குழந்தைகளுடன் பேசுங்கள்!

கோடைகால விடுமுறையில், குழந்தைகள் இருக்க, என்ன செய்வதென்று அறியாது பெற்றோர், மாணவர்களை பல கோடைகால வகுப்புகளுக்கு அனுப்புவதில் முனைப்பு காட்டுகின்றனர். இப்போதாவது குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசுங்களேன் பெற்றோரே!

ஒவ்வொரு குழந்தையும், 1-5ம் வகுப்பு வரை கற்றுத்தரும் அடிப்படை கல்வியை வைத்தே, உயர்கல்வி கற்கும் ஆற்றலை பெறுவர். 1-5ம் வகுப்பு வரைதான் அவர்களின் மனதில், எந்தவொரு சிந்தனையும் இல்லாது, எடுத்து கூறுவனவற்றை உள்வாங்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.

இச்சமயத்தில், குழந்தைகளுக்கு படிப்பையும், நற்பண்புகளை வளர்க்கும் குணத்தையும் உருவாக்குவது முக்கியம். நாகரீக உலகில் பரபரப்பான சூழலில் அங்கும், இங்கும் பறக்கும் பெற்றோர், குழந்தைகளுடன் அமர்ந்து நேரத்தை செலவிடுவது அரிதாக உள்ளது.

படிப்பில்லாத கலையை கற்க, செலவழித்து பல பள்ளிகளுக்கு அனுப்புவது சிறந்த காரியம் தான்.

ஓராண்டு முழுவதும் புத்தகப்பையும், பேனாவும் பிடித்து அலைந்த கைகள், அடுத்தபடியாக எதை கற்க விரும்புகிறதோ, அதில் நாட்டத்தை செலுத்த விடுங்கள். நம் பிரியத்தையும், கனவையும் அவர்களின் தலையில் வைக்காமல், அவர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வது நல்லது. விடுமுறையில் ஒரு நாளைக்கு குறைந்தது, 3 மணி நேர வகுப்புக்கு மட்டும் அனுப்புங்கள். மீதமுள்ள நேரத்தில், பெற்றோர், குழந்தைகளுடன் அமர்ந்து பேசலாம். இந்த விடுமுறையில்...

* பெற்றோர், குழந்தைகளுடன் அமர்ந்து பேசும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுவே, அவர்களின் மனநிலையையும், விருப்பங்களையும் அறிந்து கொள்ள உதவும்.

* விடுமுறை நாட்களில் அனுப்பும் வகுப்புகள், அவர்களுக்கு பிடித்தவையாக இருக்க வேண்டும். அப்போது தான், அதில் முழு ஈடுபாடு செலுத்தி சிறந்து விளங்குவர்.

* இதெல்லாவற்றையும் விட, ஊரில் இருக்கும் பாட்டி, தாத்தா உடன் நாட்களை கழிக்க வைப்பது, இன்னும் பல அனுபவங்களை கற்று தருவதோடு, வித்தியாசமான சூழலை அறியும் வாய்ப்பாகவும் அமையும்.

* சில குழந்தைகள், வீடியோ கேம் விளையாடியே நேரத்தை போக்குவர். அதில் மூழ்கி விளையாடும் போது, ஏதாவது ஒரு விளையாட்டில் தோற்றால், மன வருத்தம் அடைகின்றனர். இதற்கெல்லாம் இடம் தராமல், உங்கள் அன்பான பேச்சு காதில் விழுந்தால் மன அழுத்தம் ஏற்படாது.

குழந்தைகளின், 1-5 வகுப்பு வரையிலான பராமரிப்பு முக்கியமானது, ஆகையால், அவர்களுடன் முடிந்தளவு பெற்றோர்கள் உடன் இருந்து பார்த்துக் கொண்டால், எதிர்காலம் சிறப்பாக அமையும்