Friday, December 28, 2012

பெண்ணின் நிழலுக்கும் காவல் வேண்டிய நிலையா?


அன்புள்ள நண்பர்களுக்கு,
  
   வணக்கம். நலம்தானே? நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

எத்தனை எத்தனை மாற்றம் உலகம் அடைந்தாலும் பெண்மைக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் மாறவும் இல்லை.அதன் பாதிப்பு குறையவும் இல்லை. எத்தனையோ கொடுமைகளை நம் காதுகள் கேட்டு விட்டன, அதை ஒதுக்கி தள்ளியும் விட்டது.

வீட்டை விட்டு வெளியே வரவே பெண்கள் யோசித்த காலங்களும், பல அடக்கு முறைகளுக்கு அடங்கி  அடுப்படியே திருப்பதி, ஆம்படையானே பெருமாளு என்றும்  இருந்த காலங்களும் உண்டு. இதை எல்லாம் தாண்டி வெளி உலகத்திற்க்கு வந்து ,சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்கள். அதற்க்குள்ளாகவே பல இன்னல்களை நம் பெண் குலம் பார்த்து விட்டது. ஆனால் அதை எல்லாவற்றையும் விட இப்பொழுது பல பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். சைபர் குற்றங்கள் முதல் கற்ப்பழிப்பு வரை.இந்த விஷயங்களை சாதாரண விஷயங்களாக விட்டு விட முடியுமா? விட்டு விடலாமா?

அதுவும் சமீபகாலமாக நாம் அதிகமாக கேள்விப்படும் அதிர்ச்சியான விஷயம் கற்ப்பழிப்பு. அதற்க்கு முன்பு கூட நாம் கேள்விப்பட்டோம், ஆனால் நம் மனதை அதிகமாக பாதிக்கவில்லை. காரணம் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. இவர்களுக்கு அதிக இலாபம் தரும் நிகழ்ச்சிக்காகவும், தங்கள் கட்சிகளைப்பற்றிப் பெருமை பேசவும், தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும் மட்டுமே இவர்கள்.

அத்தனை சேனல்கள் இருந்தும் நம்மால் எது உண்மை என்று கண்டு கொள்ள முடியாத அளவிற்க்கு பொய்யும், புரட்டும் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. அதனால் நம் நாட்டில் நடந்த எத்தனையோ கற்ப்பழிப்புகள் நமக்கு தெரியவும் இல்லை, குற்றவாளிகள் எவ்வளவு பேர் தண்டிக்கப்பட்டார்கள் என்பதும் தெரியவில்லை.
ஆனால் தற்பொழுது ஒரு கல்லூரி மாணவிக்கு தலைநகரம் தில்லியில் நடந்த ஒரு கொடுமையான பாலியல் பலாத்காரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. அந்த செய்தியைப் படித்ததும் கண்ணீர் வந்தது, அந்த ஓநாய்களை அப்படியே வெட்டி சாய்க்க வேண்டும் போல் ஒரு ஆத்திரம் வந்தது.  ஐந்தறிவு ஜீவன் கூட இப்படி ஒரு கேவலமான செயலை செய்யாது. ஆனால் ஆண் செய்கிறான் அதுவும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல். பெண் என்ன அவ்வளவு கேவலமான பொருளா? தன் தேவைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி எறிய. நம் தமிழ் நாடு இந்தியாவில் 4வது  இடத்தில் இருக்கிறது. எவ்வளவு வேதனையான விஷயம்? 

இதற்கெல்லாம் மத்தியில் பெண்கள் ஆபாசமாக உடை அணிவதால்தான் இப்படி நடக்கிறது என்று சில கோமாளிகள் கூவிக் கொண்டிருக்கிறார்களாமே? அப்படி சொல்பவர்கள் அனைவரைப் பார்த்தும் நான் கேட்க்க விரும்பும் கேள்வி ஒன்றுதான். சமீபத்தில் ஹைதராபாத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த ஐந்து வயது சிறுமி அப்படி என்ன ஆபாச உடை அணிந்து வந்து மயக்கி இருப்பாள் சொல்லுங்கள்?.

வினோதினி என்ற பெண் திராவக வீச்சுக்கு ஆளாகி இருக்கிறாள். பாட்னாவில் மூன்று பேரால் பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண் போலீசாரின் மோசமான விசாரணையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருகிறாள்.இந்த விவகாரத்தில் நாம் சீர்திருத்த வேண்டியதும் செய்ய வேண்டியதும் ஏராளமாக இருக்கிறது. ஆனால் நம் அரசு செய்து கொண்டிருப்பது என்ன? பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் புகைப்படங்களை வெளியிடப் போகிறார்களாம். ஏன் அவர்களைப் பார்த்து மத்த பெண்கள் முடங்கிக்கொள்ளவா? தெரியவில்லை. எங்கே ஓட்டை என்று தேடினால், கிழிந்து போய் கிடக்கிறது நாடு தைக்கவே முடியாத நிலைக்கு.

ஆண்களின் கண்ணோட்டத்தையும், அவர்களின் நினைப்பையும் சீர்திருத்த வேண்டிய கட்டயாமான நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. பத்திரிக்கைகள் ஒரு புறம் கூவிக்கொண்டிருக்கின்றன். கற்ப்பழிப்புக்கு உடைதான் காரணம் என்று. ஆனால் அந்த பத்திரிக்கைகளின் அட்டை படம் முதல் நடுப்பக்கம் வரை கவர்ச்சி படங்கள் கண்ணை கூச வைக்கின்றன. சொல்வது ஒன்று செய்வது ஒன்று நம் நாட்டின் பழக்கமா அது? பெண்ணை தெய்வமாக மதிக்கும் நாடு என் நாடு என்று என்னால் பெருமை பேச மட்டுமே முடிகிறது. எங்கே போனது தெய்வம்? நீ தெய்வமாக மதிக்க
 வேண்டாம் ஆனால் அவளுக்கு உயிரோடு சமாதி கட்ட வேண்டாமே.

இதற்க்கெல்லாம் நடுவில் அரசியல் வாதிகளின் அர்த்தம் இல்லாத விளம்பரப் பேச்சுக்கள்.அவ்வளவும் மனதை பாதிக்கும் விஷயங்கள்.எனது நண்பர் ஒருவர் அழகாக தன் இணைய தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அது, அமெரிக்காவில் ஒரு மனநோயாளி சமீபத்தில் பள்ளியில் நுழைந்து பள்ளி மாணவர்களை கொன்று குவித்தான். அதை குறிப்பிட்டு, அமெரிக்கனே நீ ஏன் அங்கே உள்ள அப்பாவி மாணவர்களை கொன்று குவிக்கிறாய். இங்கே வா, இங்கு நிறைய கற்பழிப்பாளர்கள், கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், சமூகத்தை சுரண்டும் சுயநலவாதிகள் இருக்கிறார்கள். எங்க அரசுக்கு அவங்கள கட்டுப்படுத்த தெரியவில்லை என்று. உண்மைதானே?

 இதற்க்கு கடுமையான தண்டனைகள் இருந்தலேயன்றி இதை நாம் சரி செய்ய முடியாது. அப்பொழுதுதான் இப்படிப்பட்ட ஆண்களுக்கு உறைக்கும். தன் வீட்டில் உள்ள பெண்களைப் போலவே மற்ற பெண்களையும் பாருங்கள். அவர்களும் சக மனிதர்கள் தான். பெண்களே நாமும் விழிப்புணர்வோடு செயல்பட்டு நம்மை தற்க்காத்துக் கொள்வோம். எதிரியை தாக்கும் உத்தியை படிப்போம். இனிமேல் என் நாட்டில் இதைப் போன்ற ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என்று பிரார்த்திப்போம். பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரிகளும் உடலாலும், மனதாலும் நலம் பெற பிரார்த்திப்போம்.

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!
                                         --- பாட்டுச்சித்தன் பாரதி

எது எப்படியோ சேனல்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம்.  தங்கள் முதல் பக்கங்களுக்கு ஒரு மாதத்திற்க்கு விஷயம் இருக்கே.
இதைப்போன்ற ஈனச்செயல்களுக்கு இப்படிப்பட்ட ஒரு கடுமையான போராட்டம் நிச்சயம் தேவை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?

வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
 

Friday, December 07, 2012

படித்ததில் பிடித்தது : புத்தகம் வாசிப்பது

அன்பு நண்பர்களே!!

FB யில் நண்பர் ஒருவர் பகிர்ந்ததை ,நானும் உங்களுடன் பகிர்கிறேன் மகிழ்ச்சியாக.

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார்  ஜவஹர்லால் நேரு

 ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல்.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார்.

‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.

குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங்.

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

from - #FB (நன்றி சூர்யா சுரேஷ் )

http://karpanaisiragugal.blogspot.fr/

நீர்ப்பறவை திரைவிமர்சனம் (Neerpparavai movie review in Tamil)

அன்பு நண்பர்களே!!
வணக்கம். நலம்தானே?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல படத்தின் விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்.
25 வருடங்களுக்கு முன் மீன் பிடிக்கப் போன தந்தை திரும்ப வில்லை.தாய் நடுஇரவில் வீட்டின் பின்பு உள்ள கல்லரையில் அமர்ந்து அழுகிறாள். மகனுக்கு சந்தேகம் வந்து, தோண்டிப்பார்க்க அங்கே ஒரு எலும்புக் கூடு மட்டும். இப்படித்தான் ஆரம்பிக்கிறது படம். ஆரம்பமே நம்மை நிமிர்ந்து உட்க்கார வைக்கிறது. கதை விறுவிறுப்பான க்ரைமாக இருக்குமோ என்று எதிர்ப்பார்த்தால் அதுதான் இல்லங்க.
தாய் எஸ்தரை கைது செய்ததும் , அவர் சொல்லும் கடந்த கால மீனவர்களின் கதையே "நீர்ப்பறவை". மிகவும் குடிக்கு அடிமைப் பட்ட நிலையில் இருக்கும் அருளப்பசாமி(விஷ்ணு), அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து அவரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்கிறார்கள். அவர் எஸ்தரை(சுனைனா) சந்திக்கிறார். இருவரும் காதல் வசப்படுகிறார்கள்.

ஆனால் குடிகாரன் மட்டுமல்லாமல் ஊர் முழுவதும் கடன் வாங்கி குடித்திருக்கும் அருளப்பசாமிக்கி பெண் கொடுக்க மறுக்கிறார் தாய். அதனால் கடலுக்கு சென்று மீன் பிடித்து முன்னேற நினைக்கிறார் அருளப்பசாமி.

ஆனால் இவர் இலங்கை தமிழராக இருந்து இங்கே வந்து வளர்வதால் மீனவர்கள் கடலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். எப்படி இவர் அனைவர் மனதையும் வென்று , கடலுக்கு சென்று, எஸ்தரை மணக்கிறார். யாருடயது அந்த எலும்புக்கூடு?, ஏன் அது அங்கே இருக்கிறது ?என்பதே கதை.

"அழகி"யில் அழகாக நம் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட நந்திதா தாஸ் வயதான எஸ்தராக மீண்டும். அதே மாறாத சோகம், நெஞ்சை பிழியும் அசத்தல் நடிப்பு.

அருளப்பசாமியின் தாயாக சரண்யா பொன்வண்ணன். எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்தக் கூடாதாம், அப்படி பண்ணா உசிரு போயிருமா என்று சொல்வதிலும் ஆகட்டும், மகனுக்கு செல்லம் குடுப்பதிலும் ஆகட்டும் அந்த வெள்ளந்தி நடிப்பில் நம் நெஞ்சை அள்ளுகிறார்.
உடுமன் கானியாக வரும் சமுத்திரக்கனி கொஞ்சம் வந்தாலும் அவர் சொல்லும் "மீனவர்கள் ரெண்டு பேரை சுட்டார்கள் என்பது சாதரண செய்தியாகி விட்டது" , "பத்திரிக்கைக்காரர்களும் தமிழ் மீனவர்கள் இறந்தார்கள் என்று மட்டும் போட்டுவிடுகிறார்கள்" போன்ற வசனங்கள் நெஞ்சில் ஆழப்பதிகின்றன. நமக்குள்ளும் என்று தீரும் இந்த பிரச்சினை?, என்று நம் மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் இறங்குவார்கள்? அரசு ஏன் இப்படி மெத்தனமாக இருக்கின்றது? என்று கேட்க தோன்றுகின்றன.

இளமை எஸ்தராக நடித்திருக்கும் சுனைனா நடிப்பில் ஒரு புது பரிணாமம். அவரின் எளிமையும், ஒரு சோகம் கலந்த புன்னைகையும் மிக அசத்தல்.
கடலுக்குள் சென்றவர் வராமல் தேடும் பொழுது சுனைனா கதறும் பொழுது, நம் கண்களிலும் கண்ணீர்.



விஷ்ணுவிற்க்கும் வெண்ணிலா கபடிக் குழுவிற்க்குப் பிறகு ஒரு நல்ல படம். மீனவர்கள் கடலுக்குள் அனுமதிக்காமல், அந்த ஒத்த கட்டுமரத்துல ஏறிக்காட்டு அப்புறம் பாக்கலாம் என்று சொன்னதும், விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து ஏறி நிற்க்கும் பொழுது நாமும் அங்கே ஜேயிப்பதுப் போல் ஒரு உணர்வு.
ஒவ்வொருவரும் தம்பி ராமைய்யா, அனுபமா ,பாண்டி மற்றும் வடிவுக்கரசி அனைவரும் அசத்தி இருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள் :).

 ஒவ்வொரு மீனவ மனைவியும், தாயும், தந்தையும் எப்படி பரிதவிக்கிறார்கள் மீனவனை கடலுக்குள் அனுப்பி விட்டு. அப்பப்பா, சொல்ல முடியாத சோகம்.

இசை யாருங்க , அட ரகுநாதன் அவர்கள். பரப்பர பறவை ஒன்று எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை. வாழ்த்துக்கள்.

கடலை அப்படியே நம் முன்னாடி அழகாக காட்டி இருக்கும் சீனு ராமசாமி அவர்களுக்கு ஒரு ஓ போடலாங்க :)




Directed bySeenu Ramasamy
Produced byUdhayanidhi Stalin
Screenplay bySeenu Ramasamy
Jeyamohan
StarringVishnu
Sunaina
Nandita Das
Saranya Ponvannan
Anupama Kumar
Music byN. R. Raghunanthan
CinematographyBalasubramaniem
Editing byM. Kasi Viswanathan
StudioRed Giant Movies
Distributed byRed Giant Movies
Release date(s)
  • November 30, 2012 (2012-11-30)
Running time137 minutes
CountryIndia
LanguageTamil


கிறித்துவம், இஸ்லாம் மற்றும் இந்து இப்படி அனைவரையும் ஒன்றாக , ஒற்றுமையாக காட்டி இருக்கிறார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நாம எல்லோரும் ஒற்றுமையா இப்படியே இருக்கனும். என்னங்க நான் சொல்ரது உண்மைதானே. மீண்டும் அடுத்த படத்தில் சந்திப்போமா? வாழ்க வளமுடன்.



படித்ததில் பிடித்தது :மனுஷ்ய புத்திரன்

பிரம்மாண்டத்தில் ஒளிந்திருக்கும்
அற்பத்தை
அற்பத்தில் ஒளிந்திருக்கும்
பிரம்மாண்டத்தை
உருவி எடுக்கையில்
...
கொஞ்சம் இரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது"...

நான் எப்போதோ எழுதி நானே மறந்துபோன இந்த வரிகளை சாட் டில் வந்து ஒரு நண்பர் சற்று முன் பகிர்ந்து கொள்கிறார். ஒரு எழுத்தாளன் களைத்துப் போகிறான். தனித்து விடப்படுகிறான். ஆனால் எழுதபட்ட சொற்கள் எதுவும் ஒருபோதும் களைப்படைவதுமில்லை. தனித்துப் போவதுமில்லை


                              -  மனுஷ்ய புத்திரன்