Tuesday, March 26, 2013

வத்திக்குச்சி திரைவிமர்சனம்


அன்புள்ள நண்பர்களே!!,

    வணக்கம். மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி :)
நல்லதுக்கே காலம் இல்ல, நல்லவங்க நாட்டுல குறைஞ்சிட்டாங்கப்பா... இப்படி பல வசனகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதை ஒட்டி வந்த படம்தான் நாம் பார்க்க போவதும். அட கண்டுபிடிச்சிட்டிங்களா? ஆமாங்க வத்திகுச்சி படம்தான்.

 மூன்று நபர்கள் தங்கள் வாழ்க்கையை கெடுத்துவிட்டான். அவனை உயிரோடு விடக்கூடாது என்று சபதம் போடுகிறார்கள். அந்த மூவரும் குறி வைப்பது ஒருவனைத்தான் என்று தெரிகிறது. சரி இந்த படத்துல ஹிரோதான் வில்லன் போல இருக்கு என்று நினைத்தால் அது இல்லங்க.

 சக்தி (தீலிபன்) ஷேர் ஆட்டோ ஓட்டுனர். அதே சமத்துவபுரத்தில் வசிப்பவர் மீனா(அஞ்சலி). சக்தி தினமும் மீனா வீட்டின் வாசலில் தவம் கிடக்கும் வாலிபர். ஒரு தலைக் காதல். இரத்தத்டோடு வரும் குணம் தான் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம். அது போல் இயல்பிலேயே அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட குடும்பம். ஒரு முறை குடும்பத்தோடு வெளியில் செல்லும் போது ஏடிம் ல் பணம் எடுக்கும் பொழுது அவர் கழுத்தில் கத்தியை வைத்து , பொது இடத்தில் 10000 ரூபாயை பிடிங்கிக்கொள்கிறார்கள். அது சக்தியின் மனதை மிகவும் பாதிக்கிறது. மிகவும் வலி வாய்ந்த விஷயம், மற்றவர்களால் ஏமற்றப்படுவதுதான். அது அவரை நிம்மதியாக தூங்க விடுவதில்லை. அது அவரை மிகவும் பாதிக்கிறது. இதனால் அந்த ரௌடி கும்பலிடம் அடிக்கடி மோதி பகையை வளர்த்துக் கொள்கிறார். தன்னையும் உயர்த்திக் கொள்கிறார். சண்டை பயில்கிறார், நன்றாக சாப்பிடுகிறார். கடைசியில் அவர்களுடன் மோதி 10000 பணத்தை திரும்ப வாங்கி விடுகிறார். ஆனால் அந்த ரௌடியின் மனதில் நிரந்தர ரௌடியாகி விடுகிறார். இவர் அனைவருக்கும் உதவி செய்வதால் , இவருக்கு இன்னும் சில எதிரிகளும் கிடைத்து விடுகிறார்கள். ஒரு சாதரண இளைஞன் முறியடித்து வாழ்வில் ஜெயிக்கிறானா? இல்லையா? என்பதே கதை.

 இதேப் போல் பல படங்கள் வந்தாலும். இதில் கொஞ்சம் நம்பும்படியாக சில காட்சிகளும், கதையமைப்பும் இருக்கிறது.
அதுவே படத்தின் மிகப்பெரிய பலம். அறிமுக நடிகரான திலீபன் , மிகவும் எதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார். அஞ்சலியிடம் வழியும் பொழுதும் சரி, உன்னையே மறந்தாலும், அன்னையை மறக்காதே என்று அன்னையை நெகிழ்த்துவதும் சரி, ஆக்ரோஷமாக  எதிரிகளிடம் மோதும் போதும் சரி அழகாக பலவிதமான பரிணாமங்களை காட்டுகிறார்.

அஞ்சலி சொல்லவே வேண்டாம். அவரின் அழகில் அனைவரும் நாய்குட்டிப் போல் தொடரலாம் :). அவரின் ஆங்கில வகுப்புக் கலாட்டா மிகவும் அருமை. அதுவும் எங்கே பார்த்துக் கொண்டாலும் "Have a nice day" என்று அலட்டிக்கொள்வது அருமை. ரொம்ப பந்தா பண்ணுவதும், அலட்டுவதும் கூட தனி அழகு. :)

சரண்யா பொன்வண்ணன், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான தாய். ஆனால் அவர் காட்டும் பாசம் நிஜமான பாசமாக நம்மை நெகிழ்த்துகிறது. ஆரம்ப காட்சியில் பையனுக்கு அறிவுரை சொல்லும் பொழுது, "அப்பா வாட்ஸ் மேனாம், அவங்க அண்ணன் வார்டு பாயாம். பெரிய படிச்ச குடும்பம்டா, எல்லாம் கவுர்ன்மெண்ட் உத்தியோகம். " என்று அவர் வெள்ளந்தியாக சொல்வது நம்மை அறியாமல் சிரிக்க வைக்கிறது.

நிறைய நட்சத்திரங்கள் உதாரணத்திற்க்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஜெயப்பிரகாஷ், சம்பத் , ஜகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் கின்ஸ்லின் முயற்ச்சியை நிச்சயமாக பாராட்ட வேண்டும். படத்தை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். ஒரு கிரைம் பட அளவிற்க்கு போரடிக்காமல் கொண்டு சென்ற விதம் அருமை. எல்லா படத்திலும் முடிவு காட்சியில் நாயகன் அடித்து நொருக்கி விடுவார் அனைவரையும். ஆனால் இந்த படத்தில் நல்ல லாஜிக் சொல்லப் படுகிறது. நிறைய ஓட்டைகளும் இருக்கிறது உதாரணத்திற்க்கு அவரை அடைத்து வைத்து விட்டு, எல்லா வேலையும் செய்து கொண்டிருப்பது.கடைசியில் கொள்வது போன்ற விஷயங்கள்.

இசை கிப்ரான்(Ghibran), சிலப் பாடல்கள் நன்றாக இருக்கிறது. ஆனால் மனதில் நிற்க்கவில்லை.



  ஒரு சாதரண மனிதன் விழித்துக் கொண்டு நடக்கும் தப்புகளை தட்டிக் கேட்க வைத்திருப்பது மிகவும் அருமை. சில நேரங்களில் நமக்கு பயமாக கூட இருக்கிறது, இப்படி நம் நாட்டில் எங்கோ நடக்கிறது என்பது. நம்மிடம் இது போன்ற படங்கள் கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நல்லது. நல்லது செய்ய நினைத்தால் நல்லதே நடக்கும் என்பதே நம்பிக்கை.

நீங்களும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மீண்டும் சந்திப்போமா?

Monday, March 18, 2013

கற்றுக் கொண்டதை வெளிப்படுத்தினால்தானே மகிழ்ச்சி...!



இங்கிலாந்து போலீஸ், தீவிரவாதக் கும்பல் ஒன்றை சுற்றி வளைக்க முற்பட்டபோது தீவிரவாதிகள் தப்பித்தனர். அவர்களுடைய நாய் மட்டும் பிடிபட்டது. ஆச்சரியம் என்னவென்றால், தீவிரவாதக் கும்பல் போய் வரும் இடங்கள், ஒளிந்திருந்த இடங்கள், எல்லாமே அந்த நாய்க்கு நன்றாகத் தெரியும்.

வருத்தம் என்னவென்றால், அந்த தீவிரவாதக் கும்பல் பேசிய ஹீப்ரு மொழியில் கட்டளை பிறப்பித்தால்தான் அந்த நாய்க்குப் புரியும். கட்டளைக்குக் கீழ்படியும்.

ஹீப்ரு மொழி தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி இதழ்களில் விளம்பரங்கள் கொடுத்தது காவல்துறை. ஒரே ஒருவர் வந்தார். அவரை வரவேற்று உபசரித்த காவல்துறை தங்களுக்கு வேண்டிய விபரங்களை அவரிடம் சொல்ல, அவரும் நாய்க்குக் கட்டளைகள் பிறப்பித்தார். நாயும் அடிபணிந்தது. மிக முக்கியமான துப்புகள் துலங்கின.

அவருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. பத்தாயிரம் பவுண்ட் தருவது, மேலும் கேட்டால் பேரம் பேசுவது என்று முடிவெடுத்தார்கள். அவர்கள் பணம் தரும் முன்னரே அந்த மனிதர் பத்தாயிரம் பவுண்டுகளை எடுத்து காவல்துறைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். காரணம் கேட்டபோது சொன்னார்.

“ஏதோ ஓர் ஆசையால் ஹீப்ருமொழி படித்தேன். இந்த மொழியைக் கற்க நான் போனது என் மனைவிக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. “இது வேண்டாத வேலை! இங்கிலாந்தில் நீ ஹீப்ரு மொழியில் பேசினால் ஒரு நாயும் கேட்காது” என்றாள். அதைப் பொய்யாக்கி என் மானத்தைக் காப்பாற்றினீர்களே! அதற்குத்தான்” என்றார் அந்த மனிதர்.

கற்றுக் கொண்டதை வெளிப்படுத்தினால்தானே மகிழ்ச்சி...!

(Thanks to Indru oru thagaval)


தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள்


மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!

தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன?

## பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்றவைகளை சாப்பிடவேண்டும்.

* ஒரு நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டியதிருக்கும்?

## சராசரியாக ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெளியேறும். அப்படிப்பட்ட தருணங்களில் 4 பேடுகள் வரை பயன்படுத்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், தொற்று ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.

* மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்?

## மூளையில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போக்குக்கு காரணம். பெரும்பாலும் இந்த பிரச்சினைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் கருப்பையில் ஏற்படும் நோய்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

* மாதவிலக்கு காலத்தில் மார்புகள் கனத்துடன் வலிப்பது ஏன்?

## மாதவிலக்கின் ஒரு வாரத்திற்கு முன்போ, மாதவிலக்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில நாட்களில் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

நன்றி
டாக்டர் கே.எஸ்.ஜெயராணி and Womens article

Thursday, March 14, 2013

வித்தியாசமாய் சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி


வித்தியாசமாய் சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதனை அறிய நினைத்தால் அது அடங்கும். மனதை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனிடம் தான் இருக்கிறது.

* எல்லா உயிர்களிடமும் இறைவனைக் காண்பவர்கள் மேன்மையானவர்கள். அறிவுநிலையில் மேம்பட்டவர்களால் மட்டுமே அந்நிலையை அடைய முடியும்.

* ஞானத்தை அடைந்ததற்கான அடையாளம், எந்தச் சூழ்நிலையிலும் கோபம் ஒருவனைத் தீண்டாமல் இருக்க வேண்டும்.

* தேவையான இடத்தில் சினம் கொண்டது போல நடிக்கலாம். ஆனால், எதிராளியின் நன்மைக்காக தான் அந்தக் கோபம் இருக்க வேண்டும்.

* மனதில் எண்ணிய எண்ணம் எல்லாம் ஒருநாள் ஈடேறும். ஆனால், நம் மனதில் உறுதியும், ஒழுக்கமும் இருந்தால் அன்றி எண்ணம் ஈடேறுவதற்கான சாத்தியம் இல்லை.

* ஒரு செடியைப் பார்த்துக் கூட வாழ்க வளமுடன் என்று வாழ்த்துங்கள். அதனால், அச்செடியில் உள்ள பலவீனம் நீங்கி வளமுடன் செழித்து வளரும்.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்வதால் நம் மனம் ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டுவிடும். அப்போது நம்முடைய பிறவிச் சங்கிலியில் இருந்து நம்மால் விடுபட முடியாது.
(Thanks to Penmai)

Friday, March 08, 2013

ஹ......ரி.....தா....ஸ்.


அன்புள்ள தோழமைகளே!!


வணக்கம். மீண்டும் ஒரு நல்ல படத்தோடு உங்களை நான் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சமீபகாலத்தில் வெளியான எத்தனையோ படங்களைப் பற்றி எழுத நினைத்தாலும் அவ்வளவு விருப்பம் வரவில்லை. மனம் தழுப்புகிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த படத்தைப் பார்த்த பின்பு நிச்சயம் தழும்பும். அட கண்டுபிடிச்சிட்டிங்களே ஹ......ரி.....தா....ஸ்.


குழந்தைகள் சந்தோஷத்தை அள்ளித் தரும் தேவதைகள். குழந்தைகளைப் பற்றிய படம்தான் இது. என்கவுன்டர் சிறப்பு அதிகாரியாக சிவதாஸ்(கிஷோர்). அவருடைய குழந்தை ஹரிதாஸ் (ப்ரிதிவிதாஸ்). ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தை. இந்த குறைபாடு உடைய குழந்தை யாருடனும் பேசாமல், தனக்குள் ஒரு உலகை உருவாக்கி அதில் வாழ்வார்கள்.
பிறந்த உடன் தாயை இழந்து விடும் ஹரி, பாட்டியுடன் வளர்கிறார். பாட்டியும் இறக்க தந்தையில் கீழ் வளர்கிறார். எதையோ பார்த்து பயந்த ஹரியை மருத்துவரிடம் கொண்டு காட்டும் பொழுது, இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று திட்டுகிறார். மருத்துவரின் ஆலோசனைப்படி சாதரண பள்ளியில் சேர்க்க சொல்லுகிறார். அங்கே அழகு தேவதையாக நம்ம அமுதவள்ளி (சினேகா) ஆசிரியையாக. ஹரியின் கையில் எப்பொழுதும் ஒரு குதிரை பொம்மை இருக்கிறது. அதுதான் ஒரு திருப்புமுனையாக இருக்கிறது ஹரியின் வாழ்வில். எப்படி இந்த தந்தை இந்த குழந்தையை இந்த குறைபாட்டில் இருந்து மீட்டு ,வேதனை மனிதனாகமல் சாதனை மனிதனாக மாற்றுகிறார் என்பதே கதை.


கிஷோர் அந்த பார்வையிலேயே ஆளை அசத்துகிறார். ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்கும் போதும் சரி, ஒரு பாசமுள்ள தந்தையாக நீ மட்டும்தாண்ட எனக்கு இருக்கு, உனக்கு என்ன வேணும்னே எனக்கு தெரியலேயே என்று உடைந்து அழும் போதும் சரி அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். குழந்தைக்கு தானே கோட்சாக மாறி "வா.. வா... ஓடு.. ஓடு..." என்று சொல்லும் பொழுது நாமும் நம்மை அறியாமல் ஓடு.. ஓடு.. என்று சொல்ல ஆரம்பிகிறோம்.


சினேகா மீண்டும் தன் முத்திரையை அழகாக பதித்திருக்கிறார். குழந்தைகளுக்கு பாடம் சொல்லும் பொழுது நடித்து காட்டும் இடங்களில், ஹரியின் தந்தையும் உடன் அமர்ந்து இருப்பதால் தடுமாறும் பொழுது வெட்கத்தையும், ஹரிய காணம்ங்க என்று சொல்லி கதரும் பொழுது தாய்மையையும் வெளிப்படுத்தி அசத்துகிறார். ஒவ்வொரு காட்சியிலும் நெஞ்சை அள்ளிச் செல்கிறார்.


அட யாருங்க அந்த குட்டி பிரிதிவி. அப்படி ஒரு அசத்தல் நடிப்புங்க. அவனுடைய அந்த ஏக்கத்தையும், இயலாமையும் பார்த்து கன்னங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் கோடுகள். இப்படிப் பட்ட அனைத்து குழந்தையும் அணைத்து மீட்டெடுக்க வேண்டும் போல் ஒரு பரபரப்பு உண்டாகிறது. ஆனால் படம் விட்டு வரும் பொழுது நம் நெஞ்சம் முழுவதும் ஹரிதான் நிறம்பி வழிகிறான்.


இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் வியாபார நோக்கோடு கொஞ்சம் வன்முறையும் சேர்த்திருப்பது, குடத்துப் பாலில் துளி விஷம் கலந்தது போல் இருக்கிறது. கதையை வேறு மாதிரி கொண்டு சென்றிருக்கலாம். ஆதி (பிரதீப் ரவாட்) வில்லன் வேண்டும் என்பதற்க்காக சேர்த்தது போல் இருக்கிறது. சூரி கொஞ்சம் கலகலக்க வைக்கிறார்.

எந்த குழந்தைக்கும் தாயோ அல்லது தந்தையோ மிக முக்கியம் என்பது மிக தெளிவாகிறது. ஒரு பொது இடத்தில் ஹரி தெரியாமல் செய்யும் தவறுக்கு , ஒருவர் திருட்டு பட்டம் கட்டுவதும், அப்பொழுது சினேகா, அவன் ஒரு சிறப்பு குழந்தை அவனுக்கு இது தெரியாது என்று கதறும் பொழுது, பைத்தியமா.. என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் கேட்பார். அவர் இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தின் அங்கமாக பார்க்கிறேன். ஏனென்றால் நம் மக்கள் தனக்கென்று வந்தால் அது வலியாகவும், மற்றவருக்கு வந்தால் அதை நோயாகவும் பார்க்கிறோம். இந்த எண்ணத்தைக் கூட மாற்ற வேண்டும். இது என்ன என்று தெரியாதவர் கூட தெரிந்து கொள்ள வைத்த இயக்குனருக்கு (G.N.R குமரவேலன்) நிச்சயம் நாம் நன்றியையும், பாராட்டையும் வழங்குவோம். டாரே சமீன் பர் (taare zameen par) என்ற இந்தி படமும் இது போன்ற ஒரு குறைபாட்டை வெளிப்படுத்தும் படம்தான். அதே தாக்கம் எனக்கு இந்த படத்தை பார்க்கும் பொழுதும் ஏற்பட்டது.


Movie Poster
Directed by
G.N.R.Kumaravelan
Written by
G.N.R.Kumaravelan
A.R.Venkatesan
Starring
Kishore
Sneha
Prithviraj Das
Soori
Pradeep Rawat
Music by
Vijay Antony
Cinematography
R. Rathnavelu
Editing by
Raja Mohammed
Studio
DR V RAM Production Private Limited
Release date(s)
February 22, 2013
Country
India
Language
Tamil

இசை விஜய் ஆண்டனி, காதிர்க்கு இனிமையான பாடல்களை தந்திருக்கிறார். குத்து பாட்டு இல்லாத படம் . அன்னையின் கருவில் பாடல் உடலில் புது மின்சாரத்தை பாய்ச்சுகிறது என்றால் அது மிகையாகாது. அன்னாமலை என்பவர் பாடல் வரிகளை நமக்கு தந்திருக்கிறார். இந்த பாடலுக்காக நிச்சயம் இவருக்கு ஒரு ஓ போடலாங்க!!....




இந்தியாவில் மட்டும் 88 குழந்தைகளில் 2 என்ற விகிதத்தில் பிறப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இது போன்ற குழந்தைகளை தெய்வக் குழந்தையாக பாவித்து, அன்பு காட்டி நாம் அனைவரும் காப்போம் என்று உறுதி கொள்வோம். மீண்டும் சந்திப்போமா!!!


வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!..

மகளிர் தின நாள் வாழ்த்துக்கள் :)


அன்புள்ள தோழிகளே!!

      மகளிர் தின நாள் வாழ்த்துக்கள் :)

பெண்ணே!! நீ.....

மதி நுட்பம் வாய்ந்தவளாம்....

புது வனப்பாம் செந்தமிழ் மொழியை போற்றுபவளாம்......

பெண் புத்தியை முன் புத்தியாக ஆக்கி வருபவளாம்.....

தனக்கென்று வாழாமல் குடும்பத்திற்க்காக வாழ்பவளாம்...

குலப்பெருமையை போற்றுபவளாம்.....

நல்ல குண நலங்களை பேணுபவளாம்....

குறிப்பறிந்து நடப்பவளாம்.....

மனதில் யானை பலம் கொண்டவளாம்....

கண்ணுக்கும், கருத்திற்க்கும் புதுமையானவள்.....

வீரத்திற்க்கும், விவேகத்திற்க்கும் கீரிடமானவளாம்......

தாய்மைக்கும், பாசத்திற்க்கும் அடிமையானவளாம்.......

தரணிக்கெல்லாம் ராணியானவளாம்......

இத்தகைய பெருமை கொண்ட பெண்ணையை போற்றுவோம்..... அவளை பாதுகாப்போம் வன்கொடுமைகளில் இருந்து

(கருவிலேயே சமாதி கட்டி, வெளி உலகத்தை பார்க்காமலேயே மறித்த (சிசுக்கொலை) தேவதைகள் அனைவருக்கும் இந்த கவிதை சமர்ப்பணம். நன்றி!!      இதை எழுதியவர் என் தாய் கிருஷ்ணவேணி, அவருக்கும் என் நன்றி.)

Tuesday, January 29, 2013

படித்ததில் பிடித்தது: மனித மூளை

மனித மூளையும் அதன் செயல்திறனும் மற்றும் மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:-

மனித மூளையும் அதன் செயல்திறனும்

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.
...
2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.

மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே குளுக்கோஸ் இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்: மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய இனிப்பு சாப்பிடுதல்: நிறைய இனிப்பான பண்டங்களை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
 
(Thanks to Tamil Karuthukalam)

Wednesday, January 23, 2013

ஆண் என்ன? , பெண் என்ன?


அன்புள்ள நண்பர்களே,
வணக்கம். நலம்தானே? என்னை பாதித்த இரண்டு விஷயங்களுக்காக நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். நான் என்னை சுற்றி நடந்த, நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன். நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள்.
சமீபத்தில் பெண்மை வாசகி ஒருவர் தான் கருவுற்றிருப்பதாகவும், தன் கணவன் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி புரிய வைப்பது, இது என் கையில் இல்லை என்று?
இதைப் படித்ததும் ஒரு புறம் இவரைப் போல பாதிக்கப்பட்டிருக்கும் சகோதரிகளை எண்ணி அழுவதா? அல்லது இன்னும் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்கும் இந்த கோமாளிகளை எண்ணிச் சிரிப்பதா? என்று தெரிய வில்லை. இதை நான் சாதாரணமாக பார்க்க வில்லை. ஒரு முறை நான் என்னுடய ஊர் செல்வதற்க்காக பேருந்திற்க்காக காத்துக் கொண்டிருந்தபோது, எங்களுடய ஊரைச் சேர்ந்த பெண்ணைப் பார்த்தேன். என்னை விடச் சின்னப்பெண் மூன்று பெண் குழந்தைகளை வைத்திருந்தாள். வயிற்றிலும் சுமை.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னம்மா இது? என்னக்க பன்றது. மூனும் பொண்ணா போயிடிச்சி. அடுத்ததாவது பையனா இருக்காதா என்றாள். எனக்கு மயக்கமே வரும் போல் இருந்தது. அடுத்ததும் பெண்ணாக போய் விட்டால் என்றேன். வெட்கச் சிரிப்புடன், திருப்பி முயற்ச்சி பண்ண வேண்டியதுதான் என்றாளே பார்க்கலாம். அப்புறம் ரகசியக் குரலில் பையன பெக்கலனா யாரும் மதிக்கவே மாட்டென்றாங்க என்றாள். எங்கே போய் முட்டிக் கொள்வது? எங்கே ஆரம்பிக்கிறது தவறு? ஒரு சமூதாயம் மதிப்பதற்க்காகவா ஒரு ஆண் பிள்ளையை பெற்றுக் கொள்கிறார்கள்? மதிப்பது என்றால் எந்த விதத்தில்?, இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள்.

இதற்க்கு அடிப்படை காரணமாக நான் பார்ப்பது அறியாமையைத்தான். கிராமங்களில் இன்னும் பெண்களுக்கு முழுமையாக கல்வி அறிவு இல்லை. அப்படியே இருந்தாலும், சுற்றி இருப்பவர்களுக்கும், கணவனுக்கும் கட்டுப்பட்டு கிடக்கிறாள்.

இப்படி இவர்கள் பெற்றெடுக்கும் ஆண் பிள்ளைகளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். எதற்கெடுத்தாலும் அவன் ஆம்பிள அவன் வழிக்கு நீ ஏன் போற என்று பெண்ணை தாழ்த்தியும், ஆணை உயர்த்தியும் பேச ஆரம்பிக்கிறார்கள். இங்கே இருந்து ஆரம்பிக்கிறது ஆண் என்ற தலைக்கணம். நாம என்ன செய்தாலும் தப்பில்லை என்ற எண்ணம் பெற்றோர்களால் அவரகளுக்கே தெரியாமல் ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் இவ பொம்பளதானே என்ற ஒரு தாழ்வான எண்ணம் இயற்கையில் ஏற்படுகிறது. பெண்கள் தனக்கு கீழ் படிந்தவர்கள் என்ற ஆழமான எண்ணம் சிறு வயது முதல் உண்டாகிறது.

ஆனால் இதற்க்கு விதிவிலக்கான குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதை எல்லாம் தாண்டி, நிறய திரைப்படங்களில் நான் பார்த்திருக்கிறேன் பொம்பளன்ன ஒழுங்க அடக்கமா இருக்கணும். எந்த தப்பையும் தட்டிக் கேட்க கூடாது. அப்புறம் ஒருவன் பயந்து விட்டால், உடனே பொம்பள மாதிரி போய் சேலையும், வளையலும் போட்டுக்கோ என்று சொல்வது. பெண்கள் என்றால் ஆணுக்கு அடங்கியவள், கட்டுப்பட்டவள் என்ற எண்ணம் கொண்ட ஆணாதிக்க சமுதாயம். என் குலம் புலியை முறத்தால் அடித்து விரட்டிய மங்கையர் குலம். இந்த கைகள் சமைத்து போட மட்டுமல்ல, சமயத்தில் சரித்திரம் படைக்கவும் செய்யும் ஆண்குலம் புரிந்து கொள்ள வேண்டும். தொட்டிலை ஆட்டும் கை, தொல்லுலகம் ஆளும் கை என்பதை மறக்க வேண்டாம். தாய்மார்கள் இதை முதலில் புரிந்து கொண்டு பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகள் முன்பு மட்டம் தட்டி பேசுவதை நிறுத்துங்கள்.


சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;




எந்த விதத்தில் இவர்கள் உயர்ந்தவர்கள். நீயும் பத்து மாதம், நானும் பத்து மாதம். ஒரு விஷயத்தைத் தவிர உடல் அமைப்பு மட்டும் வலிமையைத்தவிர மற்றவை எல்லாவற்றிலும். நீயும் நானும் சமம். இதை ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு புரிய வையுங்கள்.
பெண்ணை கவர்ச்சி பொருளாக, கேவலமான கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அவளும் உன்னைப் போல் சதையும், இரத்தமும், உணர்ச்சிகளும் கொண்ட மனுஷி என்பதை உணர்த்துங்கள். உணராத ஆண்கள் இனிமேலாவது உணருங்கள்.

இதைப் போலவே சில குடும்பங்களில் ஆண் குழந்தை என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார்கள். பெண் குழந்தை எதை கேட்டாலும் தள்ளிப் போடுவார்கள். அதேப் போல் பள்ளிகளில் கூட வித்தியாசம் இருக்கும். அவன் ஆம்பிள புள்ள நாள பின்ன குடும்பத்த காப்பாத்துவான். நீங்க அடுத்த வீட்டுக்கு போய் ஆக்கி கொட்ட போறவ, எதுக்கு உசந்த பள்ளிக்கூடம் என்பார்கள். தன்னை மட்டுமல்ல தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் காப்பாற்றும் தன்மை கொண்டவள் பெண். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு வீடு சிறக்கும். ஒரு வீடு சிறந்தால் ஊர் சிறக்கும். ஒரு ஊர் சிறந்தால் ஒரு மானிலம் சிறக்கும். ஒரு மானிலம் சிறந்தால் என் நாடு சிறக்கும். தயவு செய்து கல்வியில் பாரபட்சம் பார்க்காதீர்கள். என் தோழிகள் அனைவரும் சிறந்த கல்வியாளர்களாகவும், சிறந்த நிர்வாகிகளாகவும் விளங்க வேண்டும். இனிமேல் வரும் சந்ததிகள் நிச்சயம் சமமான சகோதர, சகோதரி பாசத்தோடு இருக்க இப்பொழுதிருந்து பாடுபடுவோம். இது நம் கையில் தான் இருக்கிறது. நாம் நினைத்தால் நிச்சயம் ஏற்றத்தாழ்வுகளை களையலாம்.


எந்த குழந்தையாக இருந்தால் என்ன? நாம் அந்த குழந்தயை தாய்ப்பற்று, நாற்றுப்பற்று, உயிர்கள் அனைத்தின் மீதும் பற்று வைத்து அன்பே சிவம், அன்பே யேசு, அன்பே அல்லா என்று அதற்க்கு உணர்த்துவோம். வயதான காலத்தில் நம் வலியும் , வேதனையும் புரிந்து கொண்டு நம்மை குழந்தையாக பாவித்து நம்மிடம் அன்பு காட்டும் பண்பை நம்மிடம் இருந்து ஊட்டுவோம். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ அதை ரசியுங்கள். முன்பிருந்த நிலை தற்பொழுது மாறி இருக்கிறது. அதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் விகிதம் மிகக் குறைவு. சில இடங்களில் பெண் குழந்தையை கொன்று விடுகிறார்களாம். எழுதும் பொழுதே கண் கலங்குகின்றது. அவ்வளவு வேண்டாதவர்களா பெண்கள். தாய்மார்களே பெண்களின் விகிதம் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. நாளை நீங்கள் உங்கள் பிள்ளைக்கே பெண் தேடும் போது சிரமப்படலாம்.

கிராமப்புறங்களில் நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் முயற்ச்சி எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகள் குடும்பக்கட்டுப்பாடு, சிசுக்கொலை, விழிப்புணர்வு மற்றும் பெண் கல்வி போன்றவை தீர்க்க முடியும். பார்க்கலாம்.
என்ன தோழிகளே நான் சொல்வது சரிதானே?உங்கள் கருத்துக்களை தயவு செய்து பதியுங்கள்.

மீண்டும் சந்திப்போமா? நன்றி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

ரகசியம் பேசலாமா?



கடைவீதியில் நடந்து வந்துகொண்டிருந்தார் சாக்ரடீஸ். எதிரில் தென்பட்ட ஒருவர், ''உங்கள் நண்பனைப் பற்றி ஒரு ரகசியம் சொல்லட்டுமா?'' என்றார்.

உடனே சாக்ரடீஸ், ''நீங்கள், என்னிடம் சொல்லப் போவது உண்மைதானா!'' என்றார் சாக்ரடீஸ்.
...
''தெரியவில்லை... கேள்விப்பட்ட தகவல்!'' என்றார் அவர்.

''அது நல்ல விஷயமா?''

''இல்லை. எதிர்மறையானதுதான்''

''அந்த ரகசியத்தை கேட்பதால் ஏதேனும் பலன் உண்டா?''

''கிடையாது''

இதைக்கேட்ட சாக்ரடீஸ், ''நீ சொல்லும் ரகசியம் உண்மையல்ல; நல்ல விஷயமும் அல்ல; அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எனவே, நீ அதை என்னிடத்தில் சொல்ல வேண்டியதே இல்லை'' என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

Monday, January 21, 2013

படித்ததில் பிடித்தது: புகழ்

புகழ் என்பது அடங்காப்பசி கொண்ட அதிசய பிசாசு!

- வெ. இறையன்பு

வாழும் காலத்தில் வையப்பட்டவர்தான் ஷேக்ஸ்பியர். 'மயிலிறகு போர்த்திய காகம்' என அவரை வசைமாரிப் பொழிந்தார் தாமஸ் கிரீன். ஆனால் காலம், ஷேக்ஸ்பியரை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.
...
எப்போதும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள், அடுத்தவரது மதிப்பீட்டினால் தங்களைத் தரம் நிர்ணயித்துக் கொள்வதில்லை. நமது வீட்டிலேயேகூட, நமது பங்களிப்பை உணராமல் இருப்பர். அதற்காக வருந்தவேண்டிய அவசியம் இல்லை. நமது தியாகத்தை அவர்கள் உணரவில்லையே என நினைத்தாலே, நமது மகிழ்ச்சி பறிபோய்விடும். யாருக்காகப் பணியாற்றுகிறோமோ அவர்களின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி என எண்ணும்போது, எல்லா நிமிடமும் இனிப்பு மயமாகிறது.

முதலில், அடுத்தவருக்குச் சேரவேண்டிய அங்கீகாரத்தை நாம் அளிக்கிறோமா என்பதை உற்றுப்பார்க்க வேண்டும். யாரு டனும் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை என எண்ணினால், நாம் புகழை யாசிக்கமாட்டோம்.!
 
புகழ் என்பது அடங்காப்பசி கொண்ட அதிசய பிசாசு!

- வெ. இறையன்பு

வாழும் காலத்தில் வையப்பட்டவர்தான் ஷேக்ஸ்பியர். 'மயிலிறகு போர்த்திய காகம்' என அவரை வசைமாரிப் பொழிந்தார் தாமஸ் கிரீன். ஆனால் காலம், ஷேக்ஸ்பியரை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.

எப்போதும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள், அடுத்தவரது மதிப்பீட்டினால் தங்களைத் தரம் நிர்ணயித்துக் கொள்வதில்லை. நமது வீட்டிலேயேகூட, நமது பங்களிப்பை உணராமல் இருப்பர். அதற்காக வருந்தவேண்டிய அவசியம் இல்லை. நமது தியாகத்தை அவர்கள் உணரவில்லையே என நினைத்தாலே, நமது மகிழ்ச்சி பறிபோய்விடும். யாருக்காகப் பணியாற்றுகிறோமோ அவர்களின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி என எண்ணும்போது, எல்லா நிமிடமும் இனிப்பு மயமாகிறது.

முதலில், அடுத்தவருக்குச் சேரவேண்டிய அங்கீகாரத்தை நாம் அளிக்கிறோமா என்பதை உற்றுப்பார்க்க வேண்டும். யாரு டனும் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை என எண்ணினால், நாம் புகழை யாசிக்கமாட்டோம்.!

( 'எல்லோரும் இன்புற்றிருக்க' - சக்தி விகடன் 2011 )

படித்ததில் பிடித்தது: விகடன்

‎''இயற்கையை வெல்ல முயற்சிக்கும் மனிதனால் வெல்லவே முடியாதது எது?''

''மரணம்!

சீனத்தில் ஒரு கதை உண்டு. சாவே அடையாமல் சிரஞ்சீவியாக வாழ நினைத்த சீன அரசர், அதற்காக வித விதமான மருந்துகள், லேகியங்களை சாப்பிட்டாராம். இதற்காகவே, அரண்மனையில் நான்கு மருத்துவர்களையும் வைத்து இருந்தாராம்.
...
ஒருநாள் அரசர் குடிக்க வைத்து இருந்த மருந்தை அமைச்சர் ஒருவர் எடுத்துக் குடித்துவிட்டார். கோபப்பட்ட மன்னர், அவருக்கு மரணதண்டனை அளிக்க உத்தரவிட்டார்.

அவரின் தலையை வெட்ட வீரர்கள் கத்தியை ஓங்கியபோது, அந்த அமைச்சர் மன்னரிடம் கூறினாராம், " நீங்கள் மரணம் அடையாமல் சிரஞ்சீவியாக வாழ்வதற்காகத் தயார் செய்த மருந்து இது. இதை நான் குடித்ததற்காக என்னைக் கொல்ல ஆணையிட்டுவிட்டீர்கள். ஒருவேளை இவர்கள் வெட்டி நான் இறந்துவிட்டால், இந்த மருந்து பயனற்றது என்று எல்லோருக்கும் தெரிந்துவிடும். அப்படியானால், நீங்கள் பயனற்ற மருந்துகளைத்தான் அருந்துகிறீர்கள் என்பதும் தெரிந்துவிடும்" என்றார். சுதாரித்த மன்னர் அவரை விடுவிக்கச் சொல்லி ஆணையிட்டார்.

மனிதனுக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் இருந்து மனிதனின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று மரணத்தை வெல்வது. ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல், தங்களால் இயன்ற சாதனைகளைச் செய்பவர்கள், எந்த அதிசய மருந்துகளையும் உட்கொள்ளாமல் மரணத்துக்குப் பிறகும் மற்றவர்களின் மனதில் வாழ்கிறார்கள்!''

- ராமலட்சுமி, ராஜபாளையம்.
( நானே கேள்வி நானே பதில் - விகடன் 2011 )

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?


  இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவ...ே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம். அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது. மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

* காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

* அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

* இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.


* நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

* இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்

. * இரவில் கார்போஹைட்ரேட் கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனல் அவை இரவில் ஜீரணமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம். வேறு ஏதாவது வழிகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள.
 
(Thanks to Tamil kalam)

Sunday, January 20, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா? திரை விமர்சனம்


அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம். நலம்தானே? என்ன பால் பொங்கி விட்டதா? :).

மீண்டும் பொங்கல் தினத்தன்று வெளியான படங்களைப் பற்றிய ஒரு சிறப்பு பார்வையில் உங்களை சந்திக்கிறேன். படம் வருவதற்க்கு முன்பே பெரும் எதிர்ப்பார்ப்பிற்க்கு உள்ளாகி இருந்த ஒரு படம். ஓ கண்டு பிடிச்சிட்டீங்களா? சரி படம் எப்படி இருக்குன்னு பாக்கலாம் வாங்க.
முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம். இது நாட்டிற்க்கு ரொம்ப தேவையான முக்கிய பிரச்சினைகளைப் பற்றிய படமோ அல்லது கருத்து படமோ இல்லைங்க. முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்ட படம். இதில் மூன்று கதா நாயகர்களும், அவர்கள் சுற்றி வருவதற்க்கு ஒரு கதாநாயகியும், முக்கியமான நிறய கதாபாத்திரங்களும் உண்டு.

கலியபெருமாள்(சந்தானம்) செல்லப் பெயர் கேகே(கல்யாணம் முதல் கருமாந்திரம் வரை) :), பவர் குமார்(சீனிவாசன்), சிவா(சேது) இவர்கள் மூவரும் நண்பர்கள். பெண்கள் என்றால் அவ்வளவு உயிர்(அப்படி ஒரு ஜொள்ளூ). சிவாவின் வீட்டிற்க்கு அருகே உள்ள வீட்டிற்க்கு சௌமியா(விஷாகா) குடி வருகிறார். சௌமியாவைப் பார்த்ததும், மூன்று பேரும் காதலில் விழுகிறார்கள். இதனால் நண்பர்களுக்குள் போட்டியும், சண்டையும் வருகிறது. பின்பு சமாதானமாகி ஒரு முடிவிற்க்கு வருகிறார்கள். மூன்று பேரும் முயற்ச்சி செய்வோம். சௌமியா யாரை விரும்புகிறாறோ மற்றவர்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்று.

சௌமியாவின் மனதைக் கவர இவர்கள் எடுக்கும் முயற்சியே கண்ணா லட்டு தின்ன ஆசையா?.

இந்த படம் இன்று போய் நாளை வா என்ற கே. பாக்கியராஜ் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன வித்தியாசம் என்றால் பழைய மதுவை புது கோப்பையில் ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள். சந்தானம் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.திரு மணிகண்டன் அவர்கள் இயக்கி இருக்கிறார்கள்.
பவர் வரும் இடங்களில் நம்மையும் அறியாமல் சிரிப்பு வருகிறது. சௌமியா மனதைக் கவர அவர் தந்தையிடம் நடனம் பயில வரும் பவர். அவர் சித்தப்பாவிடம் பாடல் பயில வரும் கேகே, சித்தியிடம் வீட்டு வேலை செய்யும் சிவா. இந்த இடங்களை சுற்றி கதை நகர்கிறது. சில இடங்கள் ரசிக்க வைத்தாலும், பல இடங்கள் நம்மை நெளிய வைக்கின்றன. உதாரணத்திற்க்கு இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் வயதானவர்களை அவன் , இவன் என்று சொல்லி சந்தானம் கலாய்ப்பது முகம் சுழிக்க வைக்கின்றது. கொஞ்சம் தவிர்த்து இன்னும் கொஞ்சம் நன்றாக நகைச்சுவையை சேர்த்திருக்கலாம்.
நிறய திறமையான கலைஞ்ஞர்களை வீணடித்து விட்டார்கள். கோவை சரளா, ராஜா, விடிவி கணேஷ், கணேஷ்கர், தேவதர்ஷினி, சிவசங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்க்க வில்லை. சௌம்யா இன்னும் கூட நடிப்பில் அக்கரை செலுத்த வேண்டுமோ? நிறய விளப்பர படங்களில் பார்த்து, நமக்கு நெருங்கிய முகமாக தெரிகிறார். கவர்ச்சியை தாரளமாக வழங்கி இருக்கிறார்.

பவரை கலாய்க்கும் இடங்கள் உதாரணத்திற்க்கு நானாவது காமெடியன்னு தெரியும், ஆனா நீ இன்னும் காமெடியன்னு தெரியாமயே இருக்கிற பாரு அதுதான் பெரிய காமேடி என்று சந்தானம் கலாய்ப்பது மிக ரசிப்பு.
சிறப்புத் தோற்றமாக சிம்பு, கவுதம் மேனன் வருகிறார்கள். இசை எஸ் தமன் அவ்வளவாக நெஞ்சில் நிற்க்க வில்லை. லவ் லெட்டர் எழுத ஆசப்பட்டேன் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றது.

தவிர்க்கவே முடியாமல் நிறய இடங்களில் பழைய படம் ஞாபகம் வருகிறது. Old is Gold னு சும்மாவா சொன்னாங்க.


Directed byK. S. Manikandan
Produced bySanthanam
Rama Narayanan
Written bySanthanam
K. S. Manikandan
StarringSanthanam
Srinivasan
Sethu
Vishaka
Music byS. Thaman
CinematographyBalasubramaniem
StudioHand Made Films
Sri Thenandal Films
Distributed byRed Giant Movies


கண்ணா லட்டு தின்ன ஆசையா? சர்க்கரைக் குறைவு :)
இன்னும் கொஞ்சம் சர்க்கரையை(நகைச்சுவையை) சேர்த்திருக்கலாம்.
மீண்டும் சந்திப்போமா? வாழ்க வளமுடன்






Friday, December 28, 2012

பெண்ணின் நிழலுக்கும் காவல் வேண்டிய நிலையா?


அன்புள்ள நண்பர்களுக்கு,
  
   வணக்கம். நலம்தானே? நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

எத்தனை எத்தனை மாற்றம் உலகம் அடைந்தாலும் பெண்மைக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் மாறவும் இல்லை.அதன் பாதிப்பு குறையவும் இல்லை. எத்தனையோ கொடுமைகளை நம் காதுகள் கேட்டு விட்டன, அதை ஒதுக்கி தள்ளியும் விட்டது.

வீட்டை விட்டு வெளியே வரவே பெண்கள் யோசித்த காலங்களும், பல அடக்கு முறைகளுக்கு அடங்கி  அடுப்படியே திருப்பதி, ஆம்படையானே பெருமாளு என்றும்  இருந்த காலங்களும் உண்டு. இதை எல்லாம் தாண்டி வெளி உலகத்திற்க்கு வந்து ,சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்கள். அதற்க்குள்ளாகவே பல இன்னல்களை நம் பெண் குலம் பார்த்து விட்டது. ஆனால் அதை எல்லாவற்றையும் விட இப்பொழுது பல பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். சைபர் குற்றங்கள் முதல் கற்ப்பழிப்பு வரை.இந்த விஷயங்களை சாதாரண விஷயங்களாக விட்டு விட முடியுமா? விட்டு விடலாமா?

அதுவும் சமீபகாலமாக நாம் அதிகமாக கேள்விப்படும் அதிர்ச்சியான விஷயம் கற்ப்பழிப்பு. அதற்க்கு முன்பு கூட நாம் கேள்விப்பட்டோம், ஆனால் நம் மனதை அதிகமாக பாதிக்கவில்லை. காரணம் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. இவர்களுக்கு அதிக இலாபம் தரும் நிகழ்ச்சிக்காகவும், தங்கள் கட்சிகளைப்பற்றிப் பெருமை பேசவும், தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும் மட்டுமே இவர்கள்.

அத்தனை சேனல்கள் இருந்தும் நம்மால் எது உண்மை என்று கண்டு கொள்ள முடியாத அளவிற்க்கு பொய்யும், புரட்டும் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. அதனால் நம் நாட்டில் நடந்த எத்தனையோ கற்ப்பழிப்புகள் நமக்கு தெரியவும் இல்லை, குற்றவாளிகள் எவ்வளவு பேர் தண்டிக்கப்பட்டார்கள் என்பதும் தெரியவில்லை.
ஆனால் தற்பொழுது ஒரு கல்லூரி மாணவிக்கு தலைநகரம் தில்லியில் நடந்த ஒரு கொடுமையான பாலியல் பலாத்காரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. அந்த செய்தியைப் படித்ததும் கண்ணீர் வந்தது, அந்த ஓநாய்களை அப்படியே வெட்டி சாய்க்க வேண்டும் போல் ஒரு ஆத்திரம் வந்தது.  ஐந்தறிவு ஜீவன் கூட இப்படி ஒரு கேவலமான செயலை செய்யாது. ஆனால் ஆண் செய்கிறான் அதுவும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல். பெண் என்ன அவ்வளவு கேவலமான பொருளா? தன் தேவைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி எறிய. நம் தமிழ் நாடு இந்தியாவில் 4வது  இடத்தில் இருக்கிறது. எவ்வளவு வேதனையான விஷயம்? 

இதற்கெல்லாம் மத்தியில் பெண்கள் ஆபாசமாக உடை அணிவதால்தான் இப்படி நடக்கிறது என்று சில கோமாளிகள் கூவிக் கொண்டிருக்கிறார்களாமே? அப்படி சொல்பவர்கள் அனைவரைப் பார்த்தும் நான் கேட்க்க விரும்பும் கேள்வி ஒன்றுதான். சமீபத்தில் ஹைதராபாத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த ஐந்து வயது சிறுமி அப்படி என்ன ஆபாச உடை அணிந்து வந்து மயக்கி இருப்பாள் சொல்லுங்கள்?.

வினோதினி என்ற பெண் திராவக வீச்சுக்கு ஆளாகி இருக்கிறாள். பாட்னாவில் மூன்று பேரால் பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண் போலீசாரின் மோசமான விசாரணையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருகிறாள்.இந்த விவகாரத்தில் நாம் சீர்திருத்த வேண்டியதும் செய்ய வேண்டியதும் ஏராளமாக இருக்கிறது. ஆனால் நம் அரசு செய்து கொண்டிருப்பது என்ன? பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் புகைப்படங்களை வெளியிடப் போகிறார்களாம். ஏன் அவர்களைப் பார்த்து மத்த பெண்கள் முடங்கிக்கொள்ளவா? தெரியவில்லை. எங்கே ஓட்டை என்று தேடினால், கிழிந்து போய் கிடக்கிறது நாடு தைக்கவே முடியாத நிலைக்கு.

ஆண்களின் கண்ணோட்டத்தையும், அவர்களின் நினைப்பையும் சீர்திருத்த வேண்டிய கட்டயாமான நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. பத்திரிக்கைகள் ஒரு புறம் கூவிக்கொண்டிருக்கின்றன். கற்ப்பழிப்புக்கு உடைதான் காரணம் என்று. ஆனால் அந்த பத்திரிக்கைகளின் அட்டை படம் முதல் நடுப்பக்கம் வரை கவர்ச்சி படங்கள் கண்ணை கூச வைக்கின்றன. சொல்வது ஒன்று செய்வது ஒன்று நம் நாட்டின் பழக்கமா அது? பெண்ணை தெய்வமாக மதிக்கும் நாடு என் நாடு என்று என்னால் பெருமை பேச மட்டுமே முடிகிறது. எங்கே போனது தெய்வம்? நீ தெய்வமாக மதிக்க
 வேண்டாம் ஆனால் அவளுக்கு உயிரோடு சமாதி கட்ட வேண்டாமே.

இதற்க்கெல்லாம் நடுவில் அரசியல் வாதிகளின் அர்த்தம் இல்லாத விளம்பரப் பேச்சுக்கள்.அவ்வளவும் மனதை பாதிக்கும் விஷயங்கள்.எனது நண்பர் ஒருவர் அழகாக தன் இணைய தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அது, அமெரிக்காவில் ஒரு மனநோயாளி சமீபத்தில் பள்ளியில் நுழைந்து பள்ளி மாணவர்களை கொன்று குவித்தான். அதை குறிப்பிட்டு, அமெரிக்கனே நீ ஏன் அங்கே உள்ள அப்பாவி மாணவர்களை கொன்று குவிக்கிறாய். இங்கே வா, இங்கு நிறைய கற்பழிப்பாளர்கள், கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், சமூகத்தை சுரண்டும் சுயநலவாதிகள் இருக்கிறார்கள். எங்க அரசுக்கு அவங்கள கட்டுப்படுத்த தெரியவில்லை என்று. உண்மைதானே?

 இதற்க்கு கடுமையான தண்டனைகள் இருந்தலேயன்றி இதை நாம் சரி செய்ய முடியாது. அப்பொழுதுதான் இப்படிப்பட்ட ஆண்களுக்கு உறைக்கும். தன் வீட்டில் உள்ள பெண்களைப் போலவே மற்ற பெண்களையும் பாருங்கள். அவர்களும் சக மனிதர்கள் தான். பெண்களே நாமும் விழிப்புணர்வோடு செயல்பட்டு நம்மை தற்க்காத்துக் கொள்வோம். எதிரியை தாக்கும் உத்தியை படிப்போம். இனிமேல் என் நாட்டில் இதைப் போன்ற ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என்று பிரார்த்திப்போம். பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரிகளும் உடலாலும், மனதாலும் நலம் பெற பிரார்த்திப்போம்.

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!
                                         --- பாட்டுச்சித்தன் பாரதி

எது எப்படியோ சேனல்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம்.  தங்கள் முதல் பக்கங்களுக்கு ஒரு மாதத்திற்க்கு விஷயம் இருக்கே.
இதைப்போன்ற ஈனச்செயல்களுக்கு இப்படிப்பட்ட ஒரு கடுமையான போராட்டம் நிச்சயம் தேவை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?

வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
 

Friday, December 07, 2012

படித்ததில் பிடித்தது : புத்தகம் வாசிப்பது

அன்பு நண்பர்களே!!

FB யில் நண்பர் ஒருவர் பகிர்ந்ததை ,நானும் உங்களுடன் பகிர்கிறேன் மகிழ்ச்சியாக.

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார்  ஜவஹர்லால் நேரு

 ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல்.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார்.

‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.

குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங்.

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

from - #FB (நன்றி சூர்யா சுரேஷ் )

http://karpanaisiragugal.blogspot.fr/

நீர்ப்பறவை திரைவிமர்சனம் (Neerpparavai movie review in Tamil)

அன்பு நண்பர்களே!!
வணக்கம். நலம்தானே?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல படத்தின் விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்.
25 வருடங்களுக்கு முன் மீன் பிடிக்கப் போன தந்தை திரும்ப வில்லை.தாய் நடுஇரவில் வீட்டின் பின்பு உள்ள கல்லரையில் அமர்ந்து அழுகிறாள். மகனுக்கு சந்தேகம் வந்து, தோண்டிப்பார்க்க அங்கே ஒரு எலும்புக் கூடு மட்டும். இப்படித்தான் ஆரம்பிக்கிறது படம். ஆரம்பமே நம்மை நிமிர்ந்து உட்க்கார வைக்கிறது. கதை விறுவிறுப்பான க்ரைமாக இருக்குமோ என்று எதிர்ப்பார்த்தால் அதுதான் இல்லங்க.
தாய் எஸ்தரை கைது செய்ததும் , அவர் சொல்லும் கடந்த கால மீனவர்களின் கதையே "நீர்ப்பறவை". மிகவும் குடிக்கு அடிமைப் பட்ட நிலையில் இருக்கும் அருளப்பசாமி(விஷ்ணு), அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து அவரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்கிறார்கள். அவர் எஸ்தரை(சுனைனா) சந்திக்கிறார். இருவரும் காதல் வசப்படுகிறார்கள்.

ஆனால் குடிகாரன் மட்டுமல்லாமல் ஊர் முழுவதும் கடன் வாங்கி குடித்திருக்கும் அருளப்பசாமிக்கி பெண் கொடுக்க மறுக்கிறார் தாய். அதனால் கடலுக்கு சென்று மீன் பிடித்து முன்னேற நினைக்கிறார் அருளப்பசாமி.

ஆனால் இவர் இலங்கை தமிழராக இருந்து இங்கே வந்து வளர்வதால் மீனவர்கள் கடலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். எப்படி இவர் அனைவர் மனதையும் வென்று , கடலுக்கு சென்று, எஸ்தரை மணக்கிறார். யாருடயது அந்த எலும்புக்கூடு?, ஏன் அது அங்கே இருக்கிறது ?என்பதே கதை.

"அழகி"யில் அழகாக நம் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட நந்திதா தாஸ் வயதான எஸ்தராக மீண்டும். அதே மாறாத சோகம், நெஞ்சை பிழியும் அசத்தல் நடிப்பு.

அருளப்பசாமியின் தாயாக சரண்யா பொன்வண்ணன். எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்தக் கூடாதாம், அப்படி பண்ணா உசிரு போயிருமா என்று சொல்வதிலும் ஆகட்டும், மகனுக்கு செல்லம் குடுப்பதிலும் ஆகட்டும் அந்த வெள்ளந்தி நடிப்பில் நம் நெஞ்சை அள்ளுகிறார்.
உடுமன் கானியாக வரும் சமுத்திரக்கனி கொஞ்சம் வந்தாலும் அவர் சொல்லும் "மீனவர்கள் ரெண்டு பேரை சுட்டார்கள் என்பது சாதரண செய்தியாகி விட்டது" , "பத்திரிக்கைக்காரர்களும் தமிழ் மீனவர்கள் இறந்தார்கள் என்று மட்டும் போட்டுவிடுகிறார்கள்" போன்ற வசனங்கள் நெஞ்சில் ஆழப்பதிகின்றன. நமக்குள்ளும் என்று தீரும் இந்த பிரச்சினை?, என்று நம் மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் இறங்குவார்கள்? அரசு ஏன் இப்படி மெத்தனமாக இருக்கின்றது? என்று கேட்க தோன்றுகின்றன.

இளமை எஸ்தராக நடித்திருக்கும் சுனைனா நடிப்பில் ஒரு புது பரிணாமம். அவரின் எளிமையும், ஒரு சோகம் கலந்த புன்னைகையும் மிக அசத்தல்.
கடலுக்குள் சென்றவர் வராமல் தேடும் பொழுது சுனைனா கதறும் பொழுது, நம் கண்களிலும் கண்ணீர்.



விஷ்ணுவிற்க்கும் வெண்ணிலா கபடிக் குழுவிற்க்குப் பிறகு ஒரு நல்ல படம். மீனவர்கள் கடலுக்குள் அனுமதிக்காமல், அந்த ஒத்த கட்டுமரத்துல ஏறிக்காட்டு அப்புறம் பாக்கலாம் என்று சொன்னதும், விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து ஏறி நிற்க்கும் பொழுது நாமும் அங்கே ஜேயிப்பதுப் போல் ஒரு உணர்வு.
ஒவ்வொருவரும் தம்பி ராமைய்யா, அனுபமா ,பாண்டி மற்றும் வடிவுக்கரசி அனைவரும் அசத்தி இருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள் :).

 ஒவ்வொரு மீனவ மனைவியும், தாயும், தந்தையும் எப்படி பரிதவிக்கிறார்கள் மீனவனை கடலுக்குள் அனுப்பி விட்டு. அப்பப்பா, சொல்ல முடியாத சோகம்.

இசை யாருங்க , அட ரகுநாதன் அவர்கள். பரப்பர பறவை ஒன்று எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை. வாழ்த்துக்கள்.

கடலை அப்படியே நம் முன்னாடி அழகாக காட்டி இருக்கும் சீனு ராமசாமி அவர்களுக்கு ஒரு ஓ போடலாங்க :)




Directed bySeenu Ramasamy
Produced byUdhayanidhi Stalin
Screenplay bySeenu Ramasamy
Jeyamohan
StarringVishnu
Sunaina
Nandita Das
Saranya Ponvannan
Anupama Kumar
Music byN. R. Raghunanthan
CinematographyBalasubramaniem
Editing byM. Kasi Viswanathan
StudioRed Giant Movies
Distributed byRed Giant Movies
Release date(s)
  • November 30, 2012 (2012-11-30)
Running time137 minutes
CountryIndia
LanguageTamil


கிறித்துவம், இஸ்லாம் மற்றும் இந்து இப்படி அனைவரையும் ஒன்றாக , ஒற்றுமையாக காட்டி இருக்கிறார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நாம எல்லோரும் ஒற்றுமையா இப்படியே இருக்கனும். என்னங்க நான் சொல்ரது உண்மைதானே. மீண்டும் அடுத்த படத்தில் சந்திப்போமா? வாழ்க வளமுடன்.



படித்ததில் பிடித்தது :மனுஷ்ய புத்திரன்

பிரம்மாண்டத்தில் ஒளிந்திருக்கும்
அற்பத்தை
அற்பத்தில் ஒளிந்திருக்கும்
பிரம்மாண்டத்தை
உருவி எடுக்கையில்
...
கொஞ்சம் இரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது"...

நான் எப்போதோ எழுதி நானே மறந்துபோன இந்த வரிகளை சாட் டில் வந்து ஒரு நண்பர் சற்று முன் பகிர்ந்து கொள்கிறார். ஒரு எழுத்தாளன் களைத்துப் போகிறான். தனித்து விடப்படுகிறான். ஆனால் எழுதபட்ட சொற்கள் எதுவும் ஒருபோதும் களைப்படைவதுமில்லை. தனித்துப் போவதுமில்லை


                              -  மனுஷ்ய புத்திரன்

Thursday, November 29, 2012

தொப்பை அதிகமாக இருக்கா? குறைக்க வழி இருக்கு!

அன்பு நண்பர்களே!!!
வணக்கம். நான் படித்ததை இங்கே பகிர்கிறேன். முயன்று பார்ப்போமா?
 
தொப்பை அதிகமாக இருக்கா? குறைக்க வழி இருக்கு!

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை...
குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
 
(Thanks Tamil Karuthu kalam)

படித்ததில் பிடித்தது : வீர சிவாஜி


அன்பு நண்பர்களே!!!
வணக்கம். நான் படித்ததில் பிடித்ததை பகிர்கிறேன்.

வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்...
டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்..

# உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் !
 
via பிரபாகரன் சேரவஞ்சி