Saturday, May 04, 2013

எதிர்நீச்சல் திரைவிமர்சனம் ( Ethir Neetchal Movie Review)


  எதிர்நீச்சல் திரைவிமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!

    வணக்கம். நலம்தானே?  மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. எதிர்நீச்சல் என்ற ஒரு படம் K பாலசந்தர் அவர்களால் இயக்கப்பட்ட ஒரு படம். அருமையான வரவேற்ப்பை பெற்று இன்றும் நீங்கா இடம் பெற்ற படம் என்றால் அது மிகையல்ல. எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத அந்த படத்தின் புது வடிவமாக இருக்குமோ என்றால் அதுதாங்க இல்லை. இது ஒரு புது நீச்சல்.ஆனால் எதிர்நீச்சல் :) .சரி வாங்க படத்துல நீந்தலாம், மன்னிக்கவும் அலசலாம் :).

  காலம் காலமாகவே பெயர் வைக்கும் முறையில் உள்ள ஒரு பழக்கம் முன்னோர்களின் பெயர்களையோ அல்லது குல தெய்வத்தின் பெயரை வைப்பதோ பல குடும்பங்களில் உள்ள முறை. அந்த மாதிரி பெயர்களை வைப்பதால் இந்த தலைமுறை கொஞ்சம் கஷ்டங்களை சந்திக்கத்தான் செய்கிறது. அதுவும் பெயர் சுருக்கமும் அதிகமாக உள்ளதால், பெருங்கஷ்டம்தான். அந்த மாதிரி ஒரு பெயராலும், பெயர் சுருக்கத்தாலும் நம் கதாநாயகன் அடையும் கஷ்டமும், பெயரில் ஒன்றுமே இல்லை எல்லாம் நாம் செய்யும் செயலில்தான் இருக்கிறது என்ற கருத்தையும் சும்மா நச்சுன்னு சொல்லும் படம்தாங்க எதிர்நீச்சல்.

 குஞ்சுதபாதம் ( சிவகார்த்திகேயன்) சிறு வயது முதலே இந்த பெயரால் பல அவமானங்களை அடைகிறார். நண்பர்கள் இவரை குஞ்சி என்று செல்லப்பெயரோடு வேறு கூப்பிட கூச்சம் பிடுங்கி தின்கிறது.இதனால் இந்த பெயரை மாற்றினால்தான் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடிக்கிறான். ஆனால் அம்மாவுக்கு உடல் நலக் குறைவு வருவதால் பெயரை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் இவர் படும் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகிறார். பின்னாளில் தாயார் இறந்ததும் பெயர் மாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார். இவர் பெயர் மாற்றம்(ஹரிஷ்) செய்த உடனே கீதா(ப்ரியா ஆனந்த்) என்ற பெண்ணை சந்திக்கிறார். காதலிலும் விழுகிறார்(காதல் குளம் இல்லாமலா நீச்சல் :))

   இவரின் பழைய பெயரை மறைத்து இவர் அவரை காதலிக்கிறார். அது பின்னாளில் தெரிய வர ஏதாவது செய்து உன் திறமையை இந்த உலகிற்க்கு புரிய வை என்று சொல்லிவிடுகிறார். அதனால் தன் பழைய திறமைகளை தூசு தட்டி தன்னை மாரத்தானில் ஐக்கிய படுத்திக் கொள்கிறார். அங்கே இவருக்கு வழிகாட்டியாக வருகிறார் வள்ளி(நந்திதா). சிறந்த வீராங்கனையான இவர் ஊதுபத்தி விற்று பிழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த விளையாட்டிற்க்கும், வீரர்களின் திறமைக்கும் பின்னாள் என்ன என்ன சதி வேலைகள் நடக்கிறது போன்றவை இவரது பின்கதையில் கணமாக காண்பிக்கப்படுகிறது.

 சிவகார்த்திகேயனுக்கு இது மீண்டும் ஒரு நல்ல வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். காதலில் வழிவதிலும் சரி, தன் பெயரால் படும் தர்மசங்கடமும் சரி, பின்பாதியில் வென்று காட்ட வேண்டும் என்று வெறி கொள்வதிலும் சரி தேர்ச்சி தெரிகிறது.  எழுதி இயக்கி இருப்பவர்  துரை செந்தில்குமார். படம் முழுவதிலும் நிறம்பி வழியும் நகைச்சுவையும், ஒரு கருத்தோடு கதை சொன்ன விதமும் நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. ஆனால் தேவையே இல்லாமல் தனுசும், நயன்தாராவும் ஆடிப்பாடுவது கொஞ்சம் ஒட்டவில்லை. இதை தவிர்த்திருக்கலாம்.

 தன் பெயரை மாற்றிக் கொள்ள முடிவெடுக்கும் பொழுது ஒரு ஜோசியரை(மனோபாலா) சந்திக்கும் இடத்தில், நல்ல கலகலப்பு. இங்கே சுவாமிநாதனை சந்திக்கிறார். இவரும் தன்னுடைய பெயர்(பாவாடை சாமி) புலம்பலை சொல்ல, அப்படி ஒரு சிரிப்புதான் போங்க :)


 கதாநாயகியாக பிரியா ஆனந்த். LIC agent இருக்கேன் நீங்க ஒரு பாலிசி போடுங்களேன் என்று சொல்லும் பொழுதும், அவருடன் ஆடிப்பாடும் பொழுதும் கொஞ்சமும் குறையாமல் தன் பங்கை செய்திருக்கிறார்.

 கோச்சாக வரும் நந்திதா, அழுத்தமும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கும் துணிவும் நிச்சயம் ஒரு ஓ போடலாங்க. அழுத்தமான மிகவும் கணமான கதாபாத்திரம் மிகவும் உணர்ந்து செய்திருக்கிறார்.



Directed byR. S. Durai Senthilkumar
Produced byDhanush
Written byR. S. Durai Senthilkumar
Screenplay byR. S. Durai Senthilkumar
Story byR. S. Durai Senthilkumar
StarringSivakarthikeyan
Priya Anand
Nandita
Music byAnirudh Ravichander
CinematographyVelraj
Editing byKishore Te.

சதிஷ், மனோபாலா, ஜெயபிரகாஷ், ரவி பிரகாஷ், மதன்பாப் மற்றும் பலர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள். இசை அனிருத். பாடல்களுக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள். தயாரிப்பு தனுஷ் அவர்கள்.

எப்பொழுதுமே மனிதன் வெற்றி பெருவதைத்தான் விரும்புவான். அதுவும் விளையாட்டில் வெற்றி என்றால் அனைவரும் விரும்புவோம். அந்த யுக்தியை இங்கே பயன்படுத்திய விதமும், காசும் பணமும் இருந்தால் திறமை உள்ளவன் பின் தள்ளப்படுகிறான் என்ற செய்தியும், பெயரில் மட்டும் இல்லை உன் பயணம், உன் செயலிலும் இருக்கிறது என்ற ஒரு பெரும் உண்மையும் சொல்லும் படம். எதிர் நீச்சல் , கண்டிப்பாக கரையேற்றம்.

மீண்டும் சந்திப்போமா?

நன்றி!! வணக்கம்!!
வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன் !!
















 

No comments: