Friday, June 28, 2013

டா வின்சி போல யோசி!

டா வின்சி போல யோசி!

லியோனார்டோ டா வின்சியை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்? உடற்கூறு வல்லுநர், பொறியியலாளர், நகர வடிவமைப்பாளர், ஆடை, மேடை வடிவமைப்பாளர், சமையற்கலை நிபுணர், அறிவியல் அறிஞர், புவியியலாளர், கணிதவியல் வல்லுநர், நகைச்சுவைப் பேச்சாளர், இசைக்கலைஞர், ஓவியர், தத்துவமேதை, இயற் பியல் மேதை... இன்னும் என்னவெல்லாம்?

இந்த எல்லா அறிமுகங்களுக்கும் பொருத்த மானவர், லியோனார்டோ டா வின்சி. 'சரி... இந்த உலகத்தை வடிவமைத்த மேதைகளில் வின்சிக்கு மறுக்க முடியாத பங்கு இருக்கிறது. 'அவரைப் போலவே நாமும் யோசித்து ஜீனியஸ் ஆகலாம் என்று பொய் நம்பிக்கை ஊட்டுவதைப்போல உள்ளதே 'think like da vinci' என்ற புத்தகத்தின் தலைப்பு' என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், வாவ்... நீங்கள் டா வின்சிபோல யோசிக்கத் துவங்கி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!'இப்படி ஆரம்ப வரிகளிலேயே உற்சாகம் தெளிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் ஜே.கெல்ப்.

டா வின்சி மறைந்தபோது, 'இந்த மனிதரின் மறைவு உலகத்துக்கே ஈடுசெய்ய முடியாதது. இயற்கையாலேயே இன்னொரு டா வின்சியை சிருஷ்டிக்க முடியாது!' என்பதுதான் அவருக்கான அஞ்சலி. அப்படிப்பட்ட ஒருவர்போல நாம் சிந்திக்க முடியாதுதான். ஆனால், அவர் தனது சிந்தனைகளை மேம்படுத்தக் கையாண்ட வழி முறைகளை அறிந்துகொண்டு, நமது சிந்தனைகளையும் ஒரு புதிய பாதையில் பயணிக்கச் செய்யலாம் என்று உத்தரவாதம் தருகிறார் மைக்கேல்.

ஆர்வத்துக்கு அணை போடாதீர்கள்!

ஜீனியஸ்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. பேசத் தொடங்கியவுடன்குழந்தை கள் எதைப் பார்த்தாலும் அது தொடர்பான கேள்வி களைக் கேட்டுக்கொண்டே இருக்கும். 'அம்மா, இந்த கிரைண்டர் எப்படி வேலை செய்கிறது?', 'நான் எப்படிப் பிறந்தேன்?', 'அப்பா, பாப்பா எங்கே இருந்து வருகிறது?', 'ஏன் ஞாயிற்றுக்கிழமை ஐஸ்க்ரீம் கடை லீவு?', இப்படி இப்படி. இந்த உலகத்தில் ஜீனியஸ் என்ற அடைமொழி வழங்கப்பட்டவர்கள் அனைவரும் குழந்தை மனநிலையில் தான் தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள். டா வின்சிக்குப் பெண்கள், மது, செல்வம், செல்வாக்கு, மதப்பற்று என எந்த விஷயங்களும் கிளர்ச்சியூட்டவில்லை. மாறாக, எதைப்பற்றியும் எப்போதும் கேள்விகள் எழுப்பிக்கொண்டே இருப்பதுதான் அவரை எப்போதும் துடிப்பாகவைத்திருந்தது என்கிறார். எப்போது எந்தக் கேள்வி எழுந்தாலும், தன்னுடைய சின்னக் குறிப்புக் கையேட்டில் குறித்து வைத்துக்கொள்வார் டா வின்சி. பின்னர், அவற்றுக் கான பதிலுக்காக மண்டையை உருட்டிக்கொண்டு இருப்பார்.

நீங்களும் எந்தச் சின்னச் சம்பவமாக இருந்தாலும், அதைப்பற்றி டாப் 10 கேள்விகள் எழுப்பிப் பழகுங்கள். உதாரணமாக, ஒரு பறவை பறக்கிறதென்றால்,

ஏன் அதற்கு இரண்டு சிறகுகள்?

ஏன் அவற்றுக்கு உடல் முழுக்க இறகுகள்?

அது எப்படி மேலெழும்புகிறது?

எப்படித் தன் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது?

எப்படி வேகம் எடுக்கிறது?

எப்படி அவற்றால் பறக்க முடிகிறது?

அது எப்போது தூங்கும்?

அதன் பார்வைத் திறன் எவ்வளவு?

எப்படி அது உண்ணும்?

பாதி வழியில் மழை பெய்தால் தொடர்ந்து பறக்குமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை யோசிக்கத் தொடங்கினாலே, பறவையின் மறுபக்கம் குறித்துப் பல புதிய விஷயங்களை அறிந்துகொள்வோம்தானே! நீங்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது இல்லை.ஆனால், அதற்கான உங்கள் சிந்தனை நிச்சயம் உங்களுக்குள்ளேயே ஓர் உற்சாகத்தை ஊற்றுவிக்கும்!

எனது ப்ளஸ், மைனஸ்!

1) எனது பலம், சிறந்த குணங்கள் என்ன?

2) எனது பலவீனம், திருத்திக்கொள்ள - கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

3) இன்னும் திறமையான, உதவும் மனப்பான்மை கொண்ட, சின்ஸியரான நபராக ஆளுமையைவளர்த்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

அதிகபட்சம் ஆறு மாத இடைவெளிகளில் இந்த மூன்று கேள்விகளையும் உங்களுக்கு நெருக்கமான நலன்விரும்பிகளிடம் கேட்டுப் பதில்களைப் பெறுங்கள். நேர்மையான பதில்களுக்கு ஏற்ப உங்கள் மனப்பான்மையில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள் ளுங்கள். கல்லூரி-அலுவலகங்களில் உங்கள் ஜூனியர், நீங்கள் எதிரியாக நினைக்கும் நபரிடம்இருந்து வரும் பதில்களைக்கூட உதாசீனப்படுத்தாதீர்கள். பதில் கள் நீங்கள் கேட்க விரும்பாதவையாக இருந்தால், உஷார் ஆக வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து உடனடியாகச் செயல்படுங்கள்!

எனி டைம் மாணவன்!

கல்லூரிக் காலம் முடிந்து வேலைக்குச் சேர்ந்து, திருமணம் முடித்து, ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதும் இந்த உலகம்பற்றி அனைத்தும் அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர் என்ற அந்தஸ்தை நமக்கு நாமே சூட்டிக் கொள்கிறோம். அங்கேதான் நாம் தங்கித் தேங்கிப்போகி றோம். டா வின்சி மரணப் படுக்கையில் விழும் கடைசி நொடி வரை ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டு இருக்கும் மாணவராகவே இருந்தார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... நமது வாழ்வின் வசந்த காலமாக பள்ளி, கல்லூரிப் பருவங்களைத்தானே ஆயுளுக்கும் குறிப்பிடு வோம். காரணம், அந்தக் காலங்களில் நம்மை உற்சாக மாக வைத்திருக்கும் அந்த மாணவ மனப்பான்மை தான். புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது நம்மை அறியாமல் நமது மனது தனது கதவு, ஜன்னல் களை அகலத் திறந்து வைத்துக்கொள்கிறது. புதிதாக ஓர் ஆடையோ, செல்போனோ, கார் - பைக்கோ வாங்கும்போது எப்படிக் குதூகலம் அடைகிறோமோ, அதேபோலத்தான் நமது அறிவு அப்டேட் ஆகும்போது உற்சாகமாக இருக்கும். புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது, கிடார், நீச்சல், சமையல், டிரைவிங் பழகுவது என சுவாரஸ்யமான பயிற்சிகள் வாழ்வை இன்னும் எளிமை ஆக்கும். அவற்றில் கவனம் செலுத் தலாம்.

ஆனால், எந்தப் பயிற்சியில் ஈடுபட்டாலும் சில விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். பயிற்சி யின்போது நாம் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நாம் ஒரு குழந்தையைப் போலத்தான் என்பதை உணர்ந்துகொண்டு, தெரிந்தவர் கள் வழிநடத்துவதை - அவர்கள் நம்மைவிட எவ்வ ளவு சிறியவர்களாக இருந்தாலும் - ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பயிற்சியை ஆரம்பித்தால், அதைமுடிக் காமல்விடக் கூடாது என்ற உறுதியுடன் இருக்கவேண் டும்!

வாருங்கள்... நாம் அனைவரும் டா வின்சியின் இழப்பை ஈடுசெய்வோம்!

- கி.கார்த்திகேயன்

(thanks to Vikatan.com)

No comments: