம்

5.கவனத்தை நெற்றி பொட்டில் அல்லது முதுகு தண்டுவடத்தில் நிலைநிறுத்தி 10 நிமிடங்கள் மெடிட்டேசன் செய்வது நலம்.
6.காலாற காற்று வெளியில் 10 நிமிடம் நடந்து விட்டு வருவதும் உசிதம்.

7.அவசியம் அற்ற கண்டதை யோசித்து எந்நேரமும் குழம்பிகொண்டு இருக்காமல் இருத்தல்.

8.மனதிற்கு வருத்தம் தர கூடிய எதுவாக இருந்தாலும் சரி ... ஒரு காகிதத்தில் நிறைக்க எழுதி, ஒரு முறை வாசித்து விட்டு கிழித்து கூடையில் போட்டு, அடுத்த வேலையை பார்க்க போவது ஒரு நல்ல பயிற்சி.

9..கடல் அலைகள் மற்றும் பச்சை தாவரங்களை பார்ப்பது மன அழுத்தம் குறைக்க உதவும்.ஒரு வகையில் கண் வழி யோக பயிற்சி இது.

10.ஒரே மாதிரியான வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம் மாறி வேறு இடத்தில கொஞ்சம் இளைபாறிவிட்டு வருவது நலம்.

-புவனா கணேஷன்

(Thanks to Women)

Best Quotes :)

Dear Friends,


Tuesday, March 26, 2013

வத்திக்குச்சி திரைவிமர்சனம்


அன்புள்ள நண்பர்களே!!,

    வணக்கம். மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி :)
நல்லதுக்கே காலம் இல்ல, நல்லவங்க நாட்டுல குறைஞ்சிட்டாங்கப்பா... இப்படி பல வசனகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதை ஒட்டி வந்த படம்தான் நாம் பார்க்க போவதும். அட கண்டுபிடிச்சிட்டிங்களா? ஆமாங்க வத்திகுச்சி படம்தான்.

 மூன்று நபர்கள் தங்கள் வாழ்க்கையை கெடுத்துவிட்டான். அவனை உயிரோடு விடக்கூடாது என்று சபதம் போடுகிறார்கள். அந்த மூவரும் குறி வைப்பது ஒருவனைத்தான் என்று தெரிகிறது. சரி இந்த படத்துல ஹிரோதான் வில்லன் போல இருக்கு என்று நினைத்தால் அது இல்லங்க.

 சக்தி (தீலிபன்) ஷேர் ஆட்டோ ஓட்டுனர். அதே சமத்துவபுரத்தில் வசிப்பவர் மீனா(அஞ்சலி). சக்தி தினமும் மீனா வீட்டின் வாசலில் தவம் கிடக்கும் வாலிபர். ஒரு தலைக் காதல். இரத்தத்டோடு வரும் குணம் தான் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம். அது போல் இயல்பிலேயே அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட குடும்பம். ஒரு முறை குடும்பத்தோடு வெளியில் செல்லும் போது ஏடிம் ல் பணம் எடுக்கும் பொழுது அவர் கழுத்தில் கத்தியை வைத்து , பொது இடத்தில் 10000 ரூபாயை பிடிங்கிக்கொள்கிறார்கள். அது சக்தியின் மனதை மிகவும் பாதிக்கிறது. மிகவும் வலி வாய்ந்த விஷயம், மற்றவர்களால் ஏமற்றப்படுவதுதான். அது அவரை நிம்மதியாக தூங்க விடுவதில்லை. அது அவரை மிகவும் பாதிக்கிறது. இதனால் அந்த ரௌடி கும்பலிடம் அடிக்கடி மோதி பகையை வளர்த்துக் கொள்கிறார். தன்னையும் உயர்த்திக் கொள்கிறார். சண்டை பயில்கிறார், நன்றாக சாப்பிடுகிறார். கடைசியில் அவர்களுடன் மோதி 10000 பணத்தை திரும்ப வாங்கி விடுகிறார். ஆனால் அந்த ரௌடியின் மனதில் நிரந்தர ரௌடியாகி விடுகிறார். இவர் அனைவருக்கும் உதவி செய்வதால் , இவருக்கு இன்னும் சில எதிரிகளும் கிடைத்து விடுகிறார்கள். ஒரு சாதரண இளைஞன் முறியடித்து வாழ்வில் ஜெயிக்கிறானா? இல்லையா? என்பதே கதை.

 இதேப் போல் பல படங்கள் வந்தாலும். இதில் கொஞ்சம் நம்பும்படியாக சில காட்சிகளும், கதையமைப்பும் இருக்கிறது.
அதுவே படத்தின் மிகப்பெரிய பலம். அறிமுக நடிகரான திலீபன் , மிகவும் எதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார். அஞ்சலியிடம் வழியும் பொழுதும் சரி, உன்னையே மறந்தாலும், அன்னையை மறக்காதே என்று அன்னையை நெகிழ்த்துவதும் சரி, ஆக்ரோஷமாக  எதிரிகளிடம் மோதும் போதும் சரி அழகாக பலவிதமான பரிணாமங்களை காட்டுகிறார்.

அஞ்சலி சொல்லவே வேண்டாம். அவரின் அழகில் அனைவரும் நாய்குட்டிப் போல் தொடரலாம் :). அவரின் ஆங்கில வகுப்புக் கலாட்டா மிகவும் அருமை. அதுவும் எங்கே பார்த்துக் கொண்டாலும் "Have a nice day" என்று அலட்டிக்கொள்வது அருமை. ரொம்ப பந்தா பண்ணுவதும், அலட்டுவதும் கூட தனி அழகு. :)

சரண்யா பொன்வண்ணன், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான தாய். ஆனால் அவர் காட்டும் பாசம் நிஜமான பாசமாக நம்மை நெகிழ்த்துகிறது. ஆரம்ப காட்சியில் பையனுக்கு அறிவுரை சொல்லும் பொழுது, "அப்பா வாட்ஸ் மேனாம், அவங்க அண்ணன் வார்டு பாயாம். பெரிய படிச்ச குடும்பம்டா, எல்லாம் கவுர்ன்மெண்ட் உத்தியோகம். " என்று அவர் வெள்ளந்தியாக சொல்வது நம்மை அறியாமல் சிரிக்க வைக்கிறது.

நிறைய நட்சத்திரங்கள் உதாரணத்திற்க்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஜெயப்பிரகாஷ், சம்பத் , ஜகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் கின்ஸ்லின் முயற்ச்சியை நிச்சயமாக பாராட்ட வேண்டும். படத்தை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். ஒரு கிரைம் பட அளவிற்க்கு போரடிக்காமல் கொண்டு சென்ற விதம் அருமை. எல்லா படத்திலும் முடிவு காட்சியில் நாயகன் அடித்து நொருக்கி விடுவார் அனைவரையும். ஆனால் இந்த படத்தில் நல்ல லாஜிக் சொல்லப் படுகிறது. நிறைய ஓட்டைகளும் இருக்கிறது உதாரணத்திற்க்கு அவரை அடைத்து வைத்து விட்டு, எல்லா வேலையும் செய்து கொண்டிருப்பது.கடைசியில் கொள்வது போன்ற விஷயங்கள்.

இசை கிப்ரான்(Ghibran), சிலப் பாடல்கள் நன்றாக இருக்கிறது. ஆனால் மனதில் நிற்க்கவில்லை.



  ஒரு சாதரண மனிதன் விழித்துக் கொண்டு நடக்கும் தப்புகளை தட்டிக் கேட்க வைத்திருப்பது மிகவும் அருமை. சில நேரங்களில் நமக்கு பயமாக கூட இருக்கிறது, இப்படி நம் நாட்டில் எங்கோ நடக்கிறது என்பது. நம்மிடம் இது போன்ற படங்கள் கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நல்லது. நல்லது செய்ய நினைத்தால் நல்லதே நடக்கும் என்பதே நம்பிக்கை.

நீங்களும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மீண்டும் சந்திப்போமா?

Monday, March 18, 2013

கற்றுக் கொண்டதை வெளிப்படுத்தினால்தானே மகிழ்ச்சி...!



இங்கிலாந்து போலீஸ், தீவிரவாதக் கும்பல் ஒன்றை சுற்றி வளைக்க முற்பட்டபோது தீவிரவாதிகள் தப்பித்தனர். அவர்களுடைய நாய் மட்டும் பிடிபட்டது. ஆச்சரியம் என்னவென்றால், தீவிரவாதக் கும்பல் போய் வரும் இடங்கள், ஒளிந்திருந்த இடங்கள், எல்லாமே அந்த நாய்க்கு நன்றாகத் தெரியும்.

வருத்தம் என்னவென்றால், அந்த தீவிரவாதக் கும்பல் பேசிய ஹீப்ரு மொழியில் கட்டளை பிறப்பித்தால்தான் அந்த நாய்க்குப் புரியும். கட்டளைக்குக் கீழ்படியும்.

ஹீப்ரு மொழி தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி இதழ்களில் விளம்பரங்கள் கொடுத்தது காவல்துறை. ஒரே ஒருவர் வந்தார். அவரை வரவேற்று உபசரித்த காவல்துறை தங்களுக்கு வேண்டிய விபரங்களை அவரிடம் சொல்ல, அவரும் நாய்க்குக் கட்டளைகள் பிறப்பித்தார். நாயும் அடிபணிந்தது. மிக முக்கியமான துப்புகள் துலங்கின.

அவருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. பத்தாயிரம் பவுண்ட் தருவது, மேலும் கேட்டால் பேரம் பேசுவது என்று முடிவெடுத்தார்கள். அவர்கள் பணம் தரும் முன்னரே அந்த மனிதர் பத்தாயிரம் பவுண்டுகளை எடுத்து காவல்துறைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். காரணம் கேட்டபோது சொன்னார்.

“ஏதோ ஓர் ஆசையால் ஹீப்ருமொழி படித்தேன். இந்த மொழியைக் கற்க நான் போனது என் மனைவிக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. “இது வேண்டாத வேலை! இங்கிலாந்தில் நீ ஹீப்ரு மொழியில் பேசினால் ஒரு நாயும் கேட்காது” என்றாள். அதைப் பொய்யாக்கி என் மானத்தைக் காப்பாற்றினீர்களே! அதற்குத்தான்” என்றார் அந்த மனிதர்.

கற்றுக் கொண்டதை வெளிப்படுத்தினால்தானே மகிழ்ச்சி...!

(Thanks to Indru oru thagaval)