Thursday, March 01, 2018

மகிழ்ச்சியான வாழ்வுக்கு வேதாத்திரி மகரிஷியின் 18 தத்துவங்கள்!



வேதாத்திரி மகரிஷி, தனது தத்துவங்கள் மூலமாக, ஆன்மிக தேடலுக்கும்,
அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறார். இவரது ஆன்மிக
தத்துவங்கள் அறிவியலையும் உள்ளடக்கி இருப்பது தனிச்சிறப்பு.
கடல் அலை எழுவதை பார்க்கிறோம். அலை என்பது நீரின் அசைவு. அலை என்னும்
இயக்கத்தை நிறுத்திவிட்டால், மீதம் இருப்பது நீர் மட்டுமே. நீர் என்பதே
மூலம். அலை என்பது தோற்றம். கடல் என்ற மூலத்தின் சிறப்பு நிலையே அலை.
இதைப்போலவே இந்த பிரபஞ்சத்தின் இயக்கங்களை நிறுத்திவிட்டால், எஞ்சி
இருப்பது இறைநிலை மட்டுமே என எளிய உதாரணத்தோடு விளக்குகிறார். அண்டவெளியே
இறைவன் என்கிறார்.
மனித உறவுகள் மேம்பட மகரிஷி கூறிய தத்துவங்கள் மிகவும் சிறப்பு மிக்கவை.
1. பேச்சிலும் நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையற்ற
மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
2. பிரச்னைகள் ஏற்படும்போது மற்றவர்கள் முதலில் இறங்கி வர வேண்டும் என
காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். யாரையும்
ஒப்பிடாதீர்கள்.
3. எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ
இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
4- புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை கூறவும் கூட நேரம்
இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
5. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
6. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
7. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
8. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து
கர்வப்படாதீர்கள். தயக்கத்துடனும் பயத்துடனும் பேசாமலும் இருக்காதீர்கள்.
9. மற்றவர் கருத்துகளை, செயல்களை, நிகழ்ச்சிகளையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
10. உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கு கேட்டதை அங்கு
சொல்வதையும் அங்கு கேட்டதை இங்கு சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி
அது ஒருநாள் திரும்பும்.
11. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதிடாதீர்கள். நீங்கள்
முடியவே முடியாது என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்.
12.. உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்
கொள்ளுங்கள். பிடிவாதத்தை கைவிடுங்கள்.
13. அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது
எல்லாவற்றிலும் மிக முக்கியம்.
14. அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை
விடுங்கள்.
15. எந்த விஷயத்தையும் பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.
16. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை
மனதார உணருங்கள்.
17. 'நானே பெரியவன் நானே சிறந்தவன்' என்ற அகந்தையை விடுங்கள்.
வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.
18. மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை
பயன்படுத்தவும் தவறாதீர்கள் என்கிறார் மகரிஷி.
வாழ்க வளமுடன் என ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது பலவீனம் நீங்குவதோடு,
வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது என்கிறார் மகரிஷி.

No comments: