Sunday, February 02, 2014

கோலி சோடா திரைவிமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!

வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும், ஏதாவது ஒரு சிலப் படங்களே நம்மை உற்ச்சாகப் படுத்துகிறது ஒரு சினிமாவாக. அந்த வரிசையில் நாம இன்னைக்கி பார்க்கப் போற படம் கோலி சோடா. வாங்க படத்தைப் பார்க்கலாம்.

  நான்கு வயசுப் பசங்க சேர்ந்து ஒரு விஷயத்தை நமக்கு சொல்லும் படம்தாங்க இது. ஒரு கோயம்பேடு சந்தையில் மூட்டைத் தூக்கும், அனாதை இளைஞர்கள். இவர்கள் எந்த ஒரு இலட்சியமும் இல்லாமல் சம்பாதிப்பதை செலவு செய்கிறார்கள். நன்றாக ஒற்றுமையாக இருக்கிறார்கள்.  இவர்களுக்கு வழிகாட்டியாகவும், இவர்களுக்கு வேலை கொடுப்பவர் ஆச்சி. இவர்கள் இருவருக்கும் நல்ல பாசப் பிணைப்பும் இருக்கிறது. சந்தையில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் நாயுடு என்பவர் செல்வாக்கான ஆள். இந்த நான்கு பேருக்கும் வேலைக் கேட்டு ஆச்சி நாயுடுவிடம் கூட்டிச் செல்கிறார். நாயுடு வேலை இல்லை, ஆனால் என்னிடம் கடை ஒன்று இருக்கிறது. அதை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். நல்ல உணவகம் இல்லாததால், இவர்கள் அனைவரும் சேர்ந்து உணவகம் ஆரம்பிக்க முடிவெடுக்கிறார்கள்.

  இளைஞர்களும் மிக சவாலாக எடுத்து ஆச்சி டிபன் செண்டர் ஆரம்பிக்கிறார்கள். நன்றாக விற்பனை சூடுபிடிக்கிறது. நாயுடுவின் மச்சான் ஒரு நாள் கடைக்கி வர, அவன் அங்கேயே தண்ணி அடிக்க ஆரம்பிக்க இவர்களுக்கு வியாபரம் அடி வாங்குகிறது. இதை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு நாள் சண்டையில் மச்சானை அடித்து விட, நாயுடுவிற்க்கும், இளைஞர் கூட்டத்திற்க்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு நாங்கு பேரையும் வெவ்வேறு ஊர்களுக்கு கடத்தி விடுகிறார்கள். இவர்கள் நான்கு பேரும் இணைந்தார்களா? தேட நினைத்த தங்கள் அடையாளத்தை நாயுடுவை எதிர்த்து மீட்டார்களா? என்பதே மிச்ச கதை.

  பசங்க படத்துல நடித்த சிறுவர்களை இந்த படத்துல பெரியவங்களாக காட்டி இருக்கிறார்கள். நான்கு பேரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படித்தி இருக்கிறார்கள். ஆச்சியுடன் இருக்கும் பிணைப்பாகட்டும், இந்த வயதில் முக்கியமாக வரும் காதலாகட்டும் ( அது இல்லாம தமிழ் படமா?). தங்கள் தோழியாக வரும் ATM இடம் காட்டும் அன்பாகட்டும், நாயுடுவுடன் போடும் சண்டையாகட்டும், மச்சானுக்கு சமைக்கும் போது தவிப்பதாகட்டும் எல்லாமே தூள்.

 அது யாருங்க அந்த சோடா புட்டி. நல்ல தேர்வு. தன் தந்தையிடம் அடிவாங்கும் போதாகட்டும், ஒரு செடி ஒரு பூ என்று காதல் வசனம் பேசுவதாகட்டும், தன் நண்பர்களை ஒன்று திரட்ட பாடுபடுவ்தாகட்டும் தன் திறமையை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார் சீதா. சாந்தினி அழகான புன்னகயால் வசீகரிக்கிறார்.
 ஆச்சியாக வரும் சுஜாதா, அங்கங்கே நகைச்சுவையில் நம்மை சிரிக்க வைக்கும் மந்திரவாதியாக இமான் அண்ணாச்சி மற்றும் நம்ம பவர் ஸ்டாருங்கோ..... மற்றும் பலர் இருக்காங்கோ.

இதில் முக்கியமாக பாராட்டப் பட வேண்டிய இரண்டு விஷயங்கள் , பாண்டிராஜ் அவர்களின் வசனங்கள். 

"நாம அனாதையா பொறந்தது நம்ம தப்பில்ல.. ஆனா அனாதையாவே செத்தா அது நம்ம தப்புதான்..."
"நான் நல்லா படிக்கலனா நான் வருத்தப் படுவேன். ஆனா நான் அழகா பொறக்காதது என் தப்பா? நான் ஏன் வருத்தப் படனும்...."
"எங்க தொலைச்சமோ அங்கதான் தேடணும்..." இப்படி படம் நெடுகிலும் நல்ல வசங்கள்.

விஜய் மில்ட்டனின் நல்ல முயற்ச்சி. ரொம்ப ஆபாசம், இரட்டை அர்த்த வசனகள், குத்துப் பாட்டு இவை எதுவும் இல்லாத ஒரு இளமை முயற்ச்சி மற்றும் பரபரப்பான திரைக்கதை. வாழ்த்துக்கள்.
சின்ன சின்னதாய் சில சொதப்பல்கள் இருக்கு. சின்னப் பசங்கள வச்சு எடுத்த படம்ல... நாமும் சின்னதா மறந்துடலாம்.

மொத்தத்தில் கோலி சோடா, ஆரம்பம் முழுச் சீற்றம்!! பின்பாதி கேஸ் காலி!!

மீண்டும் சந்திப்போமா?

வணக்கம். வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!