Friday, June 28, 2013

டா வின்சி போல யோசி!

டா வின்சி போல யோசி!

லியோனார்டோ டா வின்சியை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்? உடற்கூறு வல்லுநர், பொறியியலாளர், நகர வடிவமைப்பாளர், ஆடை, மேடை வடிவமைப்பாளர், சமையற்கலை நிபுணர், அறிவியல் அறிஞர், புவியியலாளர், கணிதவியல் வல்லுநர், நகைச்சுவைப் பேச்சாளர், இசைக்கலைஞர், ஓவியர், தத்துவமேதை, இயற் பியல் மேதை... இன்னும் என்னவெல்லாம்?

இந்த எல்லா அறிமுகங்களுக்கும் பொருத்த மானவர், லியோனார்டோ டா வின்சி. 'சரி... இந்த உலகத்தை வடிவமைத்த மேதைகளில் வின்சிக்கு மறுக்க முடியாத பங்கு இருக்கிறது. 'அவரைப் போலவே நாமும் யோசித்து ஜீனியஸ் ஆகலாம் என்று பொய் நம்பிக்கை ஊட்டுவதைப்போல உள்ளதே 'think like da vinci' என்ற புத்தகத்தின் தலைப்பு' என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், வாவ்... நீங்கள் டா வின்சிபோல யோசிக்கத் துவங்கி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!'இப்படி ஆரம்ப வரிகளிலேயே உற்சாகம் தெளிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் ஜே.கெல்ப்.

டா வின்சி மறைந்தபோது, 'இந்த மனிதரின் மறைவு உலகத்துக்கே ஈடுசெய்ய முடியாதது. இயற்கையாலேயே இன்னொரு டா வின்சியை சிருஷ்டிக்க முடியாது!' என்பதுதான் அவருக்கான அஞ்சலி. அப்படிப்பட்ட ஒருவர்போல நாம் சிந்திக்க முடியாதுதான். ஆனால், அவர் தனது சிந்தனைகளை மேம்படுத்தக் கையாண்ட வழி முறைகளை அறிந்துகொண்டு, நமது சிந்தனைகளையும் ஒரு புதிய பாதையில் பயணிக்கச் செய்யலாம் என்று உத்தரவாதம் தருகிறார் மைக்கேல்.

ஆர்வத்துக்கு அணை போடாதீர்கள்!

ஜீனியஸ்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. பேசத் தொடங்கியவுடன்குழந்தை கள் எதைப் பார்த்தாலும் அது தொடர்பான கேள்வி களைக் கேட்டுக்கொண்டே இருக்கும். 'அம்மா, இந்த கிரைண்டர் எப்படி வேலை செய்கிறது?', 'நான் எப்படிப் பிறந்தேன்?', 'அப்பா, பாப்பா எங்கே இருந்து வருகிறது?', 'ஏன் ஞாயிற்றுக்கிழமை ஐஸ்க்ரீம் கடை லீவு?', இப்படி இப்படி. இந்த உலகத்தில் ஜீனியஸ் என்ற அடைமொழி வழங்கப்பட்டவர்கள் அனைவரும் குழந்தை மனநிலையில் தான் தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள். டா வின்சிக்குப் பெண்கள், மது, செல்வம், செல்வாக்கு, மதப்பற்று என எந்த விஷயங்களும் கிளர்ச்சியூட்டவில்லை. மாறாக, எதைப்பற்றியும் எப்போதும் கேள்விகள் எழுப்பிக்கொண்டே இருப்பதுதான் அவரை எப்போதும் துடிப்பாகவைத்திருந்தது என்கிறார். எப்போது எந்தக் கேள்வி எழுந்தாலும், தன்னுடைய சின்னக் குறிப்புக் கையேட்டில் குறித்து வைத்துக்கொள்வார் டா வின்சி. பின்னர், அவற்றுக் கான பதிலுக்காக மண்டையை உருட்டிக்கொண்டு இருப்பார்.

நீங்களும் எந்தச் சின்னச் சம்பவமாக இருந்தாலும், அதைப்பற்றி டாப் 10 கேள்விகள் எழுப்பிப் பழகுங்கள். உதாரணமாக, ஒரு பறவை பறக்கிறதென்றால்,

ஏன் அதற்கு இரண்டு சிறகுகள்?

ஏன் அவற்றுக்கு உடல் முழுக்க இறகுகள்?

அது எப்படி மேலெழும்புகிறது?

எப்படித் தன் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது?

எப்படி வேகம் எடுக்கிறது?

எப்படி அவற்றால் பறக்க முடிகிறது?

அது எப்போது தூங்கும்?

அதன் பார்வைத் திறன் எவ்வளவு?

எப்படி அது உண்ணும்?

பாதி வழியில் மழை பெய்தால் தொடர்ந்து பறக்குமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை யோசிக்கத் தொடங்கினாலே, பறவையின் மறுபக்கம் குறித்துப் பல புதிய விஷயங்களை அறிந்துகொள்வோம்தானே! நீங்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது இல்லை.ஆனால், அதற்கான உங்கள் சிந்தனை நிச்சயம் உங்களுக்குள்ளேயே ஓர் உற்சாகத்தை ஊற்றுவிக்கும்!

எனது ப்ளஸ், மைனஸ்!

1) எனது பலம், சிறந்த குணங்கள் என்ன?

2) எனது பலவீனம், திருத்திக்கொள்ள - கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

3) இன்னும் திறமையான, உதவும் மனப்பான்மை கொண்ட, சின்ஸியரான நபராக ஆளுமையைவளர்த்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

அதிகபட்சம் ஆறு மாத இடைவெளிகளில் இந்த மூன்று கேள்விகளையும் உங்களுக்கு நெருக்கமான நலன்விரும்பிகளிடம் கேட்டுப் பதில்களைப் பெறுங்கள். நேர்மையான பதில்களுக்கு ஏற்ப உங்கள் மனப்பான்மையில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள் ளுங்கள். கல்லூரி-அலுவலகங்களில் உங்கள் ஜூனியர், நீங்கள் எதிரியாக நினைக்கும் நபரிடம்இருந்து வரும் பதில்களைக்கூட உதாசீனப்படுத்தாதீர்கள். பதில் கள் நீங்கள் கேட்க விரும்பாதவையாக இருந்தால், உஷார் ஆக வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து உடனடியாகச் செயல்படுங்கள்!

எனி டைம் மாணவன்!

கல்லூரிக் காலம் முடிந்து வேலைக்குச் சேர்ந்து, திருமணம் முடித்து, ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதும் இந்த உலகம்பற்றி அனைத்தும் அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர் என்ற அந்தஸ்தை நமக்கு நாமே சூட்டிக் கொள்கிறோம். அங்கேதான் நாம் தங்கித் தேங்கிப்போகி றோம். டா வின்சி மரணப் படுக்கையில் விழும் கடைசி நொடி வரை ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டு இருக்கும் மாணவராகவே இருந்தார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... நமது வாழ்வின் வசந்த காலமாக பள்ளி, கல்லூரிப் பருவங்களைத்தானே ஆயுளுக்கும் குறிப்பிடு வோம். காரணம், அந்தக் காலங்களில் நம்மை உற்சாக மாக வைத்திருக்கும் அந்த மாணவ மனப்பான்மை தான். புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது நம்மை அறியாமல் நமது மனது தனது கதவு, ஜன்னல் களை அகலத் திறந்து வைத்துக்கொள்கிறது. புதிதாக ஓர் ஆடையோ, செல்போனோ, கார் - பைக்கோ வாங்கும்போது எப்படிக் குதூகலம் அடைகிறோமோ, அதேபோலத்தான் நமது அறிவு அப்டேட் ஆகும்போது உற்சாகமாக இருக்கும். புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது, கிடார், நீச்சல், சமையல், டிரைவிங் பழகுவது என சுவாரஸ்யமான பயிற்சிகள் வாழ்வை இன்னும் எளிமை ஆக்கும். அவற்றில் கவனம் செலுத் தலாம்.

ஆனால், எந்தப் பயிற்சியில் ஈடுபட்டாலும் சில விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். பயிற்சி யின்போது நாம் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நாம் ஒரு குழந்தையைப் போலத்தான் என்பதை உணர்ந்துகொண்டு, தெரிந்தவர் கள் வழிநடத்துவதை - அவர்கள் நம்மைவிட எவ்வ ளவு சிறியவர்களாக இருந்தாலும் - ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பயிற்சியை ஆரம்பித்தால், அதைமுடிக் காமல்விடக் கூடாது என்ற உறுதியுடன் இருக்கவேண் டும்!

வாருங்கள்... நாம் அனைவரும் டா வின்சியின் இழப்பை ஈடுசெய்வோம்!

- கி.கார்த்திகேயன்

(thanks to Vikatan.com)

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான்

ரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சின்னாபின்னமானது. என்றாலும், சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக அது எழுந்துவரக் காரணமாக இருந்தவர்கள் இருவர். அந்த இருவரும் ஜப்பானியர்கள் அல்ல, அமெரிக்கர்கள்!            

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒருபக்கம்; இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் எதிர்பக்கம். 1939-ல் தொடங்கிய யுத்தம் 1945 வரை நீடித்தது.  

ஆகஸ்ட் 6, 1945, அதிகாலை 8.15 மணி. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. உலக வரலாற்றின் முதல் அணுகுண்டு வெடிப்பு. நம்பவே முடியாத நாசம். குண்டு வெடித்த பகுதியிலிருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த 90,000 கட்டடங்கள் மண்ணோடு மண்ணாயின. மூன்றில் இரண்டு பகுதி ஹிரோஷிமா அழிந்தது. சுமார் 70,000 பேர் உடனே மரணமடைந்தார்கள். மேலும், 70,000 பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல நோய்களுக்கு ஆளாகி மரணமடைந்தார்கள். ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுக்கு அமெரிக்கா வைத்த சங்கேதப் பெயர் குட்டிப் பையன் (Little Boy).

மூன்று நாட்கள் ஓடின. ஜப்பான் அடிபணியவில்லை. ஆகஸ்ட் 9. காலை மணி 11.02. குண்டுப் பையன் (Fat Boy) என்கிற பெயரில் இன்னொரு அணுகுண்டை நாகசாகி மீது வீசியது அமெரிக்கா. இதனால் 40,000 பேர் உடனே மரணமடைந்தார்கள். 30,000 பேர் கதிர்வீச்சுப் பாதிப்பால் மரணமடைந்தார்கள்.              
ஆகஸ்ட் 15. ஜப்பான் சக்கரவர்த்தி ரேடியோவில் பேசினார், 'என் கண்ணீரை விழுங்கிக்கொண்டு சரணாகதிக்குச் சம்மதிக்கிறேன்.' ஜப்பான், அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாட்டின்
பொருளாதாரம், தொழிற்சாலைகள், பிஸினஸ் அத்தனையுமே நொறுங்கிப் போயிருந்தன. சரணாகதிக்குப்பின், பிஸினஸ் மெள்ள மெள்ள முளைக்கத் தொடங்கியது.

ஜப்பானில் மக்கள் தொகை மிக மிகக் குறைவு. உள்ளூர் மார்க்கெட் இயற்கையிலேயே சிறியதாக இருப்பதால், ஜப்பான் தன் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியை நம்பியிருந்தது. வெளிநாட்டு மார்க்கெட்களைப் பிடிக்க முனைந்த ஜப்பான் குறைந்த விலையில் பொருட்களைத் தயாரித்தது. தரம் இரண்டாம் இடம்தான். இதனால், ஜப்பான் தயாரிப்பு என்றாலே, விலையும் தரமும் குறைந்த சீஃப் சாமான் என்கிற கண்ணோட்டம் உலக அரங்கில் உருவானது.

ஜப்பானை நிர்வகிக்கும் பொறுப்பை ஜெனரல் மெக் ஆர்தர் (MacArthur) வசம் ஒப்படைத்திருந்தது அமெரிக்கா. ஜப்பானின் வளர்ச்சி தொடர்கதையாக வேண்டுமென்றால், உயர்ந்த தரம் என்னும் அடித்தளம் அவசியம் என்று மெக் ஆர்தர் உணர்ந்தார். மக்களிடமும், தொழில் அதிபர்களிடமும் இந்த விழிப்புஉணர்வை உருவாக்க ரேடியோவில் இதுபற்றி அடிக்கடி பேசினார். நாட்டின் தலைவரே நேரடியாக எடுத்த முயற்சியால் தரத்தின் அவசியத்தை மக்கள் மனதில் பதிய வைத்தது.

இதற்காக மெக் ஆர்தர் சிலரை களத்தில் இறக்கினார். அவர்களுள் முக்கியமானவர் ஹோமர் சாராஸோன் (Homer Sarasohn). போரின்போது ஜப்பானின் தொலைதொடர்பு வசதிகளைக் குறிவைத்து அழித்திருந்தது அமெரிக்கா. ஜப்பான் தலைதூக்க இந்த வசதிகளை மீண்டும் எழுப்ப வேண்டும். அப்படி எழுப்பும்போது வெறுமனே ரிப்பேர் வேலை பண்ணாமல் உலகத் தரத்தோடு உருவாக்க வேண்டும். இந்த கனவை நனவாக்க மெக் ஆர்தர் அழைத்து வந்தவர் சாராஸோன்.


சாராஸோனுக்கு அப்போது வயது 29 மட்டுமே. அவரால் சிதிலமாகிப் போன ஜப்பானை மீண்டும் கட்ட முடியுமா என பலரும் நினைத்தனர். மெக் ஆர்தரா கொக்கா? சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருந்தார்.

சாராஸோன் மேஜிக் செய்தார். ரேடியோ, தந்தி, ராடார் துறைகளில் முக்கிய கம்பெனிகளைத் தேர்ந்தெடுத்தார். அதன் தலைவர்களாக மகா திறமைசாலிகளைச் சல்லடையிட்டுச் சலித்தார்.  இவர்கள் அனைவருக்கும் தரத்தின் அவசியம் பற்றி பயிற்சி கொடுத்தார். இல்லை, மூளைச் சலவையே செய்தார். உயர்மட்டத்தில் ஊற்றிய இந்த அறிவு நீர் அடிமட்ட ஊழியர் வேர் வரை கசிந்தது. தரம் இந்த கம்பெனிகளின் தாரக மந்திரமானது.

ஆனால், ஜப்பான் உற்பத்தி செய்த இப்பொருட்களின் தரம் மட்டும் உயர்ந்தால் போதுமா? நாட்டின் அத்தனை தொழிற்சாலைகளும் தர மந்திரத்தை உச்சரிக்க வேண்டாமோ? இந்த அறிவுப் பரப்பலுக்கு சாராஸோன் ஒரு உலக மேதையைத் தயாராக வைத்திருந்தார். அவர் எட்வர்ட்ஸ் டெமிங் (Edwards Deming).

1950-ல் சாராஸோன், டெமிங்கை ஜப்பானில் ஒரு கருத்தரங்கு நடத்துமாறு அழைத்தார். அதில் அவர் பேசிய பேச்சு சூப்பர் டூப்பர் ஹிட். டெமிங் ஜப்பானின் தரக் கடவுளானார். அவரது கொள்கைகளை Union of Japanese Scientists and Engineers (JUSE)என்கிற முன்னணி அமைப்பு 30 நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தி நாடெங்கும் பரவ வைத்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் 20,000 அறிவியல் வல்லுநர்களும்,     விஞ்ஞானிகளும் டெமிங் கொள்கையில் தேர்ச்சி பெற்றார்கள். ஜப்பானுக்கு என்ன தேவையோ, அதைத் தருகிற தேவதூதன் ஆனார் டெமிங்.

குவாலிட்டி மேனேஜ்மென்ட் என்கிற தர நிர்வாகத்தின் வரலாற்றுக்கு  நான்கு காலகட்டம். 1. பரிசோதனைக் ( Inspection) காலம், 2. தரக் கட்டுப்பாடு (Quality Control) காலம், 3. தர உறுதிப்படுத்துதல் (Quality Assurance)  காலம், 4. முழு தர மேலாண்மை (Total Quality Management) காலம்.

அமெரிக்கா போன்ற நிர்வாகத் துறையில் முன்னணியில் நிற்கும் நாடுகள்கூட முதல் மூன்று நிலைகளைக் கடந்திருக்க, ஜப்பானோ, முழு தர மேலாண்மை என்கிற உச்சத்தைத் தொட்டுவிட்டது.

முழு தர மேலாண்மை பிற நிலைகளைவிட ஏன் மேலானது? முதல் மூன்று நிலைகளிலும் தரக் கட்டுப்பாடு தரப் பரிசோதனையாளர்கள் அல்லது உற்பத்தி நிர்வாகிகளின் பொறுப்பு. ஆனால், முழு தர மேலாண்மையில் தரம் என்பது முதலாளி தொடங்கி காபி, டீ வாங்கிவரும் ஆபீஸ் பையன் வரை அத்தனை ஊழியர்கள் மனதிலும் தவிர்க்க முடியாத விஷயமாகப் பதியப்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஊழியரிடமும் தர உணர்வு, முயற்சி எடுக்காமல் அனிச்சைச் செயலாக வருகிறது.

முழு தர மேலாண்மையை கம்பெனிகளில் நிறைவேற்றுவது எப்படி? இதற்காக டெமிங் 14 கட்டளைகள் வகுத்தார். (பார்க்க பெட்டிச் செய்தியில்!) இந்த பதினான்கு கட்டளைகள் முகேஷ் அம்பானி முதல் மூலக்கடை முத்து வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய வேதபாடம். நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், ஜப்பானைப் போல் ஜெயித்துக் காட்டுவீர்கள்!
(கற்போம்)
படங்கள்: வி.ராஜேஷ், ரா.நரேந்திரன்.


1. நமது தயாரிப்புகள்/சேவைகளின் தரத்தை மேம்படுத்துவது, போட்டியில் முன்நிற்பது, தொழிலில் நீடிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களிலிருந்து நாம் எப்போதும் விலகக்கூடாது.

2. இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட காலதாமதம், தவறுகள், குறைபாடான பொருட்கள், வேலைத்திறன் ஆகியவற்றை இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  

3. தரம் தயாரிப்பின் அங்கமாகட்டும்.

4. வாங்கும் மூலப் பொருட்களின் தரத்தை உயர்த்துவோம். விலையை மட்டும் அடிப்படையாக வைத்து மூலப் பொருட்கள் வாங்குவதை நிறுத்துவோம். விலை, தரம் ஆகிய இரண்டும் பொருட்கள் வாங்கும் அளவுகோல்கள் ஆகட்டும்.

5. பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடிப்போம். பொருட்கள்/சேவைகளின் தரத்தை தொடர்ந்து முன்னேற்றுவோம். விரயம் தொடர்ந்து குறைய வேண்டும்; ஒவ்வொரு செயல்பாட்டிலும் இவை வெளிப்பட்டு, உற்பத்தித் திறன் உயர்ந்து செலவுகள் குறைய வேண்டும்.

6. எல்லோருக்கும் பயிற்சி அவசியம். பயிற்சிக்கு நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் தன் வேலையைச் செம்மையாகச் செய்வதற்கான பயிற்சி தரப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கவேண்டும்.

7. நவீன மேற்பார்வை முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலதிகாரியின் கடமை, அவர் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் தம் பணிகளைச் சிறப்பாகச் செய்ய உதவுவது. தரம் உயர்ந்தால், உற்பத்தித் திறன் உயரும். மேலதிகாரிகள் சுட்டிக் காட்டும் குறைகள், இயந்திரச் சீர்கேடு, தவறான உபகரணங்கள், தவறான உற்பத்தி முறைகள் ஆகியவற்றில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. பயம், முன்னேற்றத்தின் முக்கிய எதிரி. தொழிலாளிகளும் அதிகாரிகளும் சுமூகமாகப் பழகுவதன் மூலம் பயத்தை ஒழிக்கலாம். நிறுவனத்தின் அத்தனை ஊழியர்களும் மாற்றங்களில் பங்கெடுக்க வேண்டும்.

9. கம்பெனியின் பற்பல துறைகளுக்குள்ளும் இருக்கும் பிரிவினைச் சுவர்களை அகற்ற வேண்டும். தயாரிப்புப் பொருட்கள்/சேவைகள் ஆகியவை தொடர்பான பிரச்னைகளை ஆராய்ச்சி, டிசைன், நிர்வாகம், உற்பத்தி ஆகிய எல்லாத் துறைகளும் ஓர் அணியாகத் தோளோடு தோள் கொடுத்து எதிர் மோத வேண்டும்.

10. தர உயர்வைச் செயல்படுத்தவும், விரயங்களைத் தடுக்கவும் தக்க முறைகளைத் தொழிலாளிகளுக்குக் கற்றுத் தரவேண்டும், இதைச் செய்யாமல், வெறும் கோஷங்கள், போஸ்டர்கள், வார்த்தை ஜாலங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவது பயனற்ற வேலை.  

11. இலக்குகளை எண்ணிக்கைகளில் மட்டுமே வைப்பது பலன் தராது. தலைமைப் பண்புகளை வளர்க்க வேண்டும்.    

12. ஒவ்வொரு தொழிலாளியும், அதிகாரியும் தங்கள் வேலை குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

13. பயிற்சியால் எல்லோரும் சுய முன்னேற்றம் பெறச் செய்ய வேண்டும். எல்லா நிறுவனங்களுக்கும் நல்ல ஊழியர்கள் இருந்தால் மட்டும் போதாது, இவர்கள் பயிற்சியால் தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிருக்க வேண்டும்.

14. தரத்தைத் தொடர்ந்து உயர வைக்கும் நடவடிக்கைகளில் நிர்வாகத் தலைமை முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.

(Thanks to Vikatan.com)

Thursday, June 27, 2013

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு •

நன்றாகக் குளிக்க வேண்டும்
வெந்நீராக இருந்தால் மிகவும் நல்லது
இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத‌
தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

தெருவில் இறங்கி நடக்கும்போது
அடிக்கடித் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை

அதிக இறுக்கம் அதிக இணக்கம்
இரண்டுமே நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும்
குழந்தைகளை இயல்பாகக் கொஞ்சவேண்டும்

மர்மமாகப் புன்னகைப்பவர்கள்
கேட்காமலேயே தம் பேச்சை மாற்றுபவர்கள்
செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள்
எல்லோரையும் நாகரீகமாக வணங்கலாம்

சாதுரியமாக விரைவாக‌
தப்பிச் சென்றுவிட வேண்டும்
நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருதும்

தனித்த அறை ஒன்றில்
மனங்கசந்து அழும்போது
கதவு தட்டும் ஓசைகேட்டு
கண்களைத் துடைத்துக்கொள்ள வேண்டும்

எல்லையற்றது
இந்த உலகின் தீமை
எல்லையற்றது
இந்த உலகின் கருணை!

-Manushya Puthiran

Wednesday, June 26, 2013

Today's Quote :)

தீயா வேலை செய்யனும் குமாரு....திரை விமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!

    வணக்கம். நலம்தானே?

மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. நாம் இன்று பார்க்க இருக்கும் படம் தீயா வேலை செய்யனும் குமாரு... வாங்க படத்தை பார்க்கலாம்.

  படத்துல ரெண்டு கதாநாயகன்ங்க. இல்ல இல்ல சந்தானம் சேர்த்து மூணுங்க. ஏன்னா படம் முழுக்க கூட வருவது இவருதாங்க. குமார்(சித்தார்த்) இவரப் பத்தி மொதல்ல பார்க்கலாம். இவர் குடும்பத்துல கொள்ளு தாத்தாவுல இருந்து இவரோட கடைசி அக்கா வரைக்கும் காதல் திருமணம் செய்தவர்கள். ஆனால் குமாருக்கோ காதல் என்றால் வேப்பங்காய். பெண் என்றால் பாகற்க்காய் :). அதற்க்கு காரணமாக அவரது சிறுவயது பிரச்சினைகளையும், அவர் பெண்களிடம் வாங்கிய பல்ப்புகளையும் காமிக்கிறார்கள். இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் பணிபுரியும் இடத்தில் இவரை விட உயர்ந்த நிலையில் ஜார்ஜ்(கணேஷ்) இருக்கிறார். செம மேன்லியாக இருக்கும் இவர் மேல் அனைத்து பெண்களுக்கும் ஒரு கண்ணு.

  சஞ்சனா(ஹன்சிகா) இவர்களுடன் வேலையில் சேர, அத்தனை பேரும் மொய்க்க இதில் ரெண்டு கதாநாயகன் மட்டும் விதிவிலக்கா என்ன? சித்தார்த் காதலில் விழ ஆனால் அதற்க்கு கணேஷ் குறுக்கே வருகிறார். இதனால் மோக்கியா என்ற பெயரில் வரும் சந்தானம் இவருக்கு முழு பயிற்ச்சி அழிக்கிறார். பயிற்ச்சி முழுவதும் வயிறு குலுங்க குலுங்க சிரிப்புதாங்க. 
இந்த பயிற்ச்சிக்கு அப்புறம் இவர் ஹன்சிகாவின் காதலைப் பெற்றாரா? என்பதே கதை.


  ஆரம்பத்தில் அப்பாவியாக வரும் சித்தார்த் பெண்களை அசர வைக்கிறார். எப்படி பெண்களை புகழ வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார். என்ன மாதிரி சராசரி ஆளுங்கதான் உங்க கூட எப்பவும் நாய் மாதிரி சுத்தி வருவாங்க என்று சொல்வதிலாகட்டும், சந்தானம் வைக்கும் பரிச்சைகளில் திருதிரு வென்று முழிப்பதில் ஆகட்டும் மிக அருமை. இயல்பாக நடித்திருக்கிறார்.

  மோக்கியாவாக வரும் சந்தானம் மனதை அள்ளுகிறார். ஒவ்வொரு முறை அவர் உபதேஷம் அளித்து விட்டு பணத்தைக் கறப்பது மிகவும் கலாட்டா. ஹன்சிகாவை காதலிக்க ஜடியாவைக் கொடுத்துவிட்டு அது தன் தங்கைதான் என்று தெரித்ததும் வில்லனாக அவதாரம் எடுப்பது விசேஷ சிறப்பு. பாலியல் தொழில் செய்யும் இடத்தில் இவரும், மனோபாலாவும் அடிக்கும் கூத்து சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியிலும் சந்தானம் தன்னுடைய நடிப்பிலும், இவர் ஆப்பிள் முதல் ஜபேட் வரை பெண்களை வகைப்படுத்தி அடிக்கும் காட்சியிலும் மிக மிக கலக்கல்.


   வசனங்கள் நன்றாக இருக்கிறது உதாரணத்திற்க்கு காலையில தென்னமரம் வைத்துவிட்டு, சாயங்காலம் சட்னி கேட்டா எப்படி போன்ற வசனங்கள் சிறப்பு. இசை சத்யா சில பாடல்கள் கேட்கும்படி உள்ளது. ஆனால் மனதில் நிற்க்க வில்லை.

  சுந்தர் C இயக்கத்தில் வந்த இன்னொரு கலகலப்பு. எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் காமெடி மட்டுமே பிராதானமாக வைத்து எடுக்கப் பட்ட படும். ஹன்சிகா கொஞ்சம் உடம்பைக் குறைத்து, ரசிகர்களுக்கு எனர்ஜியை ஏத்தி இருக்கிறார். குஷ்பூவின் உடை வடிவமைப்பில் மின்னுகிறார். சில முகபாவங்கள் குஷ்பூ செய்வது போலவே நமக்கு தோன்றுகிறது.


 எல்லாரும் திருட்டு பசங்க என்று படத்தை முடிக்கிறார்கள். நீங்களும் படத்தைப் பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க நண்பர்களே.

மீண்டும் சந்திக்கலாமா?

Monday, June 24, 2013

படித்ததில் பிடித்தது :)

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.


* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.


* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.


* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.


* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.


* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.


* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.


* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.


* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.


** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்