Sunday, April 13, 2014

நான் சிகப்பு மனிதன் திரைவிமர்சனம் ( Naan Sikappu manithan tamil movie review)

அன்புள்ள தோழமைகளே!

     வணக்கம். நலம்தானே? திரு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் நான் சிகப்பு மனிதன். மிகப்பெரும் வெற்றி அடைந்த படம் என்று கூட சொல்லாம். அதே பெயரில் மீண்டும் வெளி வந்துள்ள படம் நான் சிகப்பு மனிதன். வாங்க படத்தைப் பார்க்கலாம்.

   நான்கு நபர்கள் ரயிலில் குடிக்கிறார்கள். அவர்களை தட்டிக் கேட்கும் காவலதிகாரியை கொலை செய்கிறார்கள். இப்படி ஆரம்பிக்கிறது படம். இந்திரன் (விஷால்) தன் நண்பர்கள் ஜகன் மற்றும் சுந்தர் ராமுவுடன் சென்று ஒருவரிடம் துப்பாக்கி வாங்குகிறார். தன்னுடைய டைரியில் வேறு தட்டிக் கேட்கணும் என்று எழுதி வைத்திருக்கிறார். நாமும் இதுவும் ஏதோ பழி வாங்குகிற படம்னு நினைக்கத் தோன்றுகிறது. இந்திரன் தன்னுடைய டைரியில் இருக்கும் வாசகங்களை பார்த்து கொண்டே நம்மை பின்னோக்கி இழுத்து செல்கிறார்.

  இந்திரன் அம்மா ஒரு பள்ளியில் வேலை பார்க்கிறார். அங்கேதான் நம்ம குட்டி இந்திரனும் படிக்கிறார். இவருக்கு நார்கொலெப்சி(narcolepsy) என்று அழைக்கப்படும் ஒரு விதமான தூங்கும் பிரச்சினை சிறுவயது முதல் இருக்கிறது. ஏதாவது சத்தம் கேட்டாலோ அல்லது உணர்ச்சி வசப்பட்டாலோ இவர் எந்த இடம், எந்த நேரம் என்று பார்க்காமல் தூங்கி விடுவார். ஆனால் இவரால் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நடக்கும் அல்லது கேட்கும் விஷயங்கள் மனதில் பதிந்து விடும். இதை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள் மருத்துவர்கள். பலப் பிரச்சினைகளுக்கு நடுவே வளர்ந்து படிப்பை முடிக்கிறார். இந்த பிரச்சினையால் வேலை கிடைக்கவில்லை. ஆனால் இந்த பிரச்சினையாலேயே முதல் சம்பளம் வாங்குகிறார். வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கிறார். இவர் டைரியில் எழுதி வைத்திருந்தபடியே ஒவ்வொன்றாக செய்து வரும் இவர் சாலையில் தனியாக நடக்க நினைக்கிறார். அதன்படியே செல்லும் பொழுது, சாலையில் தூங்கி விடுகிறார். இவரை பயன்படுத்தி ஒருவர் அனாதை பொணம் புதைக்கணும் என்று சொல்லி பிச்சை எடுக்க, அங்கே வரும் மீரா( லக்ஷ்மி மேனன்) பரிதாபப் பட்டு பணம் கொடுக்கிறார். அடுத்த நாளே உண்மை தெரிய வருகிறது. தூங்குவது ஒரு வரம் என்று சொல்ல, இந்திரனுக்கு காதல் வருகிறது.மீராவை மாப்பிள்ளை பார்க்க மறுநாள் வருகிறார்கள் என்று தெரிந்து வருந்துகிறார். சில கேள்விக் கேட்டு தனக்கு அந்த மாப்பிள்ளை ஒத்து வரவில்லை என்று சொல்லி விடுகிறார். இந்திரனும் இவரும் நண்பர்களாகி, பின் காதலர்களாகிறார்கள். இவர்கள் திருமணத்துக்கு மீராவின் தந்தை ஒத்துக் கொள்வதில்லை,ஏனெனில் இவரால் குழந்தைக்கு தந்தையாக முடியாது. உணர்ச்சி வசப்பட்டாலே இவர் தூங்கி விடுவார் என்பதால்.

 இவர்கள் இருவரும் வெளியே செல்லும் பொழுது, கார் ஒன்று இவர்கள் கார் மீது மோத அந்த அதிர்ச்சியில் இந்திரன் மயங்கி விடுகிறார். அந்த கார் இவர்களுக்கு வழி கொடுக்காமல் இருக்கிறது. இவர் கீழே இறங்கியதும் நான்கு நபர்கள் மீராவை தாக்கி, கற்பழித்து விடுகிறார்கள். இந்த சத்தங்கள் மட்டும் இந்திரனின் காதில் விழுகிறது. இதனால் மீரா கோமாவில் விழுகிறார். அந்த நான்கு நபர்கள் யார்? அவருக்கும் மீராவிற்க்கும் என்ன பகை? மீரா மீண்டு வந்தாரா? இந்திரன் என்ன செய்து கண்டு பிடிக்க போகிறார்? இவையெல்லாம் மிக அழகான திருப்பங்களுடனும், அதிர்ச்சிகளுடனும் சொல்லுவது தான் மிச்சக்கதை.

விஷாலின் மிக இயல்பான நடிப்பு இந்த படத்தின் பலம். அடிக்கடி தூங்குவதாகட்டும், இந்த குறையில் இருந்து எப்படி வெளிவருவது என்று யோசிப்பதாகட்டும், மீராவை லவ்வுவதாகட்டும் மிக அசத்தல்.
லக்ஷ்மி மேனனும் தன் பங்கை அழகாக செய்து இருக்கிறார். கோவத்திலும், அழகான காதலிலும் அடுத்த வீட்டு பெண்ணை பார்ப்பது போல் இயல்பு.
ஜகன் வரும் இடங்களில் நல்ல கலகலப்பு. அம்மாவாக வரும் சரண்யா சொல்ல வேண்டுமா? ஃப்ரண்டா? கேள் ப்ரண்டா? என்று கேட்பதாகட்டும், என் பையன் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான் என்று மறை முகமாக சொல்வதிலாகட்டும் அசத்தல்.

திரைக்கதை மிக அருமை. காட்சியை நகர்த்தி இருக்கும் விதமும், அதில் இருந்த விறுவிறுப்பும் அருமை. திரு.திருவை நாம் பாராட்டுவோம்.ஆனால் ஒரு சில இடங்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். பின்னனி இசையை கொஞ்சம் குறைத்திருக்கலாம். சில நேரங்களில் பேசுவது கேட்காத அளவிற்க்கு இசை தூக்கலாக இருந்தது.ரவுடிகளுடன் கதாநாயகி போராடும் பொழுது, மழை பெய்கிறது. விஷாலுக்கு தண்ணீரில் தூக்கம் வருவதில்லை என்பது தெரிந்த நாயகி, அவரை மழையில் தள்ளி இருக்கலாம். இப்படி சின்ன சின்ன ஓட்டைகளை தவிர்த்திருக்கலாம்.

இசை ஜி.வி. பிரகாஷ். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஓ பெண்ணே!!, இதயம் உன்னை தேடுதே பாடல்கள் பரவாயில்லை.

மொத்தத்தில் நான் சிகப்பு மனிதன், கொஞ்சம் நிறமாற்றம்.

நீங்களும் படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நன்றி
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!
 

No comments: