Thursday, July 10, 2014

முண்டாசுப்பட்டி திரைவிமர்சனம் (Mundasupatti Tamil movie review)

அன்புள்ள நண்பர்களே!!
   வணக்கம். நலம்தானே? நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. சிலப் படங்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். சிலப் படங்கள் சிரிக்க மட்டும் வைக்கும். அந்த வரிசையில் சிரிக்க வைக்கும் படந்தாங்க இது. வாங்க முண்டாசுப்பட்டிக்கு போகலாம். ஹி ஹி வாங்க முண்டாசுப்பட்டி படத்துக்கு போகலாம்.
  1982 ல நடக்குற ஒரு காமெடி கலந்த காதல் கதைதாங்க இது. கோபி (விஷ்ணு விஷால்) புகைப்படம் எடுப்பவர். அவருடைய உதவியாளர் அழகுமணி( காளி வெங்கட்). இவர்கள் இருவரும் ஒரு பள்ளிக்கு புகைப்படம் எடுத்துக் கொடுக்க போகிறார்கள். அனைத்து மாணவிகளும் படம் எடுக்க செல்கிறார்கள்.  கோபி ஏதோ எடுக்க பள்ளிக்குள் செல்ல, அங்கே ஒரு மாணவி கலைவாணி ( அதாங்க நந்திதா)  மட்டும் இருக்கிறார். அவரைப் பார்த்தவுடன் நம்ம கோபிக்கு காதல் வந்துருதுங்க ( நெனைச்சேன்னு நீங்க முனுமுனுக்கறது கேட்குது). புகைப்படத்தைக் கொடுக்க செல்லும் பொழுதுதான் தெரிய வருகிறது. கலைவாணிக்கு அடுத்த வாரம் திருமணம் என்பது. இவருடைய கடைக்கு ஒருவர் வந்து, எங்க ஊருக்கு வந்து சாகக் கிடக்கும் தலைவரை, இறந்த பிறகு புகைப்படம் எடுக்க கேட்கிறார்கள். இவர்களும் ஊருக்கு போகிறார்கள். அந்த ஊரைப் பொருத்தவரை உயிருடன் இருக்கும் யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை.  காரணம் 1947 ல்  ஆங்கிலேயர் ஒருவர் இவர்கள் ஊருக்கு வந்து புகைப்படம் எடுக்கும் பொழுது சிலர் இறந்து விடுகிறார்கள். அதற்க்கு முன்பே நோய் ஒன்று அந்த ஊரைத்தாக்கி இருப்பது தெரியாமல், இவர் புகைப்படம் எடுத்ததனால்தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.அதிலிருந்து இறந்தப் பிறகே ஒருவரைப் புகைப்படம் எடுக்க அனுமதிப்பார்கள்.



    கோபிக்கு அங்கே போனப் பிறகுதான் தெரிய வருகிறது ஊர்த்தலைவர் கலைவாணியின் தாத்தா என்று. அப்புறமென்ன ஊர்த்தலைவர் இன்னும் இறக்காத நிலையில், இறந்த பிறகு படம் எடுத்து கொடுத்து விட்டு செல்ல ஒப்புக்கொள்கிறார் கோபி. கலைவாணியின் கல்யாணமும் நிறுத்தி வைக்கப்படவே, இவரின் மனதை மாற்றி தன் காதலை சொல்ல நினைக்கிறார் கோபி. இந்த ஊரில் வானமுனி என்று விண்கல்லை கடவுளாக நினைத்துக் கும்பிடுகிறார்கள். அந்த விண்கல்லில் நிறைய முக்கியமான கனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்தாலும், அதைப்பற்றி ஆங்கிலேயர்களுக்கு எழுதாமல் விட்டுவிடுகிறார் புகைப்படம் எடுத்த வெள்ளைக்காரர்.
  
    வானமுனி சொல்படிதான் எல்லாம் நடக்கிறது. இதற்க்கிடையில் தாத்தா இறந்துவிட, புகைப்படம் எடுத்துக் கொண்டு ஊருக்கு வருகிறார்கள். வந்து பார்த்தப் பின்னாடிதான் தெரிய வருகிறது படம் சரியாக விழவில்லையென்று. புகைப்படம் இல்லையென்று சொன்னால் நிச்சயம் தண்டனைதான். முனிஷ்காந்த் என்ற சினிமா ஆசைக் கொண்டவரை வைத்து படம் எடுத்து கொடுத்து விடுகிறார்கள். முனிஷ்காந்தின் சித்தப்பாதான் இறந்தவர் என்று தெரிந்துவிட, இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். வானமுனியின் கட்டளைப்படி என்ன தண்டனை கொடுத்தார்கள்? கலைவாணியிடம் காதலை சொன்னாரா? கலைவாணி ஏற்றுக்கொண்டாரா? இதையெல்லாம் தாங்க மீதிக்கதை.


    படத்தின் சிறப்பம்சம், கொஞ்சமும் முகம் சுழிக்க வைக்காத திரைக்கதை. காட்சிக்கு, காட்சி காமெடி. எந்த வித ஆபாச பாடல்களோ, காட்சிகளோ இல்லாதது. இதற்க்காக இயக்குநர் திரு ராம் அவர்களை பாராட்டுவோம். இவர் நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சி மூலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலக் குளறுபடிகள், அழகுமணி கோபியை சில நேரம் வாங்க, போங்க என்பதும், சில நேரங்களில் வா, போ என்பதும் வித்தியாசம். சில காட்சிகள் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் படம் கண்டிப்பாக மக்கள் மனத்தில் இடம் பிடிக்கும்.

   நடிகர் விஷ்ணு கதையறிந்து நடித்திருக்கிறார். ஆனால் என்ன அவர் 80களில் வரும் தலை முடிதான் இவருக்கு கொஞ்சம் சேரவில்லை. மற்றபடி தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார். நந்திதாவின் கிராமப்புற தவணி அழகை சொல்லியே ஆக வேண்டும். தனது பயந்த சுபாவம் ஆகட்டும், வெட்கப் படுவதாகட்டும் எல்லாமே அசத்தல். 80ல் என்றாலே ஞாபகத்திற்க்கு வருவது இளையராஜா இசை, தாவணி, டாலர் போட்ட செயின், மூட நம்பிக்கைகள் இன்னும் பல. இதையெல்லாம் நாம் இப்படத்தில் பார்க்கலாம்.

  இவர்களைத் தாண்டி இன்னும் முக்கியமான கதாபாத்திரங்கள் அழகுமணி மற்றும் முனிஷ்காந்த். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க முடியாது. இவர்களைத் தவிர பூனை சூப், வான முனி, சாமியார், மீசைக்காரர், அவரின் மனைவி, இருசக்கர வாகனம், பள்ளிக்கூடம், மூட நம்பிக்கை மிக முக்கியமாக புகைப்படக் கருவி(கேமரா) இவை அனைத்தும் மிக்கிய பங்கை வகிக்கின்றது.

 இசை சீன் ரோல்டன்(Sean Roldan). சிலப் பாடல்கள் இனிமையாக உள்ளது. குறிப்பாக இது என்ன, ராசா மகராசா பாடல்கள்.

மொத்தத்தில் முண்டாசுப்பட்டி, முழுக்க சிரிப்புப்பட்டி.

நீங்களும் படத்தைப் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

மீண்டும் சந்திப்போமா?

நன்றி. வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!



No comments: