Friday, October 04, 2013

ராஜா ராணி திரைவிமர்சனம்


அன்புள்ள நண்பர்களே,

    வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சில திரைப்படங்கள் வருவதற்க்கு முன்பே மிக மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். ஏனெனில் நமது தொலைக்காட்சிகளில் வரும் திரைப்படங்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய கிசுகிசுக்கள் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஒரு திரைப்படம்தான் ராஜா ராணி.
வாங்க படத்தை பார்க்கலாம்.

  நான்கு பேர் மூன்று காதல் இதுதாங்க ராஜா ராணி. ரெஜினா (நயன்தாரா) வும் ஜான்(ஆர்யா) வும் திருமணமாகும் காட்சியில் ஆரம்பிக்கிறது திரைப்படம். இருவருக்கும் பிடிக்காமல் நடக்கிறது திருமணம். இதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஜான் தினமும் குடித்து விட்டு வருவது ரெஜினாவிற்க்கு பிடிப்பதில்லை. மனவருத்தும் ஏற்படும் பொழுது ரெஜினாவிற்க்கு வலிப்பு நோய் வருகிறது. இவரை மருத்துவமனையில் சேர்க்கும் பொழுது மருத்துவர் கேட்கும் எந்த கேள்விக்கும் ஜானிற்க்கு பதில் தெரிவதில்லை. அதனால் மருத்துவர் இவருக்கு அறிவுரை கூறி விட்டு செல்கிறார். அதற்க்காக முதன் முறையாக ரெஜினாவிடும் பேசும் ஜான் மருத்துவருக்காகவாவது இந்த நோய் வந்த விவரங்களைக் கேட்கிறார். முன்கதையைக் கேட்ட ஜானிற்க்கு ரெஜினா மீது ஈடுபாடு வருகிறது. இதேப் போல் ஜானிற்க்கும் ஒரு முன்கதை இருக்கிறது. இதைக் கேட்ட பிறகு ரெஜினாவிற்க்கு ஜானின் மீது காதல் வந்து இருவரும் வாழ்வில் இணைந்தார்களா என்பதே ராஜா ராணி :)

  ஒரு மனிதனின் வாழ்வில் காதல் முக்கியமானதுதான். ஆனால் கிடைக்காத காதலுக்காக வாழ்வே சூனியமாகி விடாது என்பதே
ராணி சொல்லும் ராஜாவின் கதை, ராஜா சொல்லும் ராணியின் கதை.

  நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு தலை காட்டி இருக்கும் படம் தான் இது. நடிப்பில் மிளிருகிறார். வலிப்பு வரும் காட்சியிலும், காதலனை பிரிந்த காட்சியிலும் சபாஷ் வாங்குகிறார்.

  ஜெய்யின் அப்பாவித்தனமான நடிப்பு நமக்கு புதியதில்லை. ஆனாலும் அவரின் அப்பாவித்தனமான முகமும், நண்பர்கள் மிரட்டும் பொழுது அழுவதும் மிகவும் ரசிக்கும் காட்சி. முன்பகுதியில் குழந்தைத்தனம், பின்பகுதியில் மிடுக்கு ரசிக்கும்படி உள்ளது.

  வழக்கமாக துடிப்போடும், துடுக்கோடும் நடிக்கும் ஆர்யா இதிலும் சளைக்க வில்லை. நயனின் அன்புக்கு ஏங்கும் காட்சியிலும், நஸ்ரியாவை துரத்தி துரத்தி காதல் செய்யும் பொழுதும் இன்னொரு காதல் மன்னன்.

  நஸ்ரியா அழகு பதுமையாக வந்து அனைவரையும் கொள்ளை கொள்கிறார். தன்னைப் பற்றி சொல்லி, பாசத்திற்க்காக ஏங்கி
"எங்க அம்மா மடியில படுத்ததே இல்ல, உன் மடியில படுத்துக்கட்டுமா" என்று கேட்கும் பொழுது நமக்கும் அந்த பாசத்தின் தவிப்பு தெரிகிறது. பிரதர், பிரதர் என்று சொல்லும் காட்சி ரசிக்கும் படி உள்ளது முதலில், பின்பு அதுவே முகம் சுளிக்க வைக்கிறது.



 சந்தானம் நகைச்சுவை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. சத்யாராஜ் சில காட்சிகளில் நடித்தாலும், அப்பா,மகளின் நெருக்கத்தை சொல்லுகிறார்.

இயக்குநர் அட்லி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.கதைக்காக செலவிட்ட நேரத்தை விட பீருக்காக அதிகம் செலவிட்டிருக்கிறார். அதிகமாக அனைவரையும் அழ வைத்திருக்கிறார் (கிளிசரின் செலவும் அதிகம்)

 சில வசனங்கள் ரசிக்கும் படி இருக்கிறது. "கல்யாணத்திற்க்கு முன்னாடி ஒருத்தன் குடிக்கிறான் என்றால் லவ் பெயிலியர், அதுவே கல்யாணத்திற்க்கு பின்னாடி ஒருத்தன் குடிக்கிறான்னா வாழ்க்கையே பெயிலியர்", "நம்ம கூட இருக்கறவங்க நம்மல விட்டு போயிட்டாங்கன்னா, நாமளும் கூடவே போகனும்ன்னு அர்த்தம் இல்ல. என்னைக்காவது ஒரு நாள் நாம ஆசப்பட்ட மாதிரி நம்ம லைப் ஒரு நாள் மாறும்"

 இசை ஜிவி பிரகாஷ், பின்னணி இசை ரசிப்பு, பாடல்களும் ஏற்புடையதாக இருக்கிறது.

 மொத்தத்தில் ராஜா ராணி அரியணை ஏறலாம்.

நீங்களும் படம் பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்களேன். மீண்டும் சந்திப்போமா?

வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!


 


  

Thursday, July 25, 2013

வீட்டுத்தோட்டத்தை வளர்க்கும் கழிவுநீர்!
பெருநகரங்களில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் என்று வீட்டுக்கு அருகிலேயே வசதிகள் இருப்பதால், கழிவுநீரை வெளியேற்றுவது சுலபமான விஷயம். ஆனால், இரண்டாம்கட்ட நகர்ப்புறப்பகுதிகள் மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் வீட்டுக் கழிவுநீரைப் பராமரிப்பது... பெரும் சவால்தான்!
ஆனால், ''அந்தக் கவலையே வேண்டாம். அதையும் மிக எளிதாக மேலாண்மை செய்ய முடியும்'' என்கிறார், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி, ராமதாஸ். இவர், அரசு சாரா அமைப்பு மூலமாக... கழிவுநீர் மேலாண்மை சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
''வீடுகளில் வெளியாகும் கழிவுநீரை வீட்டுக்குள்ளேயே மறுஉபயோகம் செய்ய வேண்டும். அதை சாக்கடையில் விடக்கூடாது. ஆனால், இதைச் செய்யாததால் எவ்வளவு பிரயத்தனப்பட்டும் நம்மால் கொசுவை ஒழிக்க முடியவில்லை. மிக எளிதான முறை, குறைவான செலவிலேயே இதைச் செய்ய முடியும். வீடு கட்டும்போதே இதையும் சேர்த்துத் திட்டமிட்டால், கழிவுநீர் நமக்குத் தொல்லையாக இருக்காது'' என்று ஆர்வத்தை தூண்டும் ராமதாஸ், கழிவுநீரை மேலாண்மை செய்யும் விதங்களைப் பற்றி சொன்னார்.
''கழிவுநீரை சுத்திகரித்து, நிலத்தடி நீரை உயர்த்துவது ஒரு முறை. தாவரங்களை வளர்க்கப் பயன்படுத்திக்கொள்வது மற்றொரு முறை என தண்ணீரின் தேவை, நம்மிடம் உள்ள இடவசதி ஆகியவற்றைப் பொறுத்து... இரண்டு முறைகளில் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்ளலாம்.
நிலத்தடி நீர் உயர..!
எங்கெங்கும் தண்ணீர் பஞ்சம் விரட்டும் இந்நேரத்தில், வீட்டின் கழிவுநீரை சுத்திகரித்து நிலத்தடி நீரை உயர்த்துவது அவசியமானது. வீட்டில் வெளியாகும் கழிவுநீரின் அளவைப் பொறுத்து 3 அடிக்கு 2 அடி, அல்லது 4 அடிக்கு இரண்டரை அடி என்ற நீள, அகலத்தில், 3 அடி ஆழத்துக்கு குழி எடுத்துக் கொள்ள வேண்டும். இக்குழியின் பக்கவாட்டுப் பகுதிகளில் செப்டிக் டேங்க் கட்டுவது போல இடைவெளி விட்டுவிட்டு செங்கற்களை வைத்துக் கட்டிக் கொள்ளலாம். மண் சரிவைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. குழியின் மேல் பகுதியில், மழைநீர் குழிக்குள் சென்று விடாத அளவுக்கு ஒரு கல் உயரத்துக்கு செங்கல் வைத்துப் பூசிக்கொள்ள வேண்டும். குழியின் அடியில் தேங்காய் அளவில் உள்ள கூழாங்கற்களை முக்கால் அடி உயரத்துக்கு போட வேண்டும். அடுத்து, மாங்காய் அளவிலுள்ள கூழாங்கற்கள் முக்கால் அடி உயரத்துக்கு நிரப்ப வேண்டும். மூன்றாவது அடுக்காக, எலுமிச்சை அளவுள்ள கூழாங்கற்களை முக்கால் அடி உயரத்துக்கு நிரப்ப வேண்டும்.
வீட்டில் கழிவறை நீரைத் தவிர்த்து... குளிக்கும்போது, துவைக்கும்போது வெளியாகும் கழிவு நீர், சமையலறை கழிவுநீர் என அனைத்துக் கழிவு நீரும் இக்குழிக்குள் விழுமாறு அமைத்துவிட வேண்டும். இதில் சுத்திகரிக்கப்படும் நீர், நிலத்துக்குள் இறங்கி விடும். இதனால் நமது வீட்டைச் சுற்றி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணறு, போர்வெல் என அனைத்திலும் நீர்மட்டம் கூடிக்கொண்டே இருக்கும். இக்குழிக்குள் இருந்து துர்நாற்றம் வெளியாகாது. கொசுவும் உற்பத்தியாகாது. இது கழிவுநீரை வீட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் முறையாகும்.
thanks to Aval vikatan

Monday, July 22, 2013

மரியான் திரைவிமர்சனம் (MARYAN TAMIL MOVIE REVIEW)

அன்புள்ள நண்பர்களே,


வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனம் . ஒரு கடலும் கடல் சார்ந்த பகுதியும் மட்டும்மல்ல இந்த படம்.
அதுக்கும் மேல. ஆமாங்க மரியான் படத்தைதாங்க நாம பார்க்க போறோம். வாங்க நீந்தலாம்... இல்ல வாங்க பார்க்கலாம்.


மரியான்(தனுஷ்) கடலுக்குள்ள பாய்ஞ்சா மீனு இல்லாமா வர மாட்டாரு. அதனால ஊரே அவர கடல் ராசான்னு கொண்டாடுது.
ஒரே குடி, முரட்டுத்தனம் என்று இருக்கும் இவரை பனிமலர்(பார்வதி) உருகி, உருகி காதலிக்கிறாங்க(ஓ அதனாலதான் பனிமலர்ன்னு பேர் வச்சிருப்பாங்கலோ). ஆனா மரியான் என் மனசுல ஒண்ணும் இல்ல, அது வெத்து இடம் என்று சொல்ல. கடுப்பாகி விடுகிறார் பனிமலர். பனிமலர் நெருங்கி, நெருங்கி வர, மரியான் விலகி, விலகி ஓடுறாரு. ஒரு கட்டத்துல இவரும் காதல் வயப்படுகிறார்(பின்ன). ஊரில் இருக்கும் இன்னொரு தீக்குரசி நபருக்கும் பனிமலர் மீது காதல் வருகிறது(வில்லன் இல்லாம படமா?). மரியானும், பனிமலரும் காதல் செய்வது தெரிந்ததும் வீட்டுக்கு போய் பொண்ணு கேட்கிறார். பனிமலரின் தந்தை மறுக்க, அங்கே சண்டை வருகிறது. எங்கிட்ட வாங்கி இருக்கிற கடன கட்டு இல்லன்ன உம்பொண்ண எனக்கு கட்டுங்கிறாரு. 

பல முறை மரியானை வெளிநாட்டிற்க்கு அனுப்ப முயற்சிக்கிறார் தாய். ஆனால் மரியானோ நான் கடல் ராசா, இந்த உப்பு காற்று விட்டுட்டு நான் எங்கேயும் போக முடியாது என்று சொல்லி விடுகிறார். ஆனால் காதலியின் கடனை அடைக்க இரண்டு வரும் சூடானுக்கு போகிறார். போனிலே உருகுகிறார்கள். ஊருக்கு திரும்பும் நாளில் எதிர்பாராத விதமாக சூடான் நாட்டு தீவிரவாதிகள் , இவர்களை கடத்தி விடுகிறார்கள். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பினாரா? பனிமலருடன் இணைந்தாரா ? இதுவே மரியான் படங்க.


தனுஷ் இயல்பாக நடித்து அசத்துகிறார். அங்கங்கு சில நடிகளையும் நினைவு படுத்துகிறார். படத்தை ஆரம்பிக்கும் பொழுது குடி, குடியை கெடுக்கும் என்று நல்ல விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் படம் முழுக்க குடிப்பது போல் நிறைய காட்சிகள். இதை தவிர்த்திருக்கலாம். தனுஷின் நண்பனாக அப்புக்குட்டி இருக்கிறார். இவரை இலங்கை இராணுவம் கொன்று விட்டதாக கூறி இவர் கதையை முடித்து விடுகிறார்கள்.
அந்த காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. செயற்க்கையாக இருக்கிறது. இவர் இறந்து விட்ட சமயத்தில் இவர் அழுது கொண்டிருக்கிறார். அப்பொழுது போய் பார்வதி பெண்பார்க்க வருவதாக சொல்லி அழுகிறாள். ஆத்திரத்தில் இடுப்பில் எட்டி உதைக்கிறார். நமக்கே ஒரு நிமிஷம் நடுங்கி விடுகிறது. இந்த மாதிரி காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். உதைப்பது நல்ல விஷயம் போல காட்டி இருக்கிறார்கள். குட்டி ரேவதி அசோசியேட் டைரக்டராக இருக்கிறார். இவர் பெண்களை அடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

பார்வதி , பூ படத்தில் நடித்தவர். இதில் அனைத்து காட்சியிலும் மையிட்ட கண்களோடு வந்து பனி மாதிரி உருக வைக்கிறார்.
நன்றாக அடி வாங்குகிறார். கொஞ்சம் பாவமாகக் கூட இருக்கிறது.


இசை A R ரஹ்மான். பல இடங்களில் நமக்கு கடல் படத்தை நினைவு படுத்துகிறது. கொஞ்சம் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். நெஞ்சே எழு பாடல் இன்னொரு வந்தே மாதரம். எங்க போன ராசா, இன்னும் கொஞ்சம் பாடல்கள் இனிமை.


ஒளிப்பதிவு மிக அருமை. கடல் பகுதியின் அழகை நம் கண் முன்னே காட்டுகிறது.சாதிக்கிற பய அத்தன பேருக்கும் பொம்பள வாட பட்டுகிட்டே இருக்கணும் போன்ற சில வசனங்கள் புதிதாக இருக்கிறது.


பரத்பாலா இயக்கி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக் கெட்டிருக்கலாம். பெண்களின் ரோல்கள் என்று மாறப் போகின்றனவோ தெரியவில்லை? எப்பொழுது பார்த்தாலும் உம் புள்ளைய நான் சுமக்கணும், நீ எனக்குதாண்டா.......போன்ற வசனங்கள்.சூடானே வருமையான நாடு, அங்கே போய் என்ன சம்பாதிப்பது அது கொஞ்சம் உதைக்கிறது. இது 2008ல் நடந்த ஒரு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது.


மரியான் என்றால் சாவே இல்லாதவன் என்று பொருளாம். நினைக்காதது வேனா நடக்காம இருக்கலாம். ஆனால் நினைக்கிறது கண்டிப்பா நடந்தே தீரும் என்று சொல்லும் நேர்மறையான வசனம் நன்றாக இருக்கிறது.

Directed byBharat Bala
Produced byVenu Ravichandran
Written byBharat Bala
Screenplay byBharat Bala
Sriram Rajan
StarringDhanush
Parvathi Menon
Salim Kumar
Music byA. R. Rahman
CinematographyMarc Koninckx
Editing byVivek Harshan



சில படம் முடிவதே தெரியாது. சில படம் எப்பொழுது முடியும் என்று இருக்கும்.
நீங்க படத்த பார்த்துட்டு சொல்லுங்களேன். இது எந்த மாதிரின்னு.


மீண்டும் சந்திப்போமா?


வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!

Thursday, July 18, 2013

ஏழு விஷயங்கள்

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்:

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும்
... மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்தி;லும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்:

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்:

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக
சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக
வரரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க
முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்:

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

# வாழ்தல் இனிது, வாழ்வை நேசி...
(Thanks to Inioru vidhi seyvom)

Wednesday, July 17, 2013

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்

பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்:-

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்

பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்

1. இருமுறை பல் துலக்குதல்

நிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப்படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்துவிடுங்கள். அதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளைச் சொன்னால், அவர்களே தினமும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்களை தேடி வருவார்கள்.

2. அடித்து எழுப்ப வேண்டாம்

நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். உண்மையில் அவ்வாறு எழுப்புவது நல்ல பழக்கமல்ல. சொல்லப்போனால் அது அவர்களது உடலுக்கு கெட்டதைத் தான் விளைவிக்கும். எப்படியெனில், சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.

3. சாப்பிடும் பழக்கம்

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

4. சுத்தம் செய்தல்

குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.

5. மரியாதை

குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

6. பகிர்ந்து கொள்ளுதல்

பகிர்ந்து கொள்வது என்பது ஒருவிதமான சந்தோஷம். ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் இதனை செய்வதில்லை. மேலும் தற்போதைய பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்களுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொடக்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

7. பொறுப்பு

சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.

8. ஆரோக்கிய உணவுகள்

தற்போதுள்ள குழந்தைகளுக்கு பிட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறுவயதிலேயே வாங்கிக் கொடுத்து பழக்கிவிட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற்காலத்தில் ஆரோக்கியமற்ற உடலைப் பெற்றிருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.

9. அளவான டிவி, அதிகமான விளையாட்டு

குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.

10. நல்ல பழக்கம்

பொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழுது கண்டித்து, அதனை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டுவார்கள்.

11. உதவி

சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால், நீங்கள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத்து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம்.

12. சரியான படுக்கை நேரம்

குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்கள்.

Tuesday, July 16, 2013

உரமாகுது காய்கறி கழிவு... மிச்சமாகுது தினசரி செலவு!


'வீட்டுத் தோட்டம் போட வேண்டும்' என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், 'அதெல்லாம் லேசுப்பட்ட விஷயமில்ல...', 'அதையெல்லாம் நம்மளால பராமரிக்க முடியுமா?' இதுபோன்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடை தேடாமலே... விஷயத்தை முடித்துவிடுவார்கள்.
ஆனால், 'நகரத்தில் இருந்தால் என்ன..? நாமும் அமைக்கலாம் ஒரு குட்டித் தோட்டம். தேவை ஆர்வமும் முயற்சியும் மட்டுமே!’ என்று நம்பிக்கையூட்டுகிறார், சுற்றுச்சூழல் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில். சென்னைப் புதுக்கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர், மண்புழு விஞ்ஞானி என்கிற பெருமைகளைப் பெற்றிருக்கும் இஸ்மாயில்... மண்புழு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி உரையாற்ற, பயற்சி அளிக்க உலக அளவில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர். இங்கே வீட்டில் தோட்டம் அமைப்பது முதல், பராமரிப்பது வரை மணிமணியான தகவல்களைப் பகிர்கிறார்.
''பெரிய பெரிய கட்டடங்களில், துளிகூட மண் இல்லாத நிலையிலும், கிடைக்கும் சின்னச் சின்ன வெடிப்புகளில் அரச மரம் வளர்வதைப் பார்த்திருப்போம். அப்படியிருக்கும்போது காய்கறி மற்றும் பூஞ்செடிகள் வளர்க்க அதிகபட்சமாக எவ்வளவு மண் தேவைப்படப் போகிறது? பிடியளவு மண்ணில்கூட கொத்துக் கொத்தாக காய்கள் பறிக்கலாம். நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டப்பாக்கள், வாட்டர் பாட்டில்கள், பெயின்ட் வாளிகள் இவற்றில் எல்லாம் கொஞ்சம் மண்ணும் இயற்கை உரமும் போட்டால் போதும்... அதிலிருந்து உருவாகும் அழகான தோட்டம்!
முதல் தேவை... எரு!
தோட்டம் போடுவதற்கு முன், முதலில் எரு தயாரிக்க வேண்டும். முதல் வேலையாக ஏழு தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தொட்டியிலும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என எழுதுங்கள். சமையலுக்கு நறுக்கும் காய்கறிக் கழிவுகளை அன்றைய தினத்துக்குரிய தொட்டியில் போடுங்கள்.
அதை மக்க வைப்பதற்கு, சிறிதளவு மண்ணைத் தூவுங்கள் அல்லது புளித்த தயிரை, தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். இதேபோல அந்தந்த நாளுக்குரிய தொட்டிகளில் கழிவுகளைப் போட்டு வாருங்கள். நான்கு முதல் ஏழு மாதத்துக்குள் இந்தக் கழிவு சேகரிப்பு... எருவாக மாறிவிடும்.
இப்போது நமக்கு ஏழு தொட்டிகளில் உரம் ரெடி (ஒரு தொட்டிக்கான கழிவுகளை ஒரே நாளில் உங்களால் போட முடிந்தால்... நான்கு முதல் ஆறு வாரங்களில் உரம் தயாராகிவிடும்)!
அப்புறம் என்ன... கொஞ்சம் மண்ணைத் தூவி வீட்டிலிருக்கும் அழுகியத் தக்காளியைப் பிழிந்தால்... தக்காளிச் செடி முளைக்கும், வெந்தயத்தைப் போட்டால் வெந்தயக்கீரை முளைக்கும். சந்தையில் விற்பனையாகும் விதவிதமான காய்கறி விதைகளைத் தூவியும் பயிர் செய்யலாம். கூடவே இன்னொரு ஏழு தொட்டிகள் வாங்கி மீண்டும் உரம் தயாரிக்க ஆரம்பித்துவிடுங்கள்.
தண்ணீரை சேமிக்கும் தேங்காய் நார்!
வீட்டுக் கழிவை உரமாக்கிவிட்டோம். அடுத்தது, தண்ணீர். பெருகி வரும் தண்ணீர் பஞ்சத்தில் குடிக்கவே தண்ணீர் இல்லை, இதில் செடிக்கு ஏது நீர் என்கிறீர்களா..? வழி செய்வோம். தேங்காய் நார் ஒரு மிகச் சிறந்த தண்ணீர் தேக்கி. நாம் ஊற்றும் தண்ணீரை இரண்டு, மூன்று நாட்கள் வரையிலும்கூட தேக்கி வைத்துக்கொள்ளும்.
அதனால் தொட்டியில் மண்ணுடன் தேங்காய் நாரையும் சேர்த்தால் செடிக்கு விடும் தண்ணீர் மிகக்குறைந்த அளவே தேவைப்படும். தொட்டிக்கு அடியில் துளை போட்டு வைப்பது, அதிகப்படியான நீரை வெளியேற்றி செடி அழுகாமல் காக்கும்.
நீங்களே தயாரிக்கலாம் பூச்சிவிரட்டி!
'அட என்னங்க நீங்க? உரம், தண்ணீர் இதைவிட பெரிய பிரச்னை... பூச்சிதாங்க. அதனால, குழந்தைங்க இருக்குற வீட்டுல தோட்டம் வைக்கவே பயமா இருக்கு?' என்று தயங்குபவரா நீங்கள்? கவலையே வேண்டாம். பூச்சிகளையும் ஓடஓட விரட்டி விடலாம். அதற்காக நிறைய பணம் கொடுத்து அபாயம் நிறைந்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை வாங்கவே கூடாது. இயற்கை முறை பூச்சிவிரட்டிகளை நாமே தயாரிக்கலாம்.
100 கிராம் இஞ்சி, 100 கிராம் பூண்டு, 10 கிராம் பெருங்காயம்... இவை மூன்றையும் அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் 15 நாட்கள் ஊற வையுங்கள். பசுவின் கோமியம் கிடைத்தால்... 1 லிட்டர் கோமியத்துடன் 9 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள். இதுதான் பூச்சிவிரட்டி. இதை, 9 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்கிற விகிதத்தில் கலந்து தெளியுங்கள். அளவுக்கு அதிகமாக தெளிப்பதும் ஆபத்து. அது, செடியையே கருக வைத்துவிடும். தோட்டத்துக்கு நடுவில் சாமந்திப்பூ செடியை வைத்தாலும் பூச்சிகள் நெருங்காது.
பராமரிப்பு ரொம்ப முக்கியம்!
பூந்தொட்டிகளுக்கு அடியில் பிளாஸ்டிக் ட்ரே வைப்பதன் மூலம் உபரி நீர் சிந்தி தரை அழுக்காவதை தவிர்க்கலாம். மழைக் காலங்களில் வானம் பார்த்தவாறு பூந்தொட்டிகளை வைக்க வேண்டாம். கொல்லைப்புற தோட்டங்களில் சேரும் சருகுகள், தேவையற்ற தழைகளைத் திரட்டி, அவற்றையும் உரம் தயாரிக்கப் பயன்படுத்துங்கள். வீட்டின் பின்புறம் குழி எடுக்க வசதியுள்ளவர்கள் குழிக்குள் இவற்றை போட்டுக் கொண்டே வந்து உரமாக்கலாம். அப்படி வசதியில்லாதவர்கள் பெரிய டிரம்களில் கொட்டி ஒவ்வொரு தரமும் அதன் மீது மண்ணைப் போட்டு மூடிக்கொண்டே வருவதுடன் அடிக்கடி அதை குச்சியால் கிளறி மக்க வைத்தும் உரம் தயாரிக்கலாம்'' என்ற இஸ்மாயில்,
''வீட்டுத் தோட்டம் என்றாலே பூச்சிகள் உள்ளிட்டவை வரும் என்கிற பயம் தேவையில்லை. தோட்டத்தில் குப்பைகளை சேரவிடாமல் சுத்தமாக வைத்திருந்தாலே போதும்'' என்று வழிகாட்டினார்!
என்ன... இனி, உங்கள் வீட்டில் மல்லிகை மணக்கும்... ரோஜாப்பூ கண் சிமிட்டும்... வெண்டைக்காய், பரங்கிக்காய் பளீரிடும்... சரிதானே!
(Thanks to Vikatan)

Monday, July 08, 2013

தோனி போல வருமா?

மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர்

இளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் !கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்படடதால் தோனியை கீபிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம் .

இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டு இருந்தார் .டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும் இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக குறிப்பார்.
அப்பா உடற்பயிற்சி வகுப்புகளுக்கு போக சொன்னால் கடுக்காய் கொடுத்து விட்டு நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவார் .இப்பொழுதும் ஒரு லிட்டர் பாலை மில்க் ஷேக் அல்லது சாக்லேட் சுவையில் குழந்தை போல விரும்பி சாப்பிடுவார்

இளம் வயதில் பீகார் அணியில் ஆடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது பல போட்டிகளில் ஒற்றை ஆளாக டோனி சதம் அடிக்க அணி தோற்றுக்கொண்டு இருந்தது.அதனால் பெரும்பாலும் தோனியால் இந்தியா அணிக்குள் நுழைய முடியவில்லை.அந்த தருணத்தில் இந்தியா அளவில் இளம் திறமைகளை கண்டறியும் வேலையை பி.சி.சி.ஐ செய்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு தோனி இந்தியா ஏ அணிக்காக ஆடி கென்யா ஜிம்பாப்வே அணிகளோடு சதம் அடித்தது அப்போதைய கேப்டன் கங்குலி கண்ணில் பட்டது திருப்புமுனை.வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார்.ரன் சேர்க்காமல் ரன் அவுட் ஆனார்.

எனினும் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வைப்பிகுகள் தந்தார் கங்குலி.பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் 148
அடித்து கவனம் பெற்றார்.இலங்கையுடன் ஆன போட்டியில் செஸ் செய்கிற பொழுது 183 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்சம் என்கிற உலக சாதனையை செய்தார். அதற்கு பின் ஐயர்லாந்து தொடரில் இந்தியா அணியின் துணைக்கேப்டன் ஆனார்.ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பைக்கு இந்தியா அணியின் தலைவர் ஆனார். அப்பொழுது அதிரடியான மற்றும் வித்தியாசமான முடிவுகளால் கோப்பையை பெற்றுத்தந்தார்

வாழ்வின் உச்சபட்ச நிகழ்வு நடந்தது ஏப்ரல் இரண்டு 2011 அன்று. சச்சினின் இறுதி உலகக்கோப்பை என அனைவரும் சொன்ன இறுதிப்போட்டியில் அணி மூன்று விக்கெட் இழந்து திணறிக்கொண்டு இருந்த பொழுது அது வரை தொடரில் அரை சத்தம் கூட அடிக்காத தோனி களம் இறங்கி ஆடி தொண்ணுற்றி ஒரு ரன்கள் அடித்தார். அப்பொழுது சச்சின் நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் தலை சிறந்தவர் என புகழ்ந்தார்

உலகக்கோப்பை வென்றதும் தோனி சொன்ன ஒரு உண்மை சம்பவம். 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் பொழுது தோனி டிக்கெட் கலெக்டர் ஆக கரக்பூரில் வேலை பார்த்து வந்தார் ! அப்பொழுது அடிக்கடி ஸ்கோர் கேட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து ஆமாம். இவர் உலகக்கோப்பையை ஜெயிக்க போறார் என நக்கலாக ஒரு பிரயாணி அடித்த கமென்ட் தான் மிக சாதாரணம் ஆன என்னை இவ்வளவு தூரம் உத்வேகப்படுதி உள்ளது என்பார் தோனி

லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும்;சச்சின் மற்றும் கில்க்ரிஸ்ட் பிடித்த விளையாட்டு வீரர்கள். வீடியோ கேம் வெறியர். கவுன்ட்டர் ஸ்ட்ரைக் பிடித்த வீடியோ கேம். புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். ஹர்லி டேவிட்சன் பைக்குகள் எல்லாமும் அவரிடம் உண்டு .

ஆடுகளத்தில் கோபப்பட்டு தோனியை பார்க்க முடியாது. எவ்வாளவு சிக்கலான நிலையிலும் தோனி அவ்வளவு அழகாக புன்னகைப்பார். இளம் வயதில் வீட்டில் அம்மா உணவு தயாரிக்க வறுமையால் நேரம் அதிகம் ஆகும்.அப்பொழுதில் இருந்து இந்த பொறுமை உடன் இருக்கிறது என சிம்பிளாக சொல்வார்

ஜார்கண்ட் அரசாங்கம் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க ஸ்கூல் செல்வோம் நாம் என்கிற விளம்பரத்தில் தோனியை நடிக்கக் கூப்பிட்ட பொழுது ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்

தோனி உச்சபட்ச தன்னம்பிக்கை காரர். உலககோப்பையை வென்றதும் உங்கள் அடுத்த இலக்கு என்ன என கேட்டதும் ,"ஐ.பி.எல் சாம்பியன்ஸ் லீக் .,இரண்டு உலகக்கோப்பை ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை வெல்ல வேண்டும் .முடியாதா என்ன ?"என்றார் .அது தான் தோனி.

நன்றி : பூ.கொ. சரவணன்

(Thanks to Tamil karuthukalam)

Friday, June 28, 2013

டா வின்சி போல யோசி!

டா வின்சி போல யோசி!

லியோனார்டோ டா வின்சியை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்? உடற்கூறு வல்லுநர், பொறியியலாளர், நகர வடிவமைப்பாளர், ஆடை, மேடை வடிவமைப்பாளர், சமையற்கலை நிபுணர், அறிவியல் அறிஞர், புவியியலாளர், கணிதவியல் வல்லுநர், நகைச்சுவைப் பேச்சாளர், இசைக்கலைஞர், ஓவியர், தத்துவமேதை, இயற் பியல் மேதை... இன்னும் என்னவெல்லாம்?

இந்த எல்லா அறிமுகங்களுக்கும் பொருத்த மானவர், லியோனார்டோ டா வின்சி. 'சரி... இந்த உலகத்தை வடிவமைத்த மேதைகளில் வின்சிக்கு மறுக்க முடியாத பங்கு இருக்கிறது. 'அவரைப் போலவே நாமும் யோசித்து ஜீனியஸ் ஆகலாம் என்று பொய் நம்பிக்கை ஊட்டுவதைப்போல உள்ளதே 'think like da vinci' என்ற புத்தகத்தின் தலைப்பு' என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், வாவ்... நீங்கள் டா வின்சிபோல யோசிக்கத் துவங்கி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!'இப்படி ஆரம்ப வரிகளிலேயே உற்சாகம் தெளிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் ஜே.கெல்ப்.

டா வின்சி மறைந்தபோது, 'இந்த மனிதரின் மறைவு உலகத்துக்கே ஈடுசெய்ய முடியாதது. இயற்கையாலேயே இன்னொரு டா வின்சியை சிருஷ்டிக்க முடியாது!' என்பதுதான் அவருக்கான அஞ்சலி. அப்படிப்பட்ட ஒருவர்போல நாம் சிந்திக்க முடியாதுதான். ஆனால், அவர் தனது சிந்தனைகளை மேம்படுத்தக் கையாண்ட வழி முறைகளை அறிந்துகொண்டு, நமது சிந்தனைகளையும் ஒரு புதிய பாதையில் பயணிக்கச் செய்யலாம் என்று உத்தரவாதம் தருகிறார் மைக்கேல்.

ஆர்வத்துக்கு அணை போடாதீர்கள்!

ஜீனியஸ்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. பேசத் தொடங்கியவுடன்குழந்தை கள் எதைப் பார்த்தாலும் அது தொடர்பான கேள்வி களைக் கேட்டுக்கொண்டே இருக்கும். 'அம்மா, இந்த கிரைண்டர் எப்படி வேலை செய்கிறது?', 'நான் எப்படிப் பிறந்தேன்?', 'அப்பா, பாப்பா எங்கே இருந்து வருகிறது?', 'ஏன் ஞாயிற்றுக்கிழமை ஐஸ்க்ரீம் கடை லீவு?', இப்படி இப்படி. இந்த உலகத்தில் ஜீனியஸ் என்ற அடைமொழி வழங்கப்பட்டவர்கள் அனைவரும் குழந்தை மனநிலையில் தான் தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள். டா வின்சிக்குப் பெண்கள், மது, செல்வம், செல்வாக்கு, மதப்பற்று என எந்த விஷயங்களும் கிளர்ச்சியூட்டவில்லை. மாறாக, எதைப்பற்றியும் எப்போதும் கேள்விகள் எழுப்பிக்கொண்டே இருப்பதுதான் அவரை எப்போதும் துடிப்பாகவைத்திருந்தது என்கிறார். எப்போது எந்தக் கேள்வி எழுந்தாலும், தன்னுடைய சின்னக் குறிப்புக் கையேட்டில் குறித்து வைத்துக்கொள்வார் டா வின்சி. பின்னர், அவற்றுக் கான பதிலுக்காக மண்டையை உருட்டிக்கொண்டு இருப்பார்.

நீங்களும் எந்தச் சின்னச் சம்பவமாக இருந்தாலும், அதைப்பற்றி டாப் 10 கேள்விகள் எழுப்பிப் பழகுங்கள். உதாரணமாக, ஒரு பறவை பறக்கிறதென்றால்,

ஏன் அதற்கு இரண்டு சிறகுகள்?

ஏன் அவற்றுக்கு உடல் முழுக்க இறகுகள்?

அது எப்படி மேலெழும்புகிறது?

எப்படித் தன் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது?

எப்படி வேகம் எடுக்கிறது?

எப்படி அவற்றால் பறக்க முடிகிறது?

அது எப்போது தூங்கும்?

அதன் பார்வைத் திறன் எவ்வளவு?

எப்படி அது உண்ணும்?

பாதி வழியில் மழை பெய்தால் தொடர்ந்து பறக்குமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை யோசிக்கத் தொடங்கினாலே, பறவையின் மறுபக்கம் குறித்துப் பல புதிய விஷயங்களை அறிந்துகொள்வோம்தானே! நீங்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது இல்லை.ஆனால், அதற்கான உங்கள் சிந்தனை நிச்சயம் உங்களுக்குள்ளேயே ஓர் உற்சாகத்தை ஊற்றுவிக்கும்!

எனது ப்ளஸ், மைனஸ்!

1) எனது பலம், சிறந்த குணங்கள் என்ன?

2) எனது பலவீனம், திருத்திக்கொள்ள - கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

3) இன்னும் திறமையான, உதவும் மனப்பான்மை கொண்ட, சின்ஸியரான நபராக ஆளுமையைவளர்த்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

அதிகபட்சம் ஆறு மாத இடைவெளிகளில் இந்த மூன்று கேள்விகளையும் உங்களுக்கு நெருக்கமான நலன்விரும்பிகளிடம் கேட்டுப் பதில்களைப் பெறுங்கள். நேர்மையான பதில்களுக்கு ஏற்ப உங்கள் மனப்பான்மையில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள் ளுங்கள். கல்லூரி-அலுவலகங்களில் உங்கள் ஜூனியர், நீங்கள் எதிரியாக நினைக்கும் நபரிடம்இருந்து வரும் பதில்களைக்கூட உதாசீனப்படுத்தாதீர்கள். பதில் கள் நீங்கள் கேட்க விரும்பாதவையாக இருந்தால், உஷார் ஆக வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து உடனடியாகச் செயல்படுங்கள்!

எனி டைம் மாணவன்!

கல்லூரிக் காலம் முடிந்து வேலைக்குச் சேர்ந்து, திருமணம் முடித்து, ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதும் இந்த உலகம்பற்றி அனைத்தும் அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர் என்ற அந்தஸ்தை நமக்கு நாமே சூட்டிக் கொள்கிறோம். அங்கேதான் நாம் தங்கித் தேங்கிப்போகி றோம். டா வின்சி மரணப் படுக்கையில் விழும் கடைசி நொடி வரை ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டு இருக்கும் மாணவராகவே இருந்தார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... நமது வாழ்வின் வசந்த காலமாக பள்ளி, கல்லூரிப் பருவங்களைத்தானே ஆயுளுக்கும் குறிப்பிடு வோம். காரணம், அந்தக் காலங்களில் நம்மை உற்சாக மாக வைத்திருக்கும் அந்த மாணவ மனப்பான்மை தான். புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது நம்மை அறியாமல் நமது மனது தனது கதவு, ஜன்னல் களை அகலத் திறந்து வைத்துக்கொள்கிறது. புதிதாக ஓர் ஆடையோ, செல்போனோ, கார் - பைக்கோ வாங்கும்போது எப்படிக் குதூகலம் அடைகிறோமோ, அதேபோலத்தான் நமது அறிவு அப்டேட் ஆகும்போது உற்சாகமாக இருக்கும். புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது, கிடார், நீச்சல், சமையல், டிரைவிங் பழகுவது என சுவாரஸ்யமான பயிற்சிகள் வாழ்வை இன்னும் எளிமை ஆக்கும். அவற்றில் கவனம் செலுத் தலாம்.

ஆனால், எந்தப் பயிற்சியில் ஈடுபட்டாலும் சில விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். பயிற்சி யின்போது நாம் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நாம் ஒரு குழந்தையைப் போலத்தான் என்பதை உணர்ந்துகொண்டு, தெரிந்தவர் கள் வழிநடத்துவதை - அவர்கள் நம்மைவிட எவ்வ ளவு சிறியவர்களாக இருந்தாலும் - ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பயிற்சியை ஆரம்பித்தால், அதைமுடிக் காமல்விடக் கூடாது என்ற உறுதியுடன் இருக்கவேண் டும்!

வாருங்கள்... நாம் அனைவரும் டா வின்சியின் இழப்பை ஈடுசெய்வோம்!

- கி.கார்த்திகேயன்

(thanks to Vikatan.com)

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான்

ரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சின்னாபின்னமானது. என்றாலும், சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக அது எழுந்துவரக் காரணமாக இருந்தவர்கள் இருவர். அந்த இருவரும் ஜப்பானியர்கள் அல்ல, அமெரிக்கர்கள்!            

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒருபக்கம்; இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் எதிர்பக்கம். 1939-ல் தொடங்கிய யுத்தம் 1945 வரை நீடித்தது.  

ஆகஸ்ட் 6, 1945, அதிகாலை 8.15 மணி. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. உலக வரலாற்றின் முதல் அணுகுண்டு வெடிப்பு. நம்பவே முடியாத நாசம். குண்டு வெடித்த பகுதியிலிருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த 90,000 கட்டடங்கள் மண்ணோடு மண்ணாயின. மூன்றில் இரண்டு பகுதி ஹிரோஷிமா அழிந்தது. சுமார் 70,000 பேர் உடனே மரணமடைந்தார்கள். மேலும், 70,000 பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல நோய்களுக்கு ஆளாகி மரணமடைந்தார்கள். ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுக்கு அமெரிக்கா வைத்த சங்கேதப் பெயர் குட்டிப் பையன் (Little Boy).

மூன்று நாட்கள் ஓடின. ஜப்பான் அடிபணியவில்லை. ஆகஸ்ட் 9. காலை மணி 11.02. குண்டுப் பையன் (Fat Boy) என்கிற பெயரில் இன்னொரு அணுகுண்டை நாகசாகி மீது வீசியது அமெரிக்கா. இதனால் 40,000 பேர் உடனே மரணமடைந்தார்கள். 30,000 பேர் கதிர்வீச்சுப் பாதிப்பால் மரணமடைந்தார்கள்.              
ஆகஸ்ட் 15. ஜப்பான் சக்கரவர்த்தி ரேடியோவில் பேசினார், 'என் கண்ணீரை விழுங்கிக்கொண்டு சரணாகதிக்குச் சம்மதிக்கிறேன்.' ஜப்பான், அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாட்டின்
பொருளாதாரம், தொழிற்சாலைகள், பிஸினஸ் அத்தனையுமே நொறுங்கிப் போயிருந்தன. சரணாகதிக்குப்பின், பிஸினஸ் மெள்ள மெள்ள முளைக்கத் தொடங்கியது.

ஜப்பானில் மக்கள் தொகை மிக மிகக் குறைவு. உள்ளூர் மார்க்கெட் இயற்கையிலேயே சிறியதாக இருப்பதால், ஜப்பான் தன் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியை நம்பியிருந்தது. வெளிநாட்டு மார்க்கெட்களைப் பிடிக்க முனைந்த ஜப்பான் குறைந்த விலையில் பொருட்களைத் தயாரித்தது. தரம் இரண்டாம் இடம்தான். இதனால், ஜப்பான் தயாரிப்பு என்றாலே, விலையும் தரமும் குறைந்த சீஃப் சாமான் என்கிற கண்ணோட்டம் உலக அரங்கில் உருவானது.

ஜப்பானை நிர்வகிக்கும் பொறுப்பை ஜெனரல் மெக் ஆர்தர் (MacArthur) வசம் ஒப்படைத்திருந்தது அமெரிக்கா. ஜப்பானின் வளர்ச்சி தொடர்கதையாக வேண்டுமென்றால், உயர்ந்த தரம் என்னும் அடித்தளம் அவசியம் என்று மெக் ஆர்தர் உணர்ந்தார். மக்களிடமும், தொழில் அதிபர்களிடமும் இந்த விழிப்புஉணர்வை உருவாக்க ரேடியோவில் இதுபற்றி அடிக்கடி பேசினார். நாட்டின் தலைவரே நேரடியாக எடுத்த முயற்சியால் தரத்தின் அவசியத்தை மக்கள் மனதில் பதிய வைத்தது.

இதற்காக மெக் ஆர்தர் சிலரை களத்தில் இறக்கினார். அவர்களுள் முக்கியமானவர் ஹோமர் சாராஸோன் (Homer Sarasohn). போரின்போது ஜப்பானின் தொலைதொடர்பு வசதிகளைக் குறிவைத்து அழித்திருந்தது அமெரிக்கா. ஜப்பான் தலைதூக்க இந்த வசதிகளை மீண்டும் எழுப்ப வேண்டும். அப்படி எழுப்பும்போது வெறுமனே ரிப்பேர் வேலை பண்ணாமல் உலகத் தரத்தோடு உருவாக்க வேண்டும். இந்த கனவை நனவாக்க மெக் ஆர்தர் அழைத்து வந்தவர் சாராஸோன்.


சாராஸோனுக்கு அப்போது வயது 29 மட்டுமே. அவரால் சிதிலமாகிப் போன ஜப்பானை மீண்டும் கட்ட முடியுமா என பலரும் நினைத்தனர். மெக் ஆர்தரா கொக்கா? சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருந்தார்.

சாராஸோன் மேஜிக் செய்தார். ரேடியோ, தந்தி, ராடார் துறைகளில் முக்கிய கம்பெனிகளைத் தேர்ந்தெடுத்தார். அதன் தலைவர்களாக மகா திறமைசாலிகளைச் சல்லடையிட்டுச் சலித்தார்.  இவர்கள் அனைவருக்கும் தரத்தின் அவசியம் பற்றி பயிற்சி கொடுத்தார். இல்லை, மூளைச் சலவையே செய்தார். உயர்மட்டத்தில் ஊற்றிய இந்த அறிவு நீர் அடிமட்ட ஊழியர் வேர் வரை கசிந்தது. தரம் இந்த கம்பெனிகளின் தாரக மந்திரமானது.

ஆனால், ஜப்பான் உற்பத்தி செய்த இப்பொருட்களின் தரம் மட்டும் உயர்ந்தால் போதுமா? நாட்டின் அத்தனை தொழிற்சாலைகளும் தர மந்திரத்தை உச்சரிக்க வேண்டாமோ? இந்த அறிவுப் பரப்பலுக்கு சாராஸோன் ஒரு உலக மேதையைத் தயாராக வைத்திருந்தார். அவர் எட்வர்ட்ஸ் டெமிங் (Edwards Deming).

1950-ல் சாராஸோன், டெமிங்கை ஜப்பானில் ஒரு கருத்தரங்கு நடத்துமாறு அழைத்தார். அதில் அவர் பேசிய பேச்சு சூப்பர் டூப்பர் ஹிட். டெமிங் ஜப்பானின் தரக் கடவுளானார். அவரது கொள்கைகளை Union of Japanese Scientists and Engineers (JUSE)என்கிற முன்னணி அமைப்பு 30 நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தி நாடெங்கும் பரவ வைத்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் 20,000 அறிவியல் வல்லுநர்களும்,     விஞ்ஞானிகளும் டெமிங் கொள்கையில் தேர்ச்சி பெற்றார்கள். ஜப்பானுக்கு என்ன தேவையோ, அதைத் தருகிற தேவதூதன் ஆனார் டெமிங்.

குவாலிட்டி மேனேஜ்மென்ட் என்கிற தர நிர்வாகத்தின் வரலாற்றுக்கு  நான்கு காலகட்டம். 1. பரிசோதனைக் ( Inspection) காலம், 2. தரக் கட்டுப்பாடு (Quality Control) காலம், 3. தர உறுதிப்படுத்துதல் (Quality Assurance)  காலம், 4. முழு தர மேலாண்மை (Total Quality Management) காலம்.

அமெரிக்கா போன்ற நிர்வாகத் துறையில் முன்னணியில் நிற்கும் நாடுகள்கூட முதல் மூன்று நிலைகளைக் கடந்திருக்க, ஜப்பானோ, முழு தர மேலாண்மை என்கிற உச்சத்தைத் தொட்டுவிட்டது.

முழு தர மேலாண்மை பிற நிலைகளைவிட ஏன் மேலானது? முதல் மூன்று நிலைகளிலும் தரக் கட்டுப்பாடு தரப் பரிசோதனையாளர்கள் அல்லது உற்பத்தி நிர்வாகிகளின் பொறுப்பு. ஆனால், முழு தர மேலாண்மையில் தரம் என்பது முதலாளி தொடங்கி காபி, டீ வாங்கிவரும் ஆபீஸ் பையன் வரை அத்தனை ஊழியர்கள் மனதிலும் தவிர்க்க முடியாத விஷயமாகப் பதியப்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஊழியரிடமும் தர உணர்வு, முயற்சி எடுக்காமல் அனிச்சைச் செயலாக வருகிறது.

முழு தர மேலாண்மையை கம்பெனிகளில் நிறைவேற்றுவது எப்படி? இதற்காக டெமிங் 14 கட்டளைகள் வகுத்தார். (பார்க்க பெட்டிச் செய்தியில்!) இந்த பதினான்கு கட்டளைகள் முகேஷ் அம்பானி முதல் மூலக்கடை முத்து வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய வேதபாடம். நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், ஜப்பானைப் போல் ஜெயித்துக் காட்டுவீர்கள்!
(கற்போம்)
படங்கள்: வி.ராஜேஷ், ரா.நரேந்திரன்.


1. நமது தயாரிப்புகள்/சேவைகளின் தரத்தை மேம்படுத்துவது, போட்டியில் முன்நிற்பது, தொழிலில் நீடிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களிலிருந்து நாம் எப்போதும் விலகக்கூடாது.

2. இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட காலதாமதம், தவறுகள், குறைபாடான பொருட்கள், வேலைத்திறன் ஆகியவற்றை இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  

3. தரம் தயாரிப்பின் அங்கமாகட்டும்.

4. வாங்கும் மூலப் பொருட்களின் தரத்தை உயர்த்துவோம். விலையை மட்டும் அடிப்படையாக வைத்து மூலப் பொருட்கள் வாங்குவதை நிறுத்துவோம். விலை, தரம் ஆகிய இரண்டும் பொருட்கள் வாங்கும் அளவுகோல்கள் ஆகட்டும்.

5. பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடிப்போம். பொருட்கள்/சேவைகளின் தரத்தை தொடர்ந்து முன்னேற்றுவோம். விரயம் தொடர்ந்து குறைய வேண்டும்; ஒவ்வொரு செயல்பாட்டிலும் இவை வெளிப்பட்டு, உற்பத்தித் திறன் உயர்ந்து செலவுகள் குறைய வேண்டும்.

6. எல்லோருக்கும் பயிற்சி அவசியம். பயிற்சிக்கு நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் தன் வேலையைச் செம்மையாகச் செய்வதற்கான பயிற்சி தரப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கவேண்டும்.

7. நவீன மேற்பார்வை முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலதிகாரியின் கடமை, அவர் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் தம் பணிகளைச் சிறப்பாகச் செய்ய உதவுவது. தரம் உயர்ந்தால், உற்பத்தித் திறன் உயரும். மேலதிகாரிகள் சுட்டிக் காட்டும் குறைகள், இயந்திரச் சீர்கேடு, தவறான உபகரணங்கள், தவறான உற்பத்தி முறைகள் ஆகியவற்றில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. பயம், முன்னேற்றத்தின் முக்கிய எதிரி. தொழிலாளிகளும் அதிகாரிகளும் சுமூகமாகப் பழகுவதன் மூலம் பயத்தை ஒழிக்கலாம். நிறுவனத்தின் அத்தனை ஊழியர்களும் மாற்றங்களில் பங்கெடுக்க வேண்டும்.

9. கம்பெனியின் பற்பல துறைகளுக்குள்ளும் இருக்கும் பிரிவினைச் சுவர்களை அகற்ற வேண்டும். தயாரிப்புப் பொருட்கள்/சேவைகள் ஆகியவை தொடர்பான பிரச்னைகளை ஆராய்ச்சி, டிசைன், நிர்வாகம், உற்பத்தி ஆகிய எல்லாத் துறைகளும் ஓர் அணியாகத் தோளோடு தோள் கொடுத்து எதிர் மோத வேண்டும்.

10. தர உயர்வைச் செயல்படுத்தவும், விரயங்களைத் தடுக்கவும் தக்க முறைகளைத் தொழிலாளிகளுக்குக் கற்றுத் தரவேண்டும், இதைச் செய்யாமல், வெறும் கோஷங்கள், போஸ்டர்கள், வார்த்தை ஜாலங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவது பயனற்ற வேலை.  

11. இலக்குகளை எண்ணிக்கைகளில் மட்டுமே வைப்பது பலன் தராது. தலைமைப் பண்புகளை வளர்க்க வேண்டும்.    

12. ஒவ்வொரு தொழிலாளியும், அதிகாரியும் தங்கள் வேலை குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

13. பயிற்சியால் எல்லோரும் சுய முன்னேற்றம் பெறச் செய்ய வேண்டும். எல்லா நிறுவனங்களுக்கும் நல்ல ஊழியர்கள் இருந்தால் மட்டும் போதாது, இவர்கள் பயிற்சியால் தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிருக்க வேண்டும்.

14. தரத்தைத் தொடர்ந்து உயர வைக்கும் நடவடிக்கைகளில் நிர்வாகத் தலைமை முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.

(Thanks to Vikatan.com)

Thursday, June 27, 2013

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு •

நன்றாகக் குளிக்க வேண்டும்
வெந்நீராக இருந்தால் மிகவும் நல்லது
இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத‌
தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

தெருவில் இறங்கி நடக்கும்போது
அடிக்கடித் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை

அதிக இறுக்கம் அதிக இணக்கம்
இரண்டுமே நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும்
குழந்தைகளை இயல்பாகக் கொஞ்சவேண்டும்

மர்மமாகப் புன்னகைப்பவர்கள்
கேட்காமலேயே தம் பேச்சை மாற்றுபவர்கள்
செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள்
எல்லோரையும் நாகரீகமாக வணங்கலாம்

சாதுரியமாக விரைவாக‌
தப்பிச் சென்றுவிட வேண்டும்
நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருதும்

தனித்த அறை ஒன்றில்
மனங்கசந்து அழும்போது
கதவு தட்டும் ஓசைகேட்டு
கண்களைத் துடைத்துக்கொள்ள வேண்டும்

எல்லையற்றது
இந்த உலகின் தீமை
எல்லையற்றது
இந்த உலகின் கருணை!

-Manushya Puthiran

Wednesday, June 26, 2013

Today's Quote :)

தீயா வேலை செய்யனும் குமாரு....திரை விமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!

    வணக்கம். நலம்தானே?

மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. நாம் இன்று பார்க்க இருக்கும் படம் தீயா வேலை செய்யனும் குமாரு... வாங்க படத்தை பார்க்கலாம்.

  படத்துல ரெண்டு கதாநாயகன்ங்க. இல்ல இல்ல சந்தானம் சேர்த்து மூணுங்க. ஏன்னா படம் முழுக்க கூட வருவது இவருதாங்க. குமார்(சித்தார்த்) இவரப் பத்தி மொதல்ல பார்க்கலாம். இவர் குடும்பத்துல கொள்ளு தாத்தாவுல இருந்து இவரோட கடைசி அக்கா வரைக்கும் காதல் திருமணம் செய்தவர்கள். ஆனால் குமாருக்கோ காதல் என்றால் வேப்பங்காய். பெண் என்றால் பாகற்க்காய் :). அதற்க்கு காரணமாக அவரது சிறுவயது பிரச்சினைகளையும், அவர் பெண்களிடம் வாங்கிய பல்ப்புகளையும் காமிக்கிறார்கள். இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் பணிபுரியும் இடத்தில் இவரை விட உயர்ந்த நிலையில் ஜார்ஜ்(கணேஷ்) இருக்கிறார். செம மேன்லியாக இருக்கும் இவர் மேல் அனைத்து பெண்களுக்கும் ஒரு கண்ணு.

  சஞ்சனா(ஹன்சிகா) இவர்களுடன் வேலையில் சேர, அத்தனை பேரும் மொய்க்க இதில் ரெண்டு கதாநாயகன் மட்டும் விதிவிலக்கா என்ன? சித்தார்த் காதலில் விழ ஆனால் அதற்க்கு கணேஷ் குறுக்கே வருகிறார். இதனால் மோக்கியா என்ற பெயரில் வரும் சந்தானம் இவருக்கு முழு பயிற்ச்சி அழிக்கிறார். பயிற்ச்சி முழுவதும் வயிறு குலுங்க குலுங்க சிரிப்புதாங்க. 
இந்த பயிற்ச்சிக்கு அப்புறம் இவர் ஹன்சிகாவின் காதலைப் பெற்றாரா? என்பதே கதை.


  ஆரம்பத்தில் அப்பாவியாக வரும் சித்தார்த் பெண்களை அசர வைக்கிறார். எப்படி பெண்களை புகழ வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார். என்ன மாதிரி சராசரி ஆளுங்கதான் உங்க கூட எப்பவும் நாய் மாதிரி சுத்தி வருவாங்க என்று சொல்வதிலாகட்டும், சந்தானம் வைக்கும் பரிச்சைகளில் திருதிரு வென்று முழிப்பதில் ஆகட்டும் மிக அருமை. இயல்பாக நடித்திருக்கிறார்.

  மோக்கியாவாக வரும் சந்தானம் மனதை அள்ளுகிறார். ஒவ்வொரு முறை அவர் உபதேஷம் அளித்து விட்டு பணத்தைக் கறப்பது மிகவும் கலாட்டா. ஹன்சிகாவை காதலிக்க ஜடியாவைக் கொடுத்துவிட்டு அது தன் தங்கைதான் என்று தெரித்ததும் வில்லனாக அவதாரம் எடுப்பது விசேஷ சிறப்பு. பாலியல் தொழில் செய்யும் இடத்தில் இவரும், மனோபாலாவும் அடிக்கும் கூத்து சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியிலும் சந்தானம் தன்னுடைய நடிப்பிலும், இவர் ஆப்பிள் முதல் ஜபேட் வரை பெண்களை வகைப்படுத்தி அடிக்கும் காட்சியிலும் மிக மிக கலக்கல்.


   வசனங்கள் நன்றாக இருக்கிறது உதாரணத்திற்க்கு காலையில தென்னமரம் வைத்துவிட்டு, சாயங்காலம் சட்னி கேட்டா எப்படி போன்ற வசனங்கள் சிறப்பு. இசை சத்யா சில பாடல்கள் கேட்கும்படி உள்ளது. ஆனால் மனதில் நிற்க்க வில்லை.

  சுந்தர் C இயக்கத்தில் வந்த இன்னொரு கலகலப்பு. எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் காமெடி மட்டுமே பிராதானமாக வைத்து எடுக்கப் பட்ட படும். ஹன்சிகா கொஞ்சம் உடம்பைக் குறைத்து, ரசிகர்களுக்கு எனர்ஜியை ஏத்தி இருக்கிறார். குஷ்பூவின் உடை வடிவமைப்பில் மின்னுகிறார். சில முகபாவங்கள் குஷ்பூ செய்வது போலவே நமக்கு தோன்றுகிறது.


 எல்லாரும் திருட்டு பசங்க என்று படத்தை முடிக்கிறார்கள். நீங்களும் படத்தைப் பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க நண்பர்களே.

மீண்டும் சந்திக்கலாமா?

Monday, June 24, 2013

படித்ததில் பிடித்தது :)

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.


* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.


* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.


* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.


* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.


* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.


* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.


* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.


* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.


** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்

Saturday, May 25, 2013

சூது கவ்வும் திரைவிமர்சனம் (Soodhu Kavvum movie review)

அன்புள்ள நண்பர்களே!!


வணக்கம். 


சமீபகாலமாக நமக்கு நிறைய வித்தியாசமான படங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதுவும் குறைந்த முதலீட்டில், புது முகங்களை வைத்து எடுப்பது மிகவும் சிறப்பு. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் மிகவும் வித்தியாசமாகவும், நகைச்சுவையை கலந்தும் கொடுப்பது. அதே வரிசையில் நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் சூது கவ்வும்.


தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணம் போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இவர். அதைப் போலவே இந்த படத்திலும் தன் இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். 


சரி வாங்க படத்தை பார்க்கலாம் . இந்த படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான். தாஸ் (விஜய் சேதுபதி) பொதுவாக கடத்தல் தொழில் செய்பவர். ஆனால் கொள்கையோடு சின்ன சின்ன கடத்தல் செய்பவர். அது என்னவென்றால் ஐந்து கொள்கைகளை வைத்துக் கொண்டு அதை மீறாமல் கடத்த வேண்டும் என்று எண்ணுபவர். அவருடன் காதலியாக பயணிக்கிறார் சஞ்சிதா ரெட்டி. மூன்று நண்பர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒரு சண்டையில் தாஸ் உடன் சேர்கிறார்கள். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஒரு மந்திரியின் மகனைக் கடத்த திட்டமிடுகிறார்கள். அதனால் இவர்களுக்கு பெரும் லாபம் இரண்டு கோடி கிடைக்கும் என்று தோன்றுவதால். ஏற்கெனவே அரசியல்வாதிக்கும், மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் மகன் தானே தன்னை கடத்த திட்டமிடுகிறான். இவர்களும் அதே நாளில் திட்டமிடுகிறார்கள். எப்படியோ கடத்தியும் விடுகிறார்கள். மகனும் இதற்க்கு கூட்டாக இருப்பதால் 50% என்று பிரித்துக் கொள்வதாக முடிவு செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதியோ இவர்கள் கேட்கும் தொகைக்கும், பேச்சுக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. நான் போலிஸ் மூலம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார். முடிவு என்ன ஆனது? பணம் கிடைத்ததா? இருவரும் பகிர்ந்து கொண்டார்களா? இல்லை காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார்களா? என்பதுதான் மீதிக்கதை.




கதையின் மிகப் பெரிய பலம் நகைச்சுவைதாங்க. ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் நகைச்சுவையை சேர்த்திருப்பது மிகவும் ருசிக்கிறது. தாஸின் கொள்கைகளையும், அவன் செய்யும் சின்ன கடத்தலையும் காட்டுவது மிகவும் ரசிப்பு. கடத்தி முடித்து விட்டு பணம் கைக்கு வந்ததும், டிப்ஷ் கொடுத்து அனுப்புவது இதுவரை பார்க்காத ஒரு காட்சி. சஞ்சிதா ரெட்டியை ஒரு கற்பனை காதலியாக காட்டி இருக்கிறார்கள். அவரும் அவருடைய பங்கை தெளிவாக செய்திருக்கிறார்.இவரை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் காட்சி மிகவும் இனிமை. அரசியல் வாதியாக பாஸ்கரும், அவருடைய மகனாக அருமை பிரகாசமும் நடித்திருக்கிறார்கள். அருமை பிரகாசம், தன்னுடைய அப்பாவிடம் எப்படி பணம் வாங்குவது என்பதை அவர் செயல்படுத்தும் காட்சி அனைவரிடமும் சிரிப்பை ஏற்படுத்தும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களை பிடிப்பதற்க்காக வரும் காவல்துறை அதிகாரி பிரம்மா சொல்லவே வேணாங்க அவ்வளவும் சுவாரஸ்யம் மிகுந்த பகுதிகள். ராதா ரவி ஓரிரு காட்சியில் மட்டுமே வந்தாலும் மிகவும் கணம்.


இப்படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் நலன் குமாரசுவாமி. இவர் நாளைய இயக்குனர் மூலம் அறிமுகமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தின் மூலம் நல்ல முத்திரையை பதித்து விட்டார் என்று நம்பலாம். இசை சந்தோஷ் நாராயணன். 


நிச்சயமாக பாராட்டவேண்டிய விஷயம் நகைசுவை, குத்துப்பாட்டு மற்றும் டூயட் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் கொடுத்திருப்பது.


வசனங்கள் உதாரணத்திற்க்கு இது இட்லின்னு சொன்னா, சட்னிக் கூட நம்பாது, சென்னைக்கு என்ன பண்ணலாம்ன்னு திட்டம் போட்டு வந்தவன் சாதிக்கல, என்னப் பண்ண போறோம்ன்னே தெரியாம வந்தவங்கதான் ஜெயிச்சிருக்காங்க போன்றவை மிகவும் சிறப்பு.


ஆரம்பக் காட்சிகளில் அடிக்கடி டாஸ் மார்க்கை காட்டி தண்ணி அடிக்க வைப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.


அதிகமான முதலீடு இல்லை, அனைவரும் புது முகங்கள், வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்பு. நிச்சயம் பாராட்டலாம்.


நீங்களும் உங்கள் கருத்தை சொல்லுங்களேன்?


மீண்டும் சந்திக்கலாமா?


வணக்கம். வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!