Wednesday, March 26, 2014

மார்ச் 26: மகா கலைஞன் பீத்தோவன் நினைவு தின சிறப்பு பகிர்வு(Beethovan)

மேற்குலக இசையுலகின் சூப்பர் ஸ்டார்கள் என்றால் மொஸார்ட் மற்றும் பீத்தோவன் ஆகிய இருவரையும் குறிக்கலாம். இதில் மொஸார்ட் பிறவி மேதை ; பீத்தோவன் குறைபாடுகளில் வலிகளோடு நகர்ந்து உன்னதம் அடைந்தவர்.
பீத்தோவனின் குடும்பத்தில் எண்ணற்றோர் இசைக்கலைஞர்கள். இவரின் தந்தையும் நல்ல இசைக்கலைஞர். மொஸார்ட் எனும் மாமேதை அப்பொழுது உச்சத்தை அடைந்துகொண்டு இருந்தார். அவரைப்போல தன் மகனும் ஆகவேண்டும் என்று நிற்க வைத்து மணிக்கணக்காக இசைப்பயிற்சி தந்தார் தந்தை. கால் வலிக்கிறது என்று சின்ன வயது பீத்தோவன் அழுதால் அழுதால் முட்டியை அடியால் பெயர்த்து விடுவார். கை விரல்களின் நடுவே பிரம்பால் அடித்து சித்திரவதையின் மூலம் இசைப்பெருக்கை கொண்டு வந்து விட அவர் முயன்ற தருணங்களில் எல்லாம் பீத்தோவன் உள்ளுக்குள் குமுறினார்.
மொஸார்டுடன் இணைந்து இசைப்பணியாற்ற கிளம்பிய அவர் அம்மா இறந்து போனதால் வீட்டுக்கு திரும்ப நேரிட்டது. தந்தை இன்னமும் மோசமாக குடிக்க ஆரம்பித்து இருந்தார். இரண்டு தம்பிகள் வேறு இருந்தார்கள். அவர்கள் எல்லாரையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் இசைப்பயணத்தை கொஞ்சம் நிறுத்தி வைத்தார்.
மீண்டும் இசைக்க ஆரம்பித்து எண்ணற்ற அற்புதமான கோர்வைகளை தந்தார். அவரின் ஒரு சில இசைக்கோர்வைகளை உருவாக்க எட்டு வருடங்கள் கூட எடுத்துக்கொண்டார் என்பது அவரின் அசாத்திய உழைப்பை காட்டும். எத்தனையோ இசைக்கோர்வைகள் வந்தாலும் அவருக்கு மனதில் நிம்மதி உண்டாகவே இல்லை.

காதலை தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்த அவருக்கு முழுமையான ஒரு காதல் கிட்டவே இல்லை. காதலியை நிலா வெளிச்சத்தில் சந்தித்து முத்தமிட்டதை மூன் லைட் சோனாட்டா என்று இசையாக மாற்றுகிற அளவுக்கு அவருக்கான ஒரே வடிகாலாக இசை இருந்தது.
பீத்தோவன் இறந்த பின்னர் அவரின் கடித குவியலில் இருந்து “immortal beloved” என்று ஒரு பெண்ணுக்கு எழுதிய காதல் ததும்பும் கடிதங்கள் கிடைத்தன. அவர் யாரென்றே தெரியவில்லை. அதில் இருந்த வரிகள் இவை :
ஏன் மிகவும் நேசிக்கிற ஒருவரிடம் இருந்து பிரிந்தே இருக்குமாறு நேரிடுகிறது ? வியன்னாவில் என்னுடைய வாழ்க்கை துன்பமயமாக இருக்கிறது. உன் காதல் மாந்தருள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவனாகவும்,சோகம் நிறைந்தவனாகவும் ஆக்கியிருக்கிறது….அமைதியாக இரு. என்னை காதலி ! இன்று-நேற்று-எத்தகைய கண்ணீர் தரும் காத்திருப்பை உனக்கு நான் தந்திருக்கிறேன். உனக்காக,என் வாழ்க்கையான உனக்காக… தொடர்ந்து என்னை காதலி ! உன் காதலனின் நன்றி
மிகுந்த இதயத்தை எப்பொழுதும் தவறாக எடை போட்டு விடாதே.
இருபத்தி ஆறு வயதில் தான் பீத்தோவனின் காதுகளில் மணி யடிப்பது போல தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. படிப்படியாக காது கேட்காமல் போனது. டின்னிடஸ் எனும் அரிதான நோய் அது. போர்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த
மன்னர்கள் அவரை கவனித்துக்கொள்ளவில்லை. வருமானத்துக்கு வழியில்லாமல் தன்னுடைய இசைக்கோர்வைகளை மிக சொற்ப விலைக்கு விற்றார் அவர்.
முழுமையாக காது கேட்காமல் போன பிறகு நடந்த முதல் இசை நிகழ்ச்சி பெருந்தோல்வியில் முடிந்தது. மனந்தளர்ந்து வேசிகளிடம் போய் அமைதி தேடினார் அவர். அப்பொழுதும் அவரால் அமைதி பெற முடியவில்லை. அவரின் இசைக்கோர்வைகள் எப்படி தங்களை உத்வேகப்படுத்தின என்று நண்பர்கள் எழுதிக்கொண்டு வந்து கொடுத்தார்கள். அதைப்படித்து மீண்டும் இசைக்கலாம் என்று கனத்த மவுனத்துக்கும், சோகத்துக்கும் நடுவில் பீத்தோவன் வந்தார்.
பல்லாயிரம் பேர் நின்று கொண்டு இருந்தார்கள். இசைக்கருவியை தொட்ட பொழுது வெறுமை மட்டுமே அவரை சூழ்ந்திருந்தது. சுற்றியிருந்த எதுவுமே கேட்கவில்லை ; நிச்சயமாக எதுவுமே ! ஒவ்வொரு கட்டையாக அழுத்திய பொழுது எழுந்த அதிர்வை மட்டுமே கொண்டு இசைத்தார் அவர். வாசித்து முடித்ததும் கூர்மையான விமர்சனப்பார்வை கொண்ட கூட்டத்தின் எல்லாரும் எழுந்து நின்று அவரின் இசைக்கு எல்லாரும் கைதட்டிய பொழுது பொங்கி அழுதார் அவர்.
அதற்கு பிறகு மிகப்புகழ் பெற்ற இசைக்கொர்வைகளை உருவாக்கி தள்ளினார் அவர். அவரின் இசை எப்படி காலங்களை கடந்து நிற்கிறது என்பதற்கு ஒரே ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாக சொல்ல முடியும். உலகப்போர் சமயத்தில் துவண்டு போன பிரிட்டன் வீரர்கள் மற்றும் மக்களை உற்சாகப்படுத்த பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனி தொடர்ந்து இசைக்கப்பட்டது. துவண்டு கிடந்த தேசம் நிமிர்ந்து நின்று போராடி வென்றது.
அவரின் இசை காலங்களை கடந்து மொஸார்ட்டின் கோர்வைகளுக்கு இணையாக கொண்டாடப்படுகிறது. இருவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. மொசார்ட் பிறவி மேதை ; பீத்தோவன் தன்னுடைய வலிகள், தோல்விகள், உடற்குறைபாடுகள் எல்லாவற்றுக்கும் இசையின் மூலம் வடிகால் தேடினார். பீத்தோவன் உருவத்தில் குள்ளம், காது கேட்காமல் போனது. இருந்தாலும் அவரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு நூற்றாண்டுகளை கடந்து அவரை நினைக்க வைக்கிறது. சோகங்களை தன்னுடைய கலையில் தோய்த்து கொடுத்த மகா கலைஞன் அவர். அவரின் நினைவு தினம்
இன்று.
- பூ.கொ.சரவணன்

No comments: